Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதியின்றி வைத்துள்ள விளம்பரங்கள் அகற்றப்படும்

Print PDF

தினமணி                20.08.2013

அனுமதியின்றி வைத்துள்ள விளம்பரங்கள் அகற்றப்படும்

சிவகாசியில் நகராட்சியின் அனுமதிபெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அகற்றப்படும் என நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:

 நகராட்சிக்கு சொந்தமான சாலையில், சாலையின் நடுவில் உள்ள டிவைடரில், துளையிட்டு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் விளம்பர தட்டிப்போர்டு வைத்துள்ளனர். மேலும் சாலையில் பல இடங்களிலும் இந்த மருத்துமவனையினர் விளம்பர போர்டு வைத்துள்ளனர். இந்த விளம்பர போர்டுகள் வைப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் நகராட்சியில் அனுமதி பெறவில்லை. எனவே இவை அனைத்தும் அகற்றப்படும். மேலும் நகராட்சியின் சொத்தை தேசப்படுத்தியதாக வழக்குத் தொடரப்படும். இதுபோல நகரின் பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள் அகற்றப்படும் என்றார்.

 

பொது இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ. 500 அபராதம்

Print PDF

தினமணி                19.08.2013

பொது இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ. 500 அபராதம்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என, ஆணையர் ஆர். நந்தகோபால் எச்சரித்துள்ளார்.

  இது தொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள தெருவோரக் கடைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் குப்பை வண்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும்.  

இதைவிடுத்து, பொதுஇடங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

  முதல் தடவை 500 ரூபாயும், இரண்டாவது தடவை 1,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். எனவே, தெருவோரக் கடைக்காரர்கள், வியாபார நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் சேரும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், அவற்றை சேகரித்து, அந்தந்த தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் மாநகராட்சி குப்பை வண்டிகளில் மட்டுமே கொட்டுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகளில் பழைய குடிநீர் குழாய்களை மாற்றியமைக்க ரூ. 247 கோடியில் திட்டம்

Print PDF

தினமணி                19.08.2013

மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகளில் பழைய குடிநீர் குழாய்களை மாற்றியமைக்க ரூ. 247 கோடியில் திட்டம்

மதுரை மாநகராட்சியில் முந்தைய 72 வார்டுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்களை மாற்றிவிட்டு, புதிய குழாய்கள் பதிக்க ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தில் ரூ. 247 கோடியில் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

   இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மதுரை மாநகராட்சியில் தமிழக அரசு பரிந்துரையின்பேரில், ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டம் (ஜே.என்.யு.ஆர்.எம்.) அனுமதிக்கப்பட்டு, முதலாவது திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் விடுபட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

  இத்திட்டத்தின் காலம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையுள்ளது. அடுத்த கட்டமாக, ஜேஎன்யுஆர்எம் 2ஆவது திட்டக் காலம் துவங்கவுள்ளது. இத்திட்டத்துக்கான பணிகள் தேர்வு செய்யப்பட்டு, விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  இத்திட்டத்தில் முதல் கட்டமாக, மதுரை மாநகராட்சியின் முந்தைய 72 வார்டு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்து, பல்வேறு இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு, உடைப்புகள் மூலம் குடிநீர் வீணாகி வருகின்றது. அவ்வப்போது உடைப்புகள் சரிசெய்யப்பட்டாலும், மீண்டும் மீண்டும் உடைப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

  இந்த வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், குழாய்கள் முழுவதும் மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனால், இந்தக் குழாய்களை ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே மேற்கண்ட வார்டு பகுதிகளில் குழாய் உடைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுடன், மேடானப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

  இதைத் தொடர்ந்து, இந்த 72 வார்டுகளிலும் பழைய குழாய்களை மாற்றிவிட்டு, புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கும் திட்டம் ரூ. 247 கோடியில் தயாரிக்கப்பட்டு, இதற்கு நிபுணர்கள் குழு மூலம் விரிவானத் திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது, ஜேஎன்யுஆர்எம் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  மேலும், மாநகராட்சிப் பகுதிகளின் குடிநீர் தேவையை வைகை அணையிலிருந்து நீர் பெறப்பட்டு சுத்திகரிப்பு செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீராக வழங்கும் வைகை குடிநீர் திட்டங்களின் மூலம் சமாளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பிற தேவைகளுக்கு தங்களின் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பொது ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படும் நீரின் மூலம் சமாளிக்கின்றனர்.

   கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் குடிநீர் தேவையை சமாளிக்க இயலாத நிலை காணப்படுகிறது. எதிர்காலத்தில் இதன் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், மதுரை மாநகராட்சி பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள நீர் நிலைகளை பாதுகாத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, நீர் நிலைகளான வண்டியூர் கண்மாய், மாடக்குளம் கண்மாய், வீரமுடையான் முத்துப்பட்டி கண்மாய், எஸ்.கொடிக்குளம் கண்மாய், செல்லூர் கண்மாய் போன்றவற்றை தூர்வாரி கரையைப் பலப்படுத்தவும், கண்மாய்களைச் சுற்றி சுற்றுலாப் பூங்காக்கள் அமைக்கவும், பாதுகாப்பு வேலி அமைக்கவும், மேற்படி கண்மாய்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தினமும் 18 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுப்பதற்கும் ரூ. 147 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

  இதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. விரைவில், இத்திட்டமும் அரசின் ஒப்புதலைப் பெற்று, ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இதேபோன்று, காவிரி குடிநீர் திட்டத்தில் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்துக்கு தனியாகத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

  ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு 2ஆவது திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் பாதாளச் சாக்கடை அமைத்தல், சாலை மேம்பாடு போன்ற பணிகள் செயல்படுத்தத் திட்டங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் ஜேஎன்யுஆர்எம் 2ஆவது திட்டத்துக்கான நிதி அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனத் தெரிவித்தார்.

 


Page 124 of 506