Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சேலம் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஏற்பாடு கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

Print PDF
தினத்தந்தி        29.05.2013

சேலம் மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஏற்பாடு கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு


சேலம் மாநகராட்சியில் குடிநீரை தட்டுப்பாட்டை போக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு மேயர் சவுண்டப்பன் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தலைமை தாங்கினார். ஆணையாளர் அசோகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் போர்வெல் அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல், தெரு விளக்கு மற்றும் சாலை வசதி அமைத்து கொடுத்தல், இறந்த பணியாளர்களுக்கு சேம நலநிதி வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு நிலுவை தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.

நிதி உதவி

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மேயர் சவுண்டப்பன் உத்தரவிட்டார். சேலம் மாநகராட்சியில் ஓய்வு பெற்ற இளநிலை பொறியாளர்(திட்டம்) சீனிவாசன் இடுப்பு அறுவை சிகிச்சையும், ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் இருதய அறுவை சிகிச்சையும் செய்து கொண்டனர்.

குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களுக்கு ஓய்வூதியரின் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மேயர் சவுண்டப்பன் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். மாற்றுத்திறனாளியான இவர் மேயரிடம் கொடுத்துள்ள மனுவில், நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுகளாகியும் எனக்கு வேலை கிடைக்க வில்லை.

எனவே வேலைவாய்ப்பு கிடைக்க பரிந்துரை செய்யவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மின் மோட்டார் பொருந்திய மோட்டார் சைக்கிள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஓடைய புதுப்பிக்க

சேலம் மாநகராட்சி 17–வது வார்டு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மேயரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘சேலம் சாரதா கல்லூரி ஆசிரமம் முதல் புதிய பஸ் நிலையம் வரை உள்ள ஓடையை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் 7 மற்றும் 16 வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேயரிடம் கொடுத்துள்ள மனு கொடுத்தனர். அதில், ‘தங்கள் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இருப்பதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகையால் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இதேபோல் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆழ்துளை கிணறு அமைக்க கோரி மனு கொடுத்தனர்.

கணக்கெடுக்க உத்தரவு

இதையடுத்து மேயர் சவுண்டப்பன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி முழுவதும் எந்த இடங்களில் எல்லாம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட வேண்டியது உள்ளது. ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வராதது எத்தனை என கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அம்மா உணவக சாப்பாடு

சேலம் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலையில் அம்மா உணவகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உணவகங்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை பகுதியிலுள்ள 4 மையங்களில் பரிச்சார்த்த முறையில் மகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் தயாரித்த இடலி, சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை மேயர் சவுண்டப்பன், ஆணையாளர் அசோகன் ஆகியோர் சாப்பிட்டு பார்த்தனர். குறை தீர்க்கும் கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர்கள் காமராஜ், அசோகன், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

கோவை மாநகராட்சி பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்

Print PDF
தினத்தந்தி                 29.05.2013
 
கோவை மாநகராட்சி பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்

கோவை மாநகராட்சி பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் கோர்ட்டுக்கு சென்று தனித்தனியாக இடைக்கால தடை வாங்கி விடுவதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து

கோவை லட்சுமி மில் சிக்னல் அருகில் உள்ள 3 மாடி வணிக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் இறந்தனர். இதில் அந்த கட்டிடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை என்றும், அதில் 2 மாடி கட்டுவதற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டிருந்தது என்றும் 3–வது மாடி அனுமதியின்றி கட்டப்பட்டிருந்தது என்பதும் தெரியவந்தது. அனுமதியில்லாத கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் இறந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உள்ள அனைத்து வணிக வளாகங்களையும் கோவை மாநகராட்சி அதிகாரிகளும், உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இதில் பெரும்பாலான கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததும், சில கட்டிடங்கள் அனுமதியே வாங்காமல் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து அதிகாரிகள் அந்த கட்டிடங்களில் ஆய்வு செய்து அவற்றிற்கு ‘சீல்’ வைத்தனர்.

இடைக்கால தடை உத்தரவு

கட்டிடங்களில் பார்க்கிங் வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டதை தொடர்ந்து சீல் வைக்கும் பணிகளை 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு மாவட்ட கலெக்டர் எம.கருணாகரன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து 15 நாட்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் ‘சீல்’ வைக்கப்பட்ட சில கட்டிட உரிமையாளர்கள் கோர்ட்டுக்கு சென்று இடைக்கார உத்தரவு வாங்கி வந்து விட்டனர். இதனால் அந்த கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு அவை தொடர்ந்து செயல்படுகின்றன. இடைக்கால தடை விதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக கோவை மாநகராட்சி தனித் தனியாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதன் பின்னர் தான் அந்த கட்டிடங்களை முடக்க முடியும். எனவே கோவையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேக்கம்

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கோவை மாநகராட்சி பகுதியில் சுமார் 200–க்கும் மேற்பட்ட வணிக வளாக கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு கட்டிட உரிமையாளரும் தனித்தனியாக சென்று இடைக்கால தடை உத்தரவு வாங்கி வந்து விடுவதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்வது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 

சென்னையில் 1–ந்தேதி முதல் பொருளாதார கணக்கெடுப்பு தொடக்கம் மாநகராட்சி அறிவிப்பு

Print PDF
தினத்தந்தி                 29.05.2013

சென்னையில் 1–ந்தேதி முதல் பொருளாதார கணக்கெடுப்பு தொடக்கம் மாநகராட்சி அறிவிப்பு


சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஜூன் 1–ந்தேதி (சனிக்கிழமை) முதல் 6–வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதற்கான விவரங்களை சேகரிக்க களப்பணியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு வருவார்கள்.

இதில் கணக்கெடுக்கப்படும் விவரங்கள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கொள்கை முடிவுகளுக்கும், திட்ட செயலாக்கத்திற்கும் பயன்படுத்தப்படுவதால், களப்பணியாளர்களிடம் பொதுமக்கள் சரியான விவரங்களை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 


Page 190 of 506