Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் தட்டுப்பாடு:பேரூராட்சித் தலைவர் ஆய்வு

Print PDF
தினமணி         07.06.2013

குடிநீர் தட்டுப்பாடு:பேரூராட்சித் தலைவர் ஆய்வு


செங்கம் அருகே உள்ள கிருஷ்ணாவரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேரூராட்சித் தலைவர் சென்னம்மாள் முருகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

கிருஷ்ணாவரம் பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செங்கம் பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் பேரூராட்சித் தலைவர் சென்னம்மாள் முருகன், கிருஷ்ணாவரம் கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். இதில் குடிநீர் எடுக்கும் கிணறு வற்றியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, கிணற்றை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அது வரை லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் உறுதியளித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் பார்த்தசாரதி, கவுன்சிலர் சென்னம்மாள் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

மதுரையில் மேலும் ஒரு விதிமீறல் கட்டடத்துக்கு "சீல்' வைப்பு

Print PDF
தினமணி         07.06.2013

மதுரையில் மேலும் ஒரு விதிமீறல் கட்டடத்துக்கு "சீல்' வைப்பு


மதுரையில் விதிமீறி கட்டப்பட்டு வந்த 3 மாடி வணிக வளாகக் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

 மதுரை மாநகராட்சி பகுதியில் ஏராளமான விதிமீறல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், சில கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

 இந் நிலையில், மதுரை ஸ்காட் சாலையில் அழகுநாதன் உள்பட 3 பேர் இணைந்து தரைகீழ் தளத்துடன் கூடிய 3 அடுக்குமாடி வணிக வளாகக் கட்டடம் கட்டி வந்தனர். விதிகளை மீறி இக்கட்டடம் கட்டப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபாலுக்குப் புகார்கள் கூறப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், முதன்மை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

 அப்போது, முந்தைய மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ஒருவர் இக்கட்டடத்துக்கு அதிகார வரம்பை மீறி 27,338 சதுர அடிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியிருப்பது தெரியவந்தது.  மேலும், இக்கட்டடத்துக்கு 10.1.2008 முதல் 9.1.2010 வரை கட்டுமானப் பணிக்கு வரைபடத்தில் அனுமதி பெறப்பட்டிருந்தது. கால அனுமதி முடிந்த நிலையில், இக்கட்டடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இருந்து 1 கி.மீ. வரை 9 மீ. உயரக்கட்டுப்பாட்டை மீறி, 12 மீட்டர் உயரத்துக்கு கட்டடம் கட்டப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து, ஆணையர் ஆர். நந்தகோபால் முன்னிலையில், முதன்மை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி ஆணையர் ஆ. தேவதாஸ், உதவிப் பொறியாளர் கனி, உதவி நகரமைப்பு அலுவலர் நாராயணன் மற்றும் ஊழியர்கள் இந்த கட்டடத்துக்கு வியாழக்கிழமை சீல் வைத்தனர். மேலும், கட்டட வரைபடத்தை அனுமதித்த வரைவாளர் ஒய். ஜெயசேகரின் உரிமை ஆணையை ரத்து செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வரைபட அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

பிறப்பு–இறப்பு சான்றிதழ் 3 நாளில் வீடுதேடி வரும் சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தகவல்

Print PDF
தினத்தந்தி         06.06.2013

பிறப்பு–இறப்பு சான்றிதழ் 3 நாளில் வீடுதேடி வரும் சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தகவல்


சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சேலம் மாநகராட்சியில் நாள்தோறும் பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.இவ்விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 3 தினங்களுக்குள் பிறப்பு –இறப்பு சான்றிதழ்கள், பெயர்பதிவு சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கப்பெறும் வகையில் அவர்களின் வீடுதேடி தபாலில் அனுப்பப்பட்டு வருகிறது.

பொதுமக்களை ஏமாற்றி சான்றிதழ் பெற்றுத் தருவதாக சில சமூக விரோதிகள் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள்ளும் வெளியிலும் நடமாடுவதாக தகவல் கிடைத்ததையொட்டி அலுவலக வளாகத்திற்குள் அத்தகைய சமூக விரோதிகள் மற்றும் இடைத்தரகர்கள் நுழையா வண்ணம் தடைசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதைபோன்ற நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பொதுமக்கள் நேரடியாக மனுக்களை அலுவலகத்தில் வழங்கினால் அடுத்த நாளே சான்றிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். சான்றிதழ்கள் பெற கட்டவேண்டிய கட்டணம் எவ்வளவு என்பது குறித்து ஒவ்வொரு மண்டல அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்தில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. நேரடியாக அலுவலகத்திற்கு வந்து மனுக்களை வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுத்து சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Page 179 of 506