Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விதிமீறி கட்டிய கட்டிட பகுதிகள் இடிக்க நடவடிக்கை மேலூரில் நேரில் ஆய்வு செய்த கலெக்டர் பேட்டி

Print PDF
தினத்தந்தி               05.06.2013

விதிமீறி கட்டிய கட்டிட பகுதிகள் இடிக்க நடவடிக்கை மேலூரில் நேரில் ஆய்வு செய்த கலெக்டர் பேட்டி


மேலூரில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை திடீர் ஆய்வு செய்த கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

குறைகேட்கும் முகாம்

மேலூர் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார். அவரிடம் 234 பேர் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதன்பின் அவர் மேலூரில் செக்கடி பஜாரிலிருந்து சந்தைப்பேட்டை பகுதிகளில் நடந்தே சென்று அங்கு கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை திடீர் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மேலூரில் நகராட்சியில் அனுமதி பெற்றவர்கள் 750 அடியில் கட்டிடம் கட்ட அனுமதி பெற்று விட்டு கூடுதல் இடத்தில் கட்டியுள்ளனர். மற்றொரு இடத்தில் அனுமதி பெறப்பட்ட 1, 020 அடிக்கும் கூடுதலாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு இடத்தில் விதிகளை மீறி 3–வது மாடி கட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அனுமதிக்காத இடங்களில் கட்டப்பட்ட பகுதியை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலூர் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றிய பாஸ்கரசேதுபதி வேலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அதிக புகார்கள் உள்ளன.

காவிரி குடிநீர் திட்டம்

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவுபெறும். மேலூர் அரசு கலைக்கல்லூரியில் மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலூர் போலீஸ் நிலைய எல்லை அதிக அளவில் இருப்பதால் இந்த போலீஸ் நிலையம் நகர் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம் என பிரிக்க பரிந்துரை செய்யப்படும்.

மேலூர் பகுதியில் கிரானைட் குவாரிகளில் சட்டத்துக்கு புறம்பாக தோண்டி எடுக்கப்பட்ட அளவுகளை அளவீடு செய்து அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் வசூலிக்கும் அதிகாரம் கலெக்டருக்கு உள்ளது. இது தொடர்பாக 88 குவாரிகளுக்கு விளக்க நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன. மீதம் உள்ள 27 குவாரிகளில் நீர் நிரம்பியிருப்பதால் தண்ணீர் வற்றிய பின்னர் அளவீடு செய்யும் பணி நடைபெறும்.

அரசு புறம்போக்கு இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை விரைவில் உலகளாவிய டெண்டர் மூலம் ஏலம் விடப்படும். 70 சதவீத நடவடிக்கைகள் விசாரணையில் உள்ளதால் விசாரணை நடவடிக்கைக்கு பின்பு கோர்ட் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

குறைதீர்க்கும் முகாமில் வேளாண்மை இணை இயக்குனர் ஜெயசிங்ஞானதுரை, நகராட்சியின் இணை இயக்குனர் குபேந்திரன், தாசில்தார் வசந்தா ஜூலியட், நகராட்சி ஆணையாளர் சுல்தான் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

விதிமுறை மீறல்:6 கட்டடங்களுக்கு சீல்

Print PDF
தினமணி       05.06.2013

விதிமுறை மீறல்:6 கட்டடங்களுக்கு சீல்


தூத்துக்குடியில் விதிமுறையை மீறியதாக 6 கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்கள் உள்ளூர் திட்டக் குழுமத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், போதிய வாகன நிறுத்தும் வசதி இல்லாமல் கட்டப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கடந்த மார்ச் 12-ம் தேதி 4 கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அப்போதே, விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவின்பேரில், உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் செயலர் ஈஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உரிய அனுமதி பெறாமல் இரண்டாவது மாடி கட்டியிருந்ததாக 2 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதேபோல, உரிய அனுமதி பெறாமல் 4 மற்றும் 5-வது மாடி கட்டப்பட்டிருந்ததாகக் கூறி தனியார் ஹோட்டலில் அந்த இரண்டு மாடிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.   மேலும், தனியார் வணிக வளாகம், பல்பொருள் அங்காடி, தனியார் ஹோட்டல்  ஆகிய மூன்று கட்டடங்களிலும் போதிய பார்க்கிங் வசதி இல்லாமலும், உரிய அனுமதி பெறாமலும் கட்டப்பட்டிருந்ததாக சீல் வைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை குறித்து உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் ஈஸ்வரன் கூறியது:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் முறையாக அனுமதி பெறாத கட்டடங்கள் மீதும், விதிமுறையை மீறிய கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி நகரில் தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் என மேலும், 36 கட்டடங்கள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. 36 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
 

நாமக்கல்லில் புதை சாக்கடைப் பணிகள் செயல் விளக்கம்

Print PDF
தினமணி       05.06.2013

நாமக்கல்லில் புதை சாக்கடைப் பணிகள் செயல் விளக்கம்


நாமக்கல் நகராட்சியில் புதை சாக்கடைப் பணிகளுக்காக   வாங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, தொழிலாளர்கள் எவ்வாறு  அடைப்புகளை சரிசெய்கின்றனர் என்பது குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

உலக வங்கி நிதியுதவியுடன் நாமக்கல் நகராட்சியின் பழைய 23 வார்டுகளில் ரூ.22.34 கோடி மதிப்பில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில் வீடுகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என இதுவரை சுமார் 4,300 இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கான இணைப்புக் கட்டணங்களும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. தவிர, புதை சாக்கடை கழிவுநீர் சேந்தமங்கலம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதை சாக்கடை திட்டத்தை கடந்த மே மாதம் 9ஆம் தேதி காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய சாக்கடைக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்காக ரூ. ஒரு  லட்சம் செலவில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜனுடன் கூடிய முகமூடி, பிரத்யேக கை உறை மற்றும் காலணி, உடை உள்ளிட்ட இந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு புதை சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளை சரிசெய்வது குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன், ஆணையர் (பொறுப்பு) கமலநாதன் ஆகியோரது முன்னிலையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு புதை சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளை சரிசெய்து காட்டினர்.

பிறகு, இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் கரிகாலன் கூறியது:

அரசு உத்தரவுப்படி புதை சாக்கடைக்குள் இறங்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டியது கட்டாயமாகும். அதற்காக ரூ. ஒரு லட்சம் மதிப்பில் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நகரில் புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்புகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும் என்றார் அவர்.
 


Page 182 of 506