Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருச்சியில், அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறித்து மேயர் ஜெயா ஆய்வு சப்பாத்தி, பூரி வழங்க பொது மக்கள் கோரிக்கை

Print PDF

தினத்தந்தி               15.06.2013

திருச்சியில், அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறித்து மேயர் ஜெயா ஆய்வு சப்பாத்தி, பூரி வழங்க பொது மக்கள் கோரிக்கை

திருச்சியில் அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறித்து மேயர் ஜெயா ஆய்வு நடத்தினார். சப்பாத்தி, பூரி வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அம்மா உணவகங்கள்

திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ–அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். திருச்சியில் பொதுமக்களின் வரவேற்புடன் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேயர் ஜெயா ஆய்வு

இந்தநிலையில் அம்மா உணவகங்களில் உணவு தரமாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க மேயர் ஜெயா நேற்று ஆய்வு செய்தார். திருச்சி ஜங்ஷன் ராக்கின்ஸ்ரோட்டில் உள்ள அம்மா உணவகம், ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள அம்மா உணவகம் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

அங்கு உணவு சாப்பிட்ட மேயர் ஜெயா, பொதுமக்களிடமும் உணவின் தரம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, கோட்ட தலைவர் சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பக்ருதீன், கவுன்சிலர் லாவண்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.

கருத்துபதிவேடு நோட்டு

தற்போது அம்மா உணவகங்களில் பொதுமக்களின் கருத்துக்களை அறிய கருத்துபதிவேடு நோட்டு வைக்கப்பட்டு உள்ளது. உணவு சாப்பிட்ட பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அந்த நோட்டில் எழுதலாம். அந்த நோட்டில் கருத்துக்களை எழுதி இருந்த பலர் உணவு நன்றாக இருப்பதாக எழுதி இருந்தனர். அதேபோல் சப்பாத்தி, பூரி போன்றவைகளும் வழங்க வேண்டும் என்றும் ஒரு சிலர் எழுதி இருந்தனர்.

 

தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்காக புதிய எச்சரிக்கை பலகைகள் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டன

Print PDF

தினத்தந்தி               15.06.2013

தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்காக புதிய எச்சரிக்கை பலகைகள் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டன

தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக நகரசபையின் மூலம் 3 இடங்களில் புதிதாக எச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்கப்பட்டன.

ஆழமான பகுதி

அகில இந்திய புண்ணியதலமாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரையில் உள்ள இடிந்துபோன கட்டிடங்களையும், முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள நினைவு தூணையும் பார்த்து செல்கின்றனர்.

 தனுஷ்கோடி கடல் பகுதி எப்போதும் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருவதுடன் ஆழமான கடல் பகுதியாகும். அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி கடல் பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி கடல் பகுதியில் குளித்ததில் கடந்த 2 வருடங்களில் மட்டும் இதுவரையில் 10–க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இறந்து போனார்கள்.

எச்சரிக்கை பலகைகள்

தனுஷ்கோடி கடல் பகுதியில் எச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’யில் பல முறை செய்திகள் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் தற்போது தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் நகரசபை தலைவர் அர்ச்சுனன், ஆணையாளர் கண்ணன் ஆகியோரது உத்தரவின் பேரில் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கடல் பகுதியில் இறங்கி குளிக்காமல் இருப்பதற்காக அவர்களுக்கு தெரியும் வகையில் நகராட்சி சார்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்ட பெரிய அளவிலான எச்சரிக்கை தகவல் பலகைகள் 3 இடங்களில் வைக்கப்பட்டன.

நேற்று தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் எச்சரிக்கை தகவல் பலகையை படித்து விட்டு கடலில் இறங்காமல் கடற்கரையிலேயே நின்று பார்த்துச் சென்றனர். பல வருடங்களுக்கு பிறகு தனுஷ்கோடி கடற்கரையில் எச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை நில அளவையாளர்கள் அளவீடு செய்தனர்.

Print PDF

தினமணி               15.06.2013 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை நில அளவையாளர்கள் அளவீடு செய்தனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை நில அளவையாளர்கள் அளவீடு செய்தனர்.

தம்மம்பட்டி காந்திநகர் மயானத்திலிருந்து சுவேத நதிக்கு செல்லும் பாதை 60 அடி அகலம் உள்ளது. இதைச் சுற்றி வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, தம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், சர்வேயர் ராஜா உள்ளிட்டோர் அந்தப் பகுதியை வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனர்.

இதேபோல, தம்மம்பட்டி பனந்தோப்பு பகுதியில் சின்னத்தோப்பு மாரியம்மன் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 21 சென்ட் நிலப் பகுதியைச் சுற்றிலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அளவீடு செய்தனர்.

 


Page 171 of 506