மாநகராட்சியில் முதல்கட்டமாக 16 வார்டு துப்புரவு பணி தனியார்மயம் கூடுதலாக 273 பணியாளர் நியமிக்க நடவடிக்கை
Monday, 05 August 2013 11:40
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினகரன் 05.08.2013 மாநகராட்சியில் முதல்கட்டமாக 16 வார்டு துப்புரவு பணி தனியார்மயம் கூடுதலாக 273 பணியாளர் நியமிக்க நடவடிக்கை
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் முதல் கட்டமாக 16 வார்டுகளில் துப்புரவு பணிகள் தனியாருக்கு டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 273 துப்புரவு பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஈரோடு மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டு 60 வார்டுகளுடன் 109.62 சதுர கி.மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தினசரி 350 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என இரு வகைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த குப்பைகள் அனைத்தும் மாநகராட்சிக்கு சொந்தமான வெண்டிபாளையம், வைராபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பைகளில் இருந்து உரமும், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு பிளாஸ்டிக் தார்ச் சாலை அமைக்க தேவையான மூலப்பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை 1,393 துப்புரவு பணியாளர்கள் பணியிடம் நிரப்பப்பட வேண்டும். தற்போது 734 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.
இதனால் 662 துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் அதிகமாக சேர்ந்து அதை அகற்ற முடியாத நிலை இருந்து வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் சுயஉதவி குழுக்கள் மூலமாக 389 பேர் நியமிக்கப்பட்டு துப்புரவு பணியாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இன்னும் கூடுதலாக 273 துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கிடையில், முதல் கட்டமாக ஒவ்வொரு மண்டலத்திலும் 4 வார்டுகள் வீதம் 16 வார்டுகளை துப்புரவு பணியை தனியாருக்கு விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி 1வது மண்டலத்தில் 2, 3, 6, 8 ஆகிய வார்டுகளும், 2வது மண்டலத்தில் 17, 26, 28, 30 ஆகிய வார்டுகளும், 3வது மண்டலத்தில் 31, 33, 34 ஆகிய வார்டுகளும், 4வது மண்டலத்தில் 46, 50, 55, 56 ஆகிய வார்டுகள் தனியார் மூலமாக துப்புரவு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்த வார்டுகள் தனியாருக்கு டெண்டர் விடப்படவுள்ள நிலையில், கூடுதலாக 273 துப்புரவு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இவர்கள் 273 பேருக்கும் மாதந்தோறும் 29 லட்சத்து 56 ஆயிரத்து 590 ரூபாய் ஊதியம், ஈபிஎப், ஈஎஸ்ஐ, சர்வீஸ்டேக்ஸ், நிர்வாக கட்டணம் ஆகியவற்றிற்கு செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியில் 24 துப்புரவு பணி மேற்பார்வை பணியிடங்களில் 12 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களையும் நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Last Updated on Monday, 05 August 2013 11:45
|
கட்டிடம் கட்ட 7 நாளில் அனுமதி மாநகராட்சி புதிய திட்டம் அமல்
Monday, 05 August 2013 06:50
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
மாலை மலர் 05.08.2013 கட்டிடம் கட்ட 7 நாளில் அனுமதி மாநகராட்சி புதிய திட்டம் அமல்
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கு 7 நாளில் அனுமதி அளிக்கும் புதிய முறையை மேயர் சைதை துரைசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டுவோர், திட்ட அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்த நாளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏராளமானோர் கட்டிடம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையை சீரமைக்கும் வகையில் ‘பசுமை வழி’ என்ற புதிய திட்டம் மாநகராட்சியால் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தை ரிப்பன் மாளிகையில் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் பெஞ்சமின், மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பசுமை வழி முறையில் விண்ணப்பித்தால், 7 நாட்களுக்குள் திட்ட அனுமதிக்கு ஒப்புதல் பெறலாம். அதாவது, கட்டிடம் கட்டுவதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான ரசீது பெற்றுக் கொண்டால், அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும். அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து சட்டவிதிக்கு உட்பட்டு இருந்தால் 7 நாளுக்குள் அனுமதி வழங்கப்படும்.
கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் நிலத்தடி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள மனைகளுக்கு இந்த முறையில் விண்ணப்பிக்க முடியாது. மேலும் புதிய முறையில் விண்ணப்பிக்கும் மனைகள் காலியாக இருக்க வேண்டும். ரயில்வே எல்லையில் இருந்து 30 மீட்டருக்குள்ளோ, மெட்ரோ எல்லையில் இருந்து 50 மீட்டருக்குள்ளோ உள்ள மனைகள் இந்த புதிய முறையில் விண்ணப்பிக்க முடியாது.
மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
Monday, 05 August 2013 06:31
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 05.08.2013
மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
சென்னை:மண்ணடியில், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்த போது, குடிநீர் குழாயில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதை அடுத்து, அந்த குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மண்ணடி, பவளக்காரத் தெருவில், பல வீடுகளுக்கு குடிநீர் வினியோகமாகவில்லை என, குடிநீர் வாரியத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதிகாரிகள், தண்ணீர் முறையாக வினியோகமாவதாக தெரிவித்தனர்.
ஆனாலும், பெரும்பாலான வீடுகளுக்கு, 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகமாகவில்லை. இதை அடுத்து, நேற்று காலை, குடிநீர் வாரிய அதிகாரி கள், அந்த பகுதியில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், பவளக்காரத் தெருவில் உள்ள ஒரு வீட்டில், குடிநீர் இணைப்பு குழாயில், மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவது தெரிந்தது.
இதனால், மற்ற வீடுகளுக்கு தண்ணீர் செல்லாமல் தடைப்பட்டுள்ளது. இதை அடுத்து, தண்ணீர் திருட்டு நடந்த வீட்டில் இருந்த குடிநீர் இணைப்பு குழாயை, குடிநீர் வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தண்ணீர் திருட்டு நடந்த வீட்டில் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மூன்று மாதத்திற்கு பின் தான் அவர்கள் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அதுகூட பரிசீலனைக்கு பிறகே கிடைக்கும். திருட்டு தொடர்பாக மற்ற வீடுகளிலும் ஆய்வு நடத்தப்படும்’ என்றார்.
பவளக்காரத் தெருவை போல், ராமசாமி தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியிலும் குடிநீர் திருட்டு நடப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும், அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
|
|
|
|
Page 132 of 506 |