Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்போரிடம் கையெழுத்து பெற வேண்டும் பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக தருபவர்களுக்கு தங்க நாணயம் மன்ற கூட்டத்தில் மேயர் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி             27.07.2013

துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்போரிடம் கையெழுத்து பெற வேண்டும் பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக தருபவர்களுக்கு தங்க நாணயம் மன்ற கூட்டத்தில் மேயர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள், தெருக்களில் குடியிருப்பவர்களிடம் இருந்து கையெழுத்து பெற வேண்டும். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவில் நேரடியாக மாநகராட்சியிடம் தருபவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்று மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

மாநகராட்சி பணிகள் தேக்கநிலை

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது, மாநகராட்சியின் துப்புரவு பணி தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு வருவதில்லை. இதனால் மாநகராட்சி பணிகள் தேக்கநிலை ஏற்பட்டு வருகின்றது. எனவே துப்புரவு மற்றும் சுகாதாரப்பணியை மேற்கொள்ள மாநகராட்சி மூலம் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்களா? என்று 12–வது வார்டு மன்ற உறுப்பினர் ஆர்.வி.தன்ராஜ் கேள்வி எழுப்பினார்.

5 வீடுகளில் கையெழுத்து

இதற்கு மேயர் சைதை துரைசாமி பதில் கூறும்போது, தேவைப்படும்போது, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஊழியர்கள் பணியமர்த்த உரிய ஒப்புதல் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை கண்காணிக்க புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஒரு தெருவை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த உடன் அந்த தெருவில் உள்ள 5 வீடுகளில் குடியிருப்பவர்களிடம் கையெழுத்து மற்றும் செல்போன் எண்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இதனை சம்பந்தபட்ட மாநகராட்சி அதிகாரிகள் சரிதானா? என்று ஆய்வு செய்தபின் அந்த பணியாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டால் உறுப்பினர் கூறும் புகார் முற்றிலும் களையப்படும் என்று கூறினார்.

பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்படுமா?

இதே போன்று 91–வது வார்டு மன்ற உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் தனது கேள்வி நேரத்தின்போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரானுக்கு குறைவான மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கு மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மேலும் இவற்றை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதை தடை செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து மேயர் சைதை துரைசாமி கூறும்போது, சென்னை மாநகராட்சியில் 40 மைக்ரானுக்கு குறைவான மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை குப்பையிலிருந்து தனித்து பெறுவதற்கு எல்லா வார்டுகளிலும் தனியாக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இம்முறையில் தினசரி 1.70 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்து எடுக்கப்படுகிறது.

½ கிராம் தங்க நாணயம் பரிசு

தினசரி உருவாகும் குப்பையில் இருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக 48 மெட்ரிக் டன் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. எனவே அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுத்து சென்னை மாநகராட்சியிடம் வழங்கும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒவ்வொரு வார்டுக்கும் ½ கிராம் தங்க நாணயம் மற்றும் அடுத்த 5 நபர்களுக்கு கைக்கடிகாரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

சட்டப்பூர்வ ஆய்வு

இதன்படி, மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக கொண்டு வந்து தரும் பொதுமக்களுக்கு ஒவ்வொரு கிலோவுக்கும், எண் இலக்கத்துடன் ஒரு டோக்கன் வழங்கப்படும். இதில் ஒவ்வொரு வார்டிலும் அதிக டோக்கன் பெறும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை மூலம் உரிய சட்டப்பூர்வ ஆய்வு செய்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
 

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 74 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Print PDF

தினமணி              27.07.2013

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 74 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மொத்தம் 74 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். ஆணையர் விக்ரம் கபூர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் கணினி உதவியாளர் நியமித்தல், "அம்மா' உணவகங்களில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்துதல், பிளாஸ்டிக் கழிவுகளை அளிப்பவர்களுக்கு தங்கக் காசுகள் அளித்தல் உள்ளிட்ட 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிகளில் கணினி உதவியாளர்: சென்னை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மண்டல மையப் பள்ளிகளில் சம்பள பட்டியல் தயாரிக்கவும், கடிதங்களுக்கு பதில் அளிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு உதவியாக கணினிக் கல்வி பயின்றவர்கள் கணினி உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இதில் 38 மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள், 10 மண்டல மைய பள்ளிகள் என மொத்தம் 80 பள்ளிகளில் 80 கணினி உதவியாளர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 7,000 வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சிப் பள்ளிகளில் பாதுகாப்புப் பணி மேற்கொள்ள காவலர்களை நியமிக்க ஏற்கெனவே உள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தத்தின்படி காவலர்களை நியமிக்க தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இதன்படி, 240 இரவு நேரக் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ. 10,000 ஊதியமாக வழங்கப்படும்.

சமூக நலக்கூடங்களை பாதுகாக்க 162 பேர் உள்பட 216 பணியாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் அளித்தால் தங்கக் காசு: மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்துக் கொடுப்பவர்களுக்கு வார்டுக்கு ஒருவர் என 200 பேருக்கு தலா அரை கிராம் தங்கக் காசுகளும், வார்டுக்கு 5 பேருக்கு தலா ஒரு கைக்கடிகாரமும் வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் முதல் மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ. 18 லட்சம் செலவாகும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 1,065 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல், கொலைகாரன்பேட்டை பகுதியின் பெயரை மாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்களும் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் என்.எல்.சி. நிறுவன பங்குகளை தமிழக அரசே வாங்கும் என்று அறிவித்ததற்கும், காவிரி ஆற்றுப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்க தடை விதித்ததற்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்லூரி கட்டணங்கள் முழுமையாக வழங்க உத்தரவிட்டதற்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய தீர்மானங்கள்...

குப்பையில் இருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், பிளாஸ்டிக் குப்பைகள் வழங்குவோருக்கு தங்கக் காசுகள், கைக் கடிகாரங்கள் வழங்கப்படும்.

ம்பத்தூர் ரயில்வே கிராசிங் எண் 6-க்கு பதிலாக புதிய பாதசாரிகள் சுரங்கப் பாதை கட்டப்படும்.

பிராட்வே பகுதியில் அடுக்குமாடி தானியங்கி வாகன நிறுத்துமிடம் கட்ட அளிக்கப்பட்டிருந்த பணியாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 1,065 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படும்.

மாநகராட்சிப் பள்ளிகளில் 80 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மற்றும் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

"அம்மா' உணவகங்களில் 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஓர் உணவகத்தில் தலா 3 கேமராக்கள் பொருத்தப்படும்.

பழைய வாகனங்களுக்கு பதிலாக 40 கனரக டிப்பர் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.

ராயப்பேட்டை பகுதியில் உள்ள கொலைகாரன்பேட்டை பகுதியின் பெயர் மாற்றப்படும்.

 

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம

Print PDF
தினமலர்        26.07.2013

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம


கோவை:கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் கடைகளின் ஆக்கிரமிப்புகளையும், அனுமதியற்ற கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது. பஸ் ஸ்டாண்டில் இருந்த 11 கடைகளில் முன்பு இருந்த ஆக்கிரமிப்பும், வெளியில் இருந்த 10 கடைகளின் ஆக்கிரமிப்பையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் இருந்த டீ கடையை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் முயன்றபோது, அ.தி.மு.க., கவுன்சிலர் சீதாராமன்; அங்கு வந்து "கட்சிக்காரர் கடை, கொஞ்சம் தயவு காட்டுங்கள்' என, கூறினார். "ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் பார்க்க முடியாது, அனைத்து ஆக்கிரமிப்புகளும் கட்டாயம் அகற்றப்படும்' என, மாநகராட்சி கமிஷனர் லதா கூறினார். இதையடுத்து, இரும்பு பெட்டி டீக்கடைக்காரர் தானே அகற்றிக்கொண்டார்.

பஸ் ஸ்டாண்டில் செயல்படும் மாநகராட்சி வாகனங்கள் நிறுத்தம் இடத்தில், எட்டு மணி நேரத்திற்கு ரூ. 10 வசூலிப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையில், 24 மணி நேரத்திற்கு சைக்கிளுக்கு ரூ. 2, டூவீலர்களுக்கு ரூ. 5 வசூலிக்க வேண்டும்; எனவே, ஒப்பந்ததாருக்கு அபராதம் விதிக்கவும், தொடர் நடவடிக்கை உத்தரவிடப்பட்டது. கட்டண கழிப்பிடங்களில் சிறுநீர், மலம் கழிக்க ஒரு ரூபாயும், குளியலுக்கு ரூ. 3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், "அது'க்கு 5 ரூபாய், குளியலுக்கு 10 ரூபாய் என, கூடுதலாக கட்டணம் வசூலித்ததால், ஒப்பந்ததாரர் முனியாண்டிக்கு 17,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள கட்டண கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சத்து 42,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு கழிப்பிட நுழைவாயிலில் ஒட்டப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது :

பஸ் ஸ்டாண்ட் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதற்காகவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இருப்பதற்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்பு வராதவாறு தொடர் கண்காணிப்பு இருக்கும். பஸ்ஸ்டாண்டில் சேதமடைந்த இருக்கைகள், நடைபாதை, மின் விளக்குகள் பராமரிக்கப்படும். மாதம் ஒரு முறை பஸ் ஸ்டாண்ட் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படும், என்றார்.
 


Page 140 of 506