Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கொடைக்கானலில் தைலக் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு

Print PDF
தினமணி       31.05.2013

கொடைக்கானலில் தைலக் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு


கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி, தைலக் கடைகளில் நகராட்சி மற்றும் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி, தைலப் பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.

 கொடைக்கானலில் தைலக் கடைகளிலும், மருந்துக் கடைகளிலும் மூட்டு வலி, தலை வலி,மற்றும் உடல் வலிக்குத் தேவையான தைலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், வின்டர் கிரீன் என்ற தைலத்தை சிலர் குடித்து இறந்து வருகின்றனர். தற்கொலை செய்வதற்கும் இந்த ஆயிலை பயன்படுத்தி வருகின்றனராம்.

 இது குறித்து, கொடைக்கானலைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், மதுரை உயர் நீதி மன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கடைகளில் வின்டர் கீரின் என்ற தைலம் போலியாக விற்பனை செய்யப்படுகிறது. அதில், மருந்து கலவைகள், காலாவதி தேதி என்பன போன்ற எந்தவித விவரமும் இல்லை என்றும், தரமற்ற முறையில் தயார் செய்து விற்பனை செய்து வருவதால் பலர் இறந்துவிட்டதாகவும், எனவே இந்தத் தைலத்தை பரிசோதனை செய்து தடை செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.

 இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவின்பேரிலும், மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படியும், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சாகுல்ஹமீது முன்னிலையில், வியாழக்கிமை கொடைக்கானல் பகுதிகளான பாம்பார்புரம், ஏரிச்சாலை,

 லாஸ்காட் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தைலக் கடைகளில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட வின்டர் கிரீன் ஆயில் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 இதில், மாவட்ட மருந்தாளுர் ஆய்வாளர் புகழேந்தி, நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், அரசு மருத்துவனை சித்தா மருத்துவர் மாரியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் அசன், சாமுவேல், தங்கபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 இது குறித்து, நகர்நல அலுவலர் கூறியது: நுகர்வோர் நீதிமன்ற உத்தரவின்படி, கொடைக்கானலில் உள்ள தைலக் கடைகளில் பரிசோதனை மேற்கொண்டு 100-க்கும் மேற்பட்ட வின்டர் கிரீன் தைலப் பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, இவை சென்னை கிண்டியிலுள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட உள்ளது என்றார்.
 

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை

Print PDF
தினத்தந்தி                30.05.2013

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை


கோவை மாகராட்சி பகுதிகளில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் பஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடங்கள் உள்ளன. இங்கு மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்களுக்கும் கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. சிறுநீர் மற்றும் மலம் கழிக்க ஒரு ரூபாய் தான் வாங்க வேண்டும். இதேபோல குளியலறை உபயோகிக்க ரூ. 3 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

ஆனால் கோவையில் மாநகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான கட்டண கழிப்பிடங்களில் சிறு நீர் மற்றும் மலம் கழிக்க ஒரு ரூபாய்க்கு பதிலாக 3 ரூபாய், 4 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் குளிப்பதற்கு ரூ. 3–க்கு பதில் ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இவற்றிற்கு ரசீதும் கொடுக்கப்படுவதில்லை. மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை, சிகரெட் மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன. கோவையின் முக்கிய இடங்களில் கூட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கோவை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

லைசென்சு ரத்து செய்யப்படும்

இதைதொடர்ந்து கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவற்றை எடுத்த ஏல உரிமைதாரர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். மேலும் அபராதம் விதித்து லைசென்சு ரத்து செய்யவும், உரிமதாரரை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
 

சேலத்தில் தொடங்கவுள்ள அரசின் மலிவு விலை உணவகங்களில் மேயர் ஆய்வு

Print PDF
தினமணி         30.05.2013

சேலத்தில் தொடங்கவுள்ள அரசின் மலிவு விலை உணவகங்களில் மேயர் ஆய்வு


சேலம் மாநகராட்சியில் தொடங்கவுள்ள அரசின் மலிவு விலை உணவகங்களில் மேயர் எஸ்.சௌண்டப்பன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாநகராட்சியில் வெங்கடப்பசாலை மாநகராட்சி கட்டடம், சத்திரம் மேம்பாலம் அருகில், சூரமங்கலம் காவல் நிலையம் அருகில், பழைய சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம், குமாரசாமிபட்டி அரசு கலைக்கல்லூரி அருகில், முதல் அக்ரஹாரம் காய்கறி சந்தைப் பகுதி, அம்மாப்பேட்டை ஜோதி திரையரங்கு அருகில், கொண்டலாம்பட்டி, மணியனூர் ஆகிய 10 இடங்களில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படுகிறது.

இந்த உணவகங்களுக்கு ரூ.3.70 லட்சத்தில் 56 வகையான சமையல் பாத்திரங்கள், எரிவாயு அடுப்புகள், நீராவி முறையில் இட்லி தயார் செய்யும் பாத்திரம் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும், ரூ.70 ஆயிரத்தில் ஒவ்வொரு உணவகங்களிலும் சூரிய ஒளி மின் சக்தி கலங்கள் அமைப்பதற்கான கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

தற்போது, அனைத்து இடங்களிலும் உணவகம் செயல்பாட்டிற்கு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ள கருங்கல்பட்டி, மணியனூர், சூரமங்கலம் மண்டலத்தில் பழைய சூரமங்கலம் சந்தைப்பேட்டை அருகில், சூரமங்கலம் காவல் நிலையம் அருகில், அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள வாசவி மஹால் அருகில் உள்ள உணவகம் ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணியினை மகளிர் சுய உதவிக் குழுவினர் மேற்கொண்டனர். இந்தப் பணிகளை சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சௌண்டப்பன், ஆணையர் மா.அசோகன், துணைமேயர் மு.நடேசன் ஆகியோர் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு, சோதனை அடிப்படையில் தயார் செய்யப்பட்ட சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை சாப்பிட்டனர். அப்போது, உணவங்களுக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என மேயர் தெரிவித்தார்.

மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ஜி.காமராஜ், அ.அசோகன், மாநகர நல அலுவலர் மருத்துவர் வி.மலர்விழி, மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
 


Page 188 of 506