தினமலர் 19.08.2013
வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி மாநகராட்சியில் கணக்கெடுப்பு பணி
சேலம்: சேலம் மாநகராட்சியில், வீடுகளில், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளதா, என்று கணக்கெடுக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு, தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.
தற்போது, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய துவங்கியுள்ளது. தமிழக அரசு, மழைநீர் சேகரிப்பு தொட்டி திட்டத்தை, பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம், பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சியில், புதிய குடிநீர் இணைப்பு, வீட்டு வரி, சொத்துவரி விதிப்பு ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, குறித்த புகைப்படம் கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
மாநகராட்சியின், 60 வார்டுகளிலும், மழைநீர் சேகரிப்பு தொட்டி தொடர்பான கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் மூலம், வீடு வீடாக சென்று, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ள விவரத்தை கேட்டறிந்தும், நேரில் பார்வையிட்டும், சம்மந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் கையொப்பம் பெறப்பட்டு வருகிறது.
மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில் அலட்சியம் காட்டும் பகுதிகளில், விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்வது மற்றும் அதற்கான பூர்வாங்க பணிகளை உடனடியாக துவங்குவதற்õன நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.