Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கண்ணம்மாபேட்டையில் தெரு நாய்கள் சரணாலயம்: மேயர் ஆய்வு

Print PDF
தினமணி       26.05.2013

கண்ணம்மாபேட்டையில் தெரு நாய்கள் சரணாலயம்: மேயர் ஆய்வு


தெரு நாய்களுக்கான சரணாலயம் கண்ணம்மாபேட்டையில் அமைக்கப்பட உள்ள இடத்தை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மநாகராட்சிப் பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் தெரு நாய்களுக்கும், வயதான நோய்த்தொற்றுள்ள தெரு நாய்களுக்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று மாநகராட்சியின் 2013 - 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மேலும், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் இறந்த பின்பு அவற்றை அடக்கம் செய்யவும் செல்லப் பிராணிகளுக்கான மயான பூமி அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட 141-வது வார்டில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானபூமி பின்புறத்தில் 35 ஆயிரம் சதுர அடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள நாய்கள் சரணாலயத்தில் 2 ஆயிரம் வயதான மற்றும் நோயுற்ற தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மற்றும் இனக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும். இது தவிர, உணவு வழங்கி பராமரிக்கப்படும். சரணாலயம் அமைப்பதற்கான பணிகளை விரைவாக முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, மாநகராட்சிஆணையர் விக்ரம் கபூர், துணை ஆணையர் சி.என்.மகேஷ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
 

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற இடைத்தரகர்களை அணுகாதீர்!

Print PDF
தினமணி       26.05.2013

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற இடைத்தரகர்களை அணுகாதீர்!


மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற இடைத்தரகர்களை அணுக வேண்டாம், என மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி தினமும் 200 முதல் 300 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இதில், ஏறத்தாழ 50 விண்ணப்பங்கள் சரியாகப் பூர்த்தி செய்யப்படாமலும், தாய்-தந்தை பெயர் மாற்றம், பிறந்த தேதியில் மாறுபாடு ஆகிய காரணங்களுக்கான சான்றிதழ்கள் இணைக்கப்படாமல் உள்ளன. இத்தகைய விண்ணப்பங்களைத் தவிர்த்து, ஏனைய விண்ணப்பங்களுக்கு சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டு, உடனடியாக அன்றைய தினம் மாலையே தொடர்புடைய சுகாதார ஆய்வாளரின் கையொப்பம் பெறப்பட்டு வழங்கப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழ் உடனுக்குடன் ஆன்-லைன் மூலமும் பெற்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பெற வரும் பொதுமக்கள் தாங்களாகவே நேரடியாக தகவல் மையத்தில் உரிய விண்ணப்பத்தைப் பெற்று, முறையாகப் பூர்த்தி செய்து சான்றிதழ்கள் பெறலாம்.

இதற்காக, இடைத்தரகர்களை அணுகத் தேவையில்லை. பிறப்பு, இறப்புச் சான்று பெற வரும்போது இடைத்தரகர்கள் யாரேனும் அணுகினால், அது குறித்து தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் தெரிவித்துள்ளார்.
 

போடி நகராட்சி குடிநீர் பிரச்னை: அமைச்சர் ஆய்வு

Print PDF
தினமணி       26.05.2013

போடி நகராட்சி குடிநீர் பிரச்னை: அமைச்சர் ஆய்வு


போடியில் குடிநீர் பிரச்னை குறித்து, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

போடி நகராட்சியில் 33 வார்டுகளில் 80 ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர்.  போடி நகராட்சிக்கு கொட்டகுடி ஆற்றின் உற்பத்தி இடமான சாம்பலாற்றிலிருந்து தடுப்பணை கட்டப்பட்டு, அங்கிருந்து ராட்சதக் குழாய்கள் மூலம், போடி பரமசிவன் கோயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில் கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து நன்றாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, கொட்டகுடி ஆறு உற்பத்தியாகும் பகுதிகளில் ஏராளமான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதால், இப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மழை பொய்த்துவிட்டது.

இதனால் கொட்டகுடி ஆறு வறண்டு விட்டது. இதில் சாம்பலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கும் தண்ணீரையே குடிநீருக்கு பயன்படுத்த கொண்டு வரப்படுகிறது. இந்த தண்ணீர் சில நேரங்களில் கலங்கலாக விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 140 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டநிலை மாறி தற்போது 90 லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் அதிருப்தியடைந்த நிலையில், தமிழக நிதியமைச்சரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, சனிக்கிழமை போடி நகராட்சி அலுவலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், கொட்டகுடி ஆறு உற்பத்தியாகும் பகுதிக்கும்  சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அப்பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்தார். மேலும் தற்போது தினமும் சேமிக்கப்படும் நீரின் அளவு, சுத்திகரிக்கப்படும் நீரின் அளவு, விநியோகம் செய்யும் அளவு குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
 


Page 195 of 506