Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

எரிவாயு மயானப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

Print PDF

தினமணி             22.08.2013

எரிவாயு மயானப் பணிகளை  ஆய்வு செய்த ஆட்சியர்

அவிநாசி பேரூராட்சி பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைக்கப்படும் நவீன எரிவாயு மயானப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

 அரசு சமன்பாட்டு நிதி ரூ.53 லட்சம், பொதுமக்கள் பங்களிப்பு ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு மயானம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பில் தியான மைய கட்டுமானப் பணிகள் 6 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

 இதைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், மணல் மற்றும் செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு அவிநாசி வ.உ.சி. காலனிப் பகுதியில் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

 பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி, செயற் பொறியாளர்கள் உடன் சென்றனர்.
 

மாநகராட்சி 1ம்தேதி முதல் அமல் பிளாஸ்டிக் குப்பை தந்தால் குலுக்கலில் தங்க நாணயம்

Print PDF
தினகரன்             22.08.2013

மாநகராட்சி 1ம்தேதி முதல் அமல் பிளாஸ்டிக் குப்பை தந்தால் குலுக்கலில் தங்க நாணயம்


சென்னை:  மாநக ராட்சியில் பிளாஸ்டிக் குப்பையை வழங்கும் பொது மக்களுக்கு குலுக்கல் அடிப்படையில் தங்க நாணயம் வழங்கும் திட்டம் வரும் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் விக்ரம்கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

திடக்கழிவுகளிலிருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை (குப்பையை) பொது மக்கள் பங்களிப்புடன் பிரித்தெடுக்க மாநகராட்சி புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் குப்பையை பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டும் பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசாக வழங்கும் திட்டத்தை மாநகராட்சி சமீபத் தில் அறிவித்தது. இத்திட்டம் வரும் 1ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்தப் படவுள்ளது.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும் வாரத்தில் புதன் மற்றும் சனி கிழமைகளில் காலை 9.00மணி முதல் 5.00மணி வரை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி ஊழியரிடம் வழங்கவேண் டும். ஒவ்வொரு கிலோ பிளாஸ்டிக் குப்பையின் கவரில் சம்பந்தப்பட்ட உதவிசெயற்பொறியாளர் கையெழுத்திட்டு,   பொது மக்களுக்கு டோக்கன் வழங்குவார். ஒவ்வொரு வார்டிலும், ஒவ்வொரு மாதமும் பிளாஸ்டிக் குப்பையின் மொத்தஅளவு 500 கிலோவிற்கு அதிகமாகும் போது, அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் புதன்கிழமையன்று குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு, அரை கிராம் தங்க நாணயமும், அடுத்து 5 பேருக்கு கைகடிகாரமும் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.
 

மாநகராட்சி மின் பராமரிப்பு பணிகள்...தனியார் மயம்! 35% செலவை குறைக்க நடவடிக்கை

Print PDF

தினமலர்              22.08.2013

மாநகராட்சி மின் பராமரிப்பு பணிகள்...தனியார் மயம்! 35% செலவை குறைக்க நடவடிக்கை


ஈரோடு: கோவை, மதுரையை தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சியில் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையாக, தெரு விளக்குகள் பராமரிப்பு பணியை, கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.

ஈரோடு மாநகராட்சி, நான்கு மண்டலங்கள், 60 வார்டுகள், 109.52 சதுர கி.மீ., பரப்பளவில், ஐந்து லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சியாக தரம் உயர்த்தும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பகுதியில், 18,439 தெரு விளக்குகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஹைமாஸ் கோபுரங்கள், சோடியம் விளக்குகள், டியூப் லைட்டுகள், சி.எஃப்.எல்., பல்புகள் கொண்ட விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன.

மாநகராட்சியில் ஆண்டுதோறும் தெரு விளக்குள் பராமரிப்பு பணிக்கு, 18.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

புறநகர் பகுதியிலும், மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளிலும், ஆறு மாதம் முதல், ஓராண்டுகள் தெருவிளக்குள் இன்றி, வெறும் கம்பங்களும், பழுதடைந்த மின் விளக்குள் பராமரிப்பு இன்றி உள்ளது.

பொதுமக்கள், கவுன்சிலர்கள் மூலம் தெரிவிக்கும் புகார்கள், "செவிடன் காதில் ஊதிய சங்காகவே' இதுநாள் வரையிலும் இருந்து வருகிறது.

மண்டலங்கள் தோறும், மூன்று பேர் கொண்ட குழு, நாளொன்றுக்கு, 130 முதல், 200 ரூபாய் தினக்கூலி அடிப்படையில் ஆமை வேகத்தில் பணிகளை செய்து வந்தனர்.

தெரு விளக்கு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தனியாரிடம் விட முடிவு செய்தனர். கோவையை சேர்ந்த சல்சர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் தற்போது ஒப்படைத்துள்ளனர்.

நேற்று காலை, பிரப் ரோடு, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் முன், ஒப்படைப்பு விழா, மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. துணை மேயர் பழனிச்சாமி, மண்டலத்தலைவர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சல்சர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர் திருமலைசாமி கூறியதாவது:

சென்னை, கோவை, மதுரையை தொடர்ந்து, ஈரோட்டில் கால்பதித்துள்ளோம்.

மாநகராட்சியில் 35 சதவீதம் மின்சாரம், செலவீனத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகளை கையாள உள்ளோம்.

முதற்கட்டமாக மாநகராட்சியில் தெரு விளக்குகள் எண்ணிக்கை, கம்பங்களிடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு, பயன்பாட்டில் உள்ள, 12,000 டியூப் லைட்டுகளை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படும்.

ஒரு முறை பொருத்தினால், 15 ஆண்டுகள், 50,000 மணி நேரம் எரியக்கூடியதாகும். இதனால், 32 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும்.

நகரில் பயன்பாட்டில் உள்ள சோடியம் விளக்குகளை தானியங்கி கருவி பொருத்தி, இரவு, 11 மணி முதல் காலை, 6 மணி வரையில், 30 சதவீதம் டிம் சப்ளை கொடுக்கப்படும்.

புறநகர பகுதியில், 2,000 புதிய தெரு விளக்குகள் பொருத்தப்படும். ஒட்டுமொத்த தெரு விளக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, கண்ட்ரோல் அமைத்து, கணினி மயமாக்கப்படும்.

ஊழியர்களுக்கு சி.யு.ஜி., மொபைல்ஃபோன்கள் வழங்கி, புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். 21ம் தேதி முதல், மூன்று மாத பரிசோதனை முடிவுக்கு பின், எல்.இ.டி., மின் விளக்கு பொருத்தும் பணி துவங்கும், என்றார்.

Last Updated on Thursday, 22 August 2013 07:04
 


Page 121 of 506