பத்மநாபபுரம் நகராட்சிக் கூட்டம்
பத்மநாபபுரம் நகராட்சிக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆணையர் மேத்யூ ஜோசப், சுகாதார அலுவலர் டெல்விஸ்ராஜ், துணைத் தலைவர் பீர்முகமது , மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேறறனர்.
கூட்டம் தொடங்கியவுடன் பேசிய உறுப்பினர்கள் உவைஸ், செய்யது அலி ஆகியோர், நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு, ஆற்றூரிலிருந்து வரும் குடிநீர்க் குழாய் உடைப்பு ஆகியவை இருந்த போதிலும் தக்கலை பள்ளி திருவிழாவின் போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு 14 நாள்களும் தங்குதடையின்றி சீரானமுறையில் குடிநீர் வழங்கிய, நகராட்சித் தலைவருக்கும், ஆணையருக்கும், அலுவலர்களுக்கும் எங்களுடைய தனிப்பட்ட முறையிலும் ஜமாத் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.
உறுப்பினர் ஹரிகுமார்: என்னுடைய வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. வார்டில் துப்புரவு பணியாளர் விடுமுறையில் சென்றால் மாற்று பணியாளர்கள் யாரும் வருவதில்லை.
10 நாள்களாக என்னுடைய வார்டில் குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் அப்பகுதி சுகாதாரக் கேடு நிறைந்து காணப்படுகிறது. மேலும் பத்மநாபபுரத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைமக்கள் தங்கள் பெயரை வறுமைக் கோட்டு பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தும் அதிகாரிகள் வாங்கவில்லை இது நகராட்சிதான் செய்யவேண்டுமென மனுக்களை திருப்பி கொடுத்துவிட்டனர்.
வசதிபடைத்தவர்கள் வறுமைகோட்டு பட்டியலில் இருக்கின்றனர் ஆனால் உண்மையான வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஏழைமக்கள் அரசின் சலுகைகளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தலைவர் சத்யாதேவி: கடந்த 15 நாள்களாக தக்கலை பள்ளி திருவிழா, குமாரகோவில் தேரோட்டம் இதனால் ஒரு சில வார்டுகளிள் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இனி வரும் நாள்களில் சீரான முறையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். வறுமைக் கோட்டு பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவேண்டுமென்றால் நகராட்சிக்கு மனு கொடுங்கள். அம்மனுக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்படும்.
அங்கு பரிசீலனை செய்தபிறகே மனுதாரின் பெயர் வறுமைக் கோட்டு பட்டியலில் சேர்க்கப்படும். அதன் பிறகே அவர்கள் அரசின் சலுகைகளை பெறமுடியும் என்றார்.
பத்மநாபபுரம் நகராட்சி பகுதியானது புரதான நகரமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குவதால் நகரை அழகுபடுத்தும் நோக்கத்துடன் குமாரகோவில் விலக்கிலிருந்து மணலி முக்குவரை உள்ள 94 மின் கம்பங்களில் சி.எப்.எல் விளக்குகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பிரேரணை அனுப்பவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.