Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வளர்ச்சிப் பணிகள் தொடரும்: மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி               26.06.2013

வளர்ச்சிப் பணிகள் தொடரும்: மாநகராட்சி ஆணையர்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலால் முடங்கிய பெங்களூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் லட்சுமி நாராயணா தெரிவித்தார்.

பெங்களூர் மாநகராட்சி மாமன்ற மாதாந்திரக் கூட்டம மேயர் வெங்கடேஷ்மூர்த்தி, ஆணையர் லட்சுமிநாராயணா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ஆணையர் பேசியது:

கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 1970 வளர்ச்சித் திட்டங்கள் கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலால் முடக்கி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ளது.

இதையடுத்து, வளர்ச்சிப் பணிகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்றாலும் 1970 வளர்ச்சிப் பணிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க முடியாது.

ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டவைகளை முதல் கட்டமாக உடனடியாக தொடங்கவும், தொடங்கப்படாத பணிகளுக்கு இரண்டாம் கட்டமாக அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.

இதற்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆளும்கட்சி தலைவர் என்.நாகராஜ் பேசியது:

கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகளில் 1970 பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டம், இரண்டாம் கட்டம் என்று இல்லாமல் ஒரே கட்டமாக அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு எதிர்கட்சித் தலைவர் குணசேகர் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். சிக்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் மேலாராக பணிபுரியும் சுதாராணி என்பவர் 3 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பணிபுரிகிறார். இதுகுறித்து உயர் அதிகார்களிடம் புகார் அளித்ததற்கு, அவர் என்னை மிரட்டுகிறார் என்று தர்மராயாகோவில் வார்டு பாஜக உறுப்பினர் தன்ராஜ் தெரிவித்தார்.

மாமன்ற உறுப்பினரை மிரட்டிய அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்படுவார். புகாரின் பேரில் துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்தார்.

 

பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை

Print PDF

தினமணி               26.06.2013

பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை

விருதுநகர் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை 3 மாதத்துக்குள் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சிக் கூட்டத்தில் தலைவர் மா. சாந்தி உறுதி அளித்தார்.

விருதுநகர் நகராட்சியின் அவசரக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் மா. சாந்தி தலைமை வகித்தார். ஆணையர்(பொறுப்பு) மணி மற்றும் துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், நகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த விவாதம் வருமாறு: விருதுநகர் நகராட்சியின் நகராட்சி குறிப்புகள் மற்றும் துறைகள் ஆகியவையும், அன்றாட வரவு, செலவுகளையும் வெளியிட  வேண்டும்.

   பாதாளச் சாக்கடை திட்டம் கடந்த 5 ஆண்டுகளாகவே முடிக்கப்படாமல் இருக்கிறது. மேலும், பொதுமக்களிடம் பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுப்பதற்கு அதிகளவில் பணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்களிடம் புகார்கள் வந்துள்ளன. எந்த மதிப்பீட்டில் பணம் வசூல் செய்யப்படுகிறது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

   மேலும், பல்வேறு பகுதிகளில் குறுகிய சந்துகளில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நகராட்சியின் மையப் பகுதியான தெப்பத்தில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே இதனைச்சுற்றிலும் வேலி அமைப்பதற்கு முன்வர வேண்டும்என்றனர். 

   நகராட்சியின் மையப் பகுதி மற்றும் மேற்கு பகுதிகளில் குடிநீர் விநியோகம் 11 நாள் முதல் 14 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கிழக்கு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. வறட்சி காலத்தில் அனைத்து பகுதிகளிலும் நீரேற்று நிலையங்களின் மூலம் சரிசமமாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்றனர்.

   இவற்றுக்கு பதிலளித்து தலைவர் மா. சாந்தி பேசியதாவது: விருதுநகர் நகராட்சியின் வரவு, செலவு குறித்து வெளியிடுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும். நகராட்சி பொறியாளர் பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுப்பதற்கு பொதுமக்களிடம் பங்களிப்புத் தொகை வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ. 1 லட்சம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

   மேலும் இப்பணிகள் அனைத்தும் மூன்று மாதத்துக்குள் முடிப்பதற்கு மும்முரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

   தெப்பக்குளத்தை சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் குடிநீர் விநியோகம் நகராட்சியின் கிழக்கு பகுதியில் அதிகம் இருப்பதாகவும், மற்ற பகுதிகளில் குறைவாக இருப்பதால் 11 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது குறித்து பொறியாளர் ஆய்வு செய்து வறட்சி காலத்தில் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்கும் வகையில் ஆய்வு செய்து வழங்கப்படும் என தலைவர் கூறினார்.   

   கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

 

விதிமீறல்: முகப்பேரில் அடுக்குமாடி கட்டடத்துக்கு சீல்

Print PDF

தினமணி               26.06.2013

விதிமீறல்: முகப்பேரில் அடுக்குமாடி கட்டடத்துக்கு சீல்

முகப்பேர் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 3 மாடிக் கட்டடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) சீல் வைத்தனர்.

இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்ட செய்தி:

மனை எண் பி-28, சி-24, கம்பர் தெரு, முகப்பேர் மேற்கு என்ற முகவரியில் ஆயத்த ஆடைத் தொழில் நடத்துவதற்காக, தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக, அதன் உரிமையாளர் 3-ஆவது தளத்தைக் கட்டி, வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் கட்டடத்தை மாற்றியமைக்குமாறு சி.எம்.டி.ஏ தரப்பிலிருந்து அதன் உரிமையாளருக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அறிவிக்கை கிடைத்த பின்னரும், கட்டடத்தை மாற்றியமைக்காமல் விதிமுறைக்கு புறம்பாக வணிகப் பயன்பாட்டுக்காகவே உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அக்கட்டடத்தை பூட்டி சீல் வைத்தனர்.

 


Page 162 of 506