Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு அருகேயுள்ள பாட்டில்களை தரம் பிரிக்கும் நிறுவனங்களுக்கு ‘சீல்’

Print PDF

தினத்தந்தி         30.07.2013 

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு அருகேயுள்ள பாட்டில்களை தரம் பிரிக்கும் நிறுவனங்களுக்கு ‘சீல்’

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு வெள்ளலூரில் உள்ளது. இங்கு சிலர் மருத்துவக்கழிவுகளை கொட்டுவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து அங்கு கொட்டப்படும் கழிவுகளை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு சென்றனர். பின்னர் குப்பைக்கிடங்கை சுற்றிலும் உள்ள பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு ஏராளமான பாட்டில்களை தரம் பிரிக்கும் சிறிய நிறுவனங்கள் இயங்கி வருவதை கண்டுபிடித்தனர். உடனே அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அந்த நிறுவனங்கள் முறையான அனுமதியில்லாமல் இயங்கி வருவதும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. அதன்பேரில் அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் லதா கூறும்போது, ‘வெள்ளலூர் குப்பைக்கிடங்கு அருகே மருந்து பாட்டில்களை தரம் பிரித்து விற்பனை செய்யும் 9 நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. இது அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்ததால் அந்த நிறுவனங்கள் சீல்வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

 

பல்லாவரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை மீட்க தீவிர நடவடிக்கை நகராட்சித்தலைவர் உறுதி

Print PDF

தினத்தந்தி         30.07.2013 

பல்லாவரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை மீட்க தீவிர நடவடிக்கை நகராட்சித் தலைவர் உறுதி

பல்லாவரம் நகராட்சி பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நகராட்சி நிலங்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் நிசார் அகமது தெரிவித்தார்.

நகராட்சி கூட்டம்

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி கூட்டம் தலைவர் கே.எம்.ஆர்.நிசார் அகமது தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், பொறியாளர் சீனிவாசன், நகரமைப்பு அலுவலர் மாறன், வருவாய் அலுவலர் குணசேகரன் மற்றும் அதிகாரிகளும், கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

பூங்கா ஆக்கிரமிப்பு

கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் பதிஈசன், ‘‘பல்லாவரம் நகராட்சிக்கு சொந்தமான சிறுவர்பூங்கா அஸ்தினாபுரம் சிவகாமி நகர் 2–வது தெருவில் தனியார் ஆக்கிரமிப்பின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் ஏதாவது காரணம் கூறி காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையில் நகரமமைப்பு அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனபோக்கோடு நடந்தால் முதல்–அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் செய்வேன்’’ என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த நகராட்சி தலைவர் நிசார் அகமது, ‘‘பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் பழைய லேஅவுட்களில் நகராட்சிக்கு வழங்கப்பட்ட இடங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக நகரமைப்பு பிரிவு அதிகாரிகள். கவுன்சிலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

கொசு உற்பத்தி

தி.மு.க. உறுப்பினர் தனசேகரன் பேசும்போது, மழைக்காலத்தில் கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதால் தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ரூ.25 லட்சம் செலவில் சுபம் நகர் பூங்காவையும், ரூ.10 லட்சம் செலவில் பி.பி.ஆர் நகர் பூங்காவையும் அபிவிருத்தி பணிகள் செய்வது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய 7 பழைய இரும்புக் கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி                30.07.2013 

மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய 7 பழைய இரும்புக் கடைகளுக்கு சீல்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய 7 பழைய இரும்புக் கடைகளுக்கு மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

  வெள்ளலூர் குப்பைக் கிடங்குப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 3 முறை மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக விசாரிக்க சுகாதாரப் பிரிவு அலுவலர், மேற்பார்வையாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.

  தனியார் நிறுவனத்திடம் இருந்து 20 டன் மருத்துவக் கழிவுகளை 7 பழைய இரும்புக் கடையினர் வாங்கியுள்ளனர். அதிலிருந்து இரும்பு தொடர்பான பொருள்களைப் பிரித்தெடுத்துவிட்டு எஞ்சியவற்றை குப்பைக் கிடங்கில் கொட்டி வந்தனர்.  இக்கடைகள் நபி நகர், வடிவு நகர் பகுதியில் உள்ளன. மாரிச்செல்வனுக்குச் சொந்தமான 2 கடைகள்,  ரத்தினசாமி, கணேஷ், சிவமணி, ஆனந்த், முத்துபாண்டி ஆகியோருக்குச் சொந்தமான தலா ஒரு கடைகள் ஆக மொத்தம் 7 கடைகளுக்கு சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

 வெள்ளலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுச் செயலர் கே.எஸ்.மோகன் கூறுகையில், சீல் வைத்தவுடன் நடவடிக்கை நின்றுவிடக் கூடாது; தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 


Page 137 of 506