Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் உறிஞ்சும் மோட்டார்களை நாளைக்குள் அகற்ற உத்தரவு

Print PDF

தினமணி         25.06.2013

குடிநீர் உறிஞ்சும் மோட்டார்களை நாளைக்குள் அகற்ற உத்தரவு

காஞ்சிபுரம் பகுதியில், சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை பயன்படுத்துவோர், அவற்றை புதன்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 காஞ்சிபுரத்தில், குடிநீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் பொதுமக்கள், கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சியின் மேடான பகுதிகளுக்கு போதிய அழுத்தம் இல்லாததால், குடிநீர் விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு பெரும்பாலான வீடுகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதே முக்கிய காரணம். எனவே மின் மோட்டாரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மின் மோட்டாரை அகற்றுவது குறித்து நகராட்சி ஆணையர் விமலா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் விதிமுறைகளுக்கு புறம்பாக நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இது சட்டவிரோதச் செயலாகும். அவ்வாறு மின் மோட்டார் பயன்படுத்துவோர் தங்களது வீட்டில் உள்ள இணைப்புகளில் பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களை வரும் புதன்கிழமைக்குள் (ஜூன் 26) அகற்றிவிட வேண்டும்.

 இதைத் தொடர்ந்து நகராட்சி மூலம் அனைத்து வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்படும். அப்போது மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் இணைப்புகளில் நேரடியாக குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும். இது தவிர குடிநீர் இணைப்பும் எவ்வித முன் அறிவிப்புமின்றி உடனடியாகத் துண்டிக்கப்படும். மேலும் நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் குடிநீர் உப விதிகளின்படி சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வீதிகளில் மாடுகள் திரிவதைத் தடுக்க போதிய நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி பதில்

Print PDF

தினமணி         25.06.2013

வீதிகளில் மாடுகள் திரிவதைத் தடுக்க போதிய நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி பதில்

சென்னை மாநகர வீதிகளில் மாடுகள் திரிவதைத் தடுத்திட போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த கே.சந்திரசேகரன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய எனது மனைவியை தெருவில் திரிந்து கொண்டிருந்த ஒரு மாடு முட்டிவிட்டது.

இதனால் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் நான் புகார் அளித்தேன். இதனையடுத்து அந்தப் பகுதியில் தெருவில் திரிந்து கொண்டிருந்த மாடுகள் அங்கிருந்து பிடித்துச் செல்லப்பட்டன. எனினும், சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் தெருக்களில் மாடுகள் திரியத் தொடங்கின.

இதனால் வீதிகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மட்டுமன்றி, இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் ஏராளமான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆகவே, வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்துச் சென்று அடைத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

2012-ஆம் ஆண்டில் மட்டும் தெருக்களில் சுற்றித் திரிந்த 19 ஆயிரத்து 131 நாய்களையும், 594 பன்றிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மட்டும் 8 நாய் பிடிக்கும் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தெருக்களில் திரியும் நாய் மற்றும் பன்றிகளின் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் தெருவில் திரியும் மாடுகளும் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. 2010-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை சென்னை மாநகரில் மொத்தம் 2 ஆயிரத்து 851 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.42 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக, மொத்தத்தில் தெருக்களில் திரியும் மாடுகள், நாய்கள் மற்றும் பன்றிகளைக் கட்டுப்படுத்திட சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்ட இந்த விவரங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சென்னை மாநகர வீதிகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திட மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து போதிய நடவடிக்கைகளை எடுத்திடும் என்று நம்புவதாகக் கூறி மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 

ஆற்காடு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள்–கடைகள் இடிப்பு மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி               24.06.2013

ஆற்காடு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள்–கடைகள் இடிப்பு மாநகராட்சி நடவடிக்கை

வேலூர் ஆற்காடு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் மாநகராட்சி சார்பில் இயந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள், வீடுகள், கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளி மாநகராட்சிக்கு சொந்தமாக்கி வருகிறார்கள். அதே சமயம் சிலர் மாநகராட்சி நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். அதன் காரணமாக அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ஜானகி மற்றும் அலுவலர்கள் ஆற்காடு சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வுக்கு சென்றனர். அப்போது ஆற்காடுசாலை, நாற்கர சாலையின் கீழே கோர்ட்டுக்கு செல்லும் கீழ் பாலத்தின் அருகே கால்வாய் மற்றும் பகுதியை அக்கிரமித்து வீடுகள், கடைகள், ‘பங்க்’ கடைகள் இருப்பது தெரியவந்தது.

மேலும் ஆக்கிரமிப்பின் காரணமாக அந்த கால்வாயில் கழிவு நீர் செல்வது தடைபட்டு இருப்பதும், அதனால் கால்வாயை சீரமைப்பு செய்ய முடியவில்லை என்பதும், தெரிந்தது. அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களை உடனே காலிசெய்யும்படி கமிஷனர் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இடித்து தள்ளப்பட்டது

இந்தநிலையில், நகரமைப்பு அலுவலர் கண்ணன் மேற்பார்வையில் கட்டிட ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் அலுவலர்கள் இயந்திரத்துடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

பின்னர் அங்கிருந்த வீடுகள், கடைகள் இயந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய ஆக்கிரமிப்பை அகற்றும் பணி பகல் 2 மணிவரை நடைபெற்றது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து மாநகராட்சி கட்டிட ஆய்வாளர் மதிவாணன் கூறியதாவது:–

ஆற்காடு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 வீடுகள், 1 கோழிக்கறி விற்பனை செய்யும் கடை, 2 மாட்டுக்கறி விற்பனை செய்யும் கடை, மூங்கிலினால் செய்த ஏணி மற்றும் மூங்கில் பொருட்கள் விற்பனை செய்யும் கடை, மீன்விற்பனை செய்யும் கடை ஆகியவைகள் அகற்றப்பட்டன.

மேற்கண்டவைகள் மாநகராட்சி திடீரென்று அகற்ற வில்லை. ஆக்கிரமிப்பாளர்களிடம் சுமார் 1 மாதகாலத்திற்கு முன்பே ஆக்கிரமிப்பை ஆகற்றும் படி கூறினோம். ஆனால் அவர்கள் அகற்றவில்லை எனவே தான் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தொடந்து நடைபெறும்

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு எங்கு இருந்தாலும் அவைகள் நிச்சயமாக அகற்றப்படும். யாருக்கும் சலுகைகள் வழங்கப்படமாட்டாது.

இவ்வாறு மதிவாணன் கூறினார்.

 


Page 164 of 506