Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சொத்து வரி: கோயம்பேடு வியாபாரிகளுடன் பேச்சு நடத்த முடிவு

Print PDF

தினமணி           27.08.2013

சொத்து வரி: கோயம்பேடு வியாபாரிகளுடன் பேச்சு நடத்த முடிவு

கோயம்பேடு கடைகளுக்கு சொத்து வரி விதிப்பது தொடர்பான பிரச்னை குறித்து விவாதிக்க வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகள் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும் என்று அவற்றின் உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. மேலும் கடந்த 16 ஆண்டுகளாக செலுத்தாத வரி பாக்கியையும் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், வியாபாரிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்தது. ஆனால் இதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் வியாபாரிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் மண்டல அளவிலான அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி            26.08.2013

மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை

விருதுநகர் நகராட்சியில் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மணி தெரிவித்தார்.

   விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மா. சாந்தி தலைமையில்  நடைபெற்றது. ஆணையாளர் மணி துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: நகராட்சி விநியோகிக்கும் குடிநீரை சிலர்  மோட்டார் வைத்து எடுத்து வருகின்றனர். இதனால் எல்லாப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் கிடைப்பது இல்லை. 15,16 ஆகிய வார்டுகளில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பை 18ஆவது வார்டுக்கும் சேர்த்து கொடுத்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட இடத்தை பொறியாளர்கள் நேரில் பார்த்த பிறகு திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். நடுநிலைப்பள்ளியில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில், இரு வகுப்பறைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது கவனிக்கப்பட்டதா? என்று கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

  மேலும் பிரசவ மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மருத்துவர்கள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. கட்டில்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே விரைவில் மருத்துவர் நியமிக்கப்படவேண்டும். கட்டில்கள் மாற்றப்பட வேண்டும்.பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக பெண்கள் குழந்தைகளுடன் வந்து காத்திருக்கின்றனர். இச்சான்றிதழ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  பயன்படாமல் உள்ள நகராட்சி வாகனங்களை ஏலம் விட வேண்டும். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு அதைப் பெற்றதற்கான ரசீது வழங்க வேண்டும்.

    பழைய பஸ் நிலையத்தில் உள்ளே, வெளியே செல்லும் வழிகள் குறுகியதாக இருப்பதால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே அப்பாதையை அகலப்படுத்த வேண்டும்  என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    தலைவர் மா.சாந்தி: வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் பகுதியில் நேரடியாகச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே  திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்.

   பிரசவ மருத்துவமனைக்கு விரைவில் மருத்துவரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிறப்பு- இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்தில் கணிப்பொறி பழுதாக உள்ளது. இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது உடனடியாக சரி செய்யப்படும்.

ஆணையாளர் மணி: குடிநீரை  மோட்டார் வைத்து எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடிநீர் விநியோகம் சீராக்கப்படும்.

  பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ரசீது வழங்குவதற்கு தகவல் மையம் தொடங்கப்படும். சில பிரச்னைகளால் நகராட்சி வாகனங்களை ஏலம் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் வரவு- செலவு திட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

பொது ஒதுக்கீடு இடம் ஆக்கிரமிப்பு: கோவை மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்

Print PDF

தினத்தந்தி            24.08.2013 

பொது ஒதுக்கீடு இடம் ஆக்கிரமிப்பு: கோவை மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்

கோவை ராமநாதபுரம் பகுதியில் பொது ஒதுக்கீட்டு இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் லதா விளக்கம் அளித்துள்ளார்.

ஆணையாளர் விளக்கம்

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் நகரளவு எண் 4189 டி.எஸ்.பிளாக் 42, டி.எஸ்.வார்டு ஜே (10) நேரு நகர் அங்கண்ணன் லே-அவுட் 80 அடி சாலை மேற்கு பகுதி ராமநாதபுரம் பகுதியில் நகர் ஊரமைப்பு துறையால் மனைப்பிரிவு அங்கீகாரம் செய்யப்பட்டு பொது ஒதுக்கீடு இடம் 28 சென்ட் (1138 சதுர மீட்டர் பரப்பளவு) கோவை மாநகராட்சிக்கு சொந்தமானதாகும்.

மேற்கண்ட 1138 சதுர மீட்டர் பரப்பளவு பொது ஒதுக்கீடு இடம் அரசு நகரளவை ஆவணங்களின்படி கோவை மாநகராட்சி ஆணையரின் பெயரில் நில உரிமை பதிவுகள் உள்ளது.

தள்ளுபடி

ஆர்.எம்.பழனிச்சாமி என்பவர் கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு எதிராக மேற்கண்ட பொது ஒதுக்கீடு இடம் தனக்கு சொந்தமானது என்று உத்தரவிடும்படியும் பொது ஒதுக்கீடு இடம் என வரையறை செய்யக்கூடாது எனவும் மாவட்ட முன்சிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கில் கோவை மாநகராட்சி தரப்பில் அனைத்து ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து வாதாடப்பட்டது. நேரடி சாட்சியமும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

மாவட்ட முன்சீப் நீதிமன்றம் 30.4.2013 அன்று அளித்த தீர்ப்பில் மேற்கண்ட மனுதாரரின் வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் மனுதாரருக்கு தடை உத்தரவு வழங்க இயலாது என்று தீர்ப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான மேற்கண்ட பொது இடத்தில் ஆக்கிரமிப்புதாரரால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தடுத்து நிறுத்தி, கோவை மாநகராட்சிக்கு சொந்தமானது என்று பெயர் பலகை அமைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்பதற்கு வரிவிதிப்பினை ரத்து செய்யவும், குடிநீர் இணைப்பு எண் 91392-யை துண்டிப்பு செய்யவும் மின் இணைப்பு எண் 936/என் டி துண்டிப்பு செய்யவும் ஆக்கிரமிப்புதாரர் மீது நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு உதவி ஆணையாளர்(மத்திய மண்டலம்) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகார்

கோவை மாநகராட்சி சார்பில் காவல்துறை ஆய்வாளர் நில அபகரிப்பு தடுப்பு துறைக்கு 30.7.2013-ல் ஆக்கிரமிப்புதாரர் தனபால் மற்றும் ஆர்.எம்.பழனிச்சாமி மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர், துணை ஆணையாளர்கோவை மாநகர காவல் மற்றும் காவல் துறை ஆணையாளருக்கு புகார் கடித நகல் 30.7.2013-ல் சமர்ப்பிக்கப்பட்டு உரிய ஒப்புகை பெறப்பட்டுள்ளது. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கோவை மாநகர காவல் துறையிடமிருந்து நடவடிக்கை விவரம் நாளது தேதி வரை எதுவும் பெறப்படவில்லை.

கோவை ராமநாதபுரம் தமிழ்நாடு மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளருக்கு 30.7.2013-ல் ஆக்கிரமிப்புதாரருக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு எண் 936/என் டி துண்டிப்பு செய்யும்படி மாநகராட்சியின் மூலம் கடிதம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாளது வரை துண்டிப்பு நடவடிக்கை விவரம் எதுவும் இந்த அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பெறப்படவில்லை.

வழக்கு

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனபால் என்பவர் கட்டிடம் கட்டுவதை மாநகராட்சியால் தடை செய்தும் அந்த இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் சார்பில் ஆக்கிரமிப்புதாரரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆர்.எம்.பழனிச்சாமி என்பவர் மாவட்ட முன்சிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டதை மறைத்து மீண்டும் ஆணையாளருக்கு எதிராக நடவடிக்கைக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து இடைக்கால தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இறுதி தீர்ப்பு

மேற்கண்ட வழக்கில் ‘ஸ்டேட்டஸ் கோ’ நிலை நிறுத்தும்படி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக மாநகராட்சி வக்கீல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கோவை மாநகராட்சி தரப்பில் அனைத்து ஆவணங்களுடன் எதிர்வாத உரை தாக்கல் செய்து 21.8.2013-ல் வாதிடப்பட்டது. மாநகராட்சி வக்கீல் மேற்கண்ட வழக்கு 27.8.2013 அன்று இறுதி தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது என்பதை தெரிவித்துள்ளார்.

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியது மட்டுமல்லாமல்,வேண்டுமென்று பொய்யான தகவலினை அளித்து மனுதாரர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 


Page 119 of 506