Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சியில் தபால் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் விநியோகம்

Print PDF
தினமணி       26.05.2013

மாநகராட்சியில் தபால் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் விநியோகம்


சேலம் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு விண்ணப்பித்த அடுத்தநாளே தபால் மூலம் சான்றிதழ்கள் கிடைக்கும் புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சியியால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் குறித்து தலைமைச் செயலகம், மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள், காவல்துறை அலுவலகங்கள், தொழிலார் நலத்துறை அலுவலகங்கள், கட்டுமான சங்கங்கள்,  பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் இருந்து சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்து தரக் கோரி அலுவலகக் கடிதங்கள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.

அவ்வாறு பெறப்பட்ட பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை, அலுவலக பதிவேடுகளுடன் ஒப்பிட்டு பார்த்த போது சில பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சமூக விரோதிகளால்  போலியான முறையில் தயார் செய்யப்பட்டு அரசு, மாநகராட்சி முத்திரைகள் இடப்பட்டு வழங்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அன்னியர்கள் அத்து மீறி நுழைந்து பொதுமக்களை திசைத்திருப்பி தவறான தகவல்களை வழங்குவதை தடுக்க சம்மந்தம் இல்லாத நபர்கள் வளாகத்தினுள் நுழைவது தடை செய்யப்பட்டது.

மேலும், இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது. தினமும் அன்னியர்கள் எவரேனும் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தவறான செயல்களில் ஈடுபடுகின்றனரா என கண்காணிக்க தனிப்பட்ட முறையில் மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சேலம் மாநகராட்சி வளாகத்திற்குள் நான்கு இடங்களில்  மாநகராட்சி அலுவலர்களை மட்டும் அணுகுமாறு விழிப்புணர்வு  பலகைகளும், செலுத்த வேண்டிய கட்டணம், இணைக்க வேண்டிய ஆவணங்களின் விபரம் குறித்து தெளிவாக பலகை வைக்கப்பட்டுள்ளன.

எனினும், அன்னியர்களால் விநியோகிக்கப்படும் போலி சான்றிதழ்களால் பொதுமக்கள் ஏமாந்து வருகின்றனர்.

இதனால், சேலம் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு மற்றும் இதர தகவல்களைப் பெற வருபவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை மட்டும் அணுகி சந்தேகங்களைக் கேட்கவும், வெளி நபர்கள் யாரையும் அணுக வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பள்ளி, கல்லூரி சேர்க்கை நேரம் என்பதால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விரைவாக சான்றிதழ்கள் வழங்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விண்ணப்பித்த மறுநாளே தபால் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு  சான்றிதழ் அனுப்பப்படும். இதற்காக கூடுதல் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பிறப்பு, இறப்பு சான்றிதழ் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை

Print PDF
தினமலர்          26.05.2013

பிறப்பு, இறப்பு சான்றிதழ் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை


மதுரை:"பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, இடைத்தரர்களை அணுக வேண்டாம். தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மதுரை மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் எச்சரித்துள்ளார். "தினமலர்'நாளிதழ் செய்தியால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நகர்நலப் பிரிவில் விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும்; ஆனால், மாநகராட்சியில் பணம் கொடுத்தால்தான், சான்றிதழ் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இதுபற்றி, "தினமலர்' நாளிதழ், நேற்று முன்தினம், செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, பிறப்பு, இறப்பு பதிவுப் பிரிவில், உதவி நகர்நல அலுவலர் பிரியா ஆய்வு செய்து, சான்றிதழ்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். இதுகுறித்து நேற்று, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. கமிஷனர் நந்தகோபால் அறிக்கை: பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி, தினமும் 200 முதல் 300 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதில், 50 விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாமல், தாய், தந்தை மற்றும் பிறந்த தேதியில் மாறுதல் உள்ளதால் உடனடியாக சான்றிதழ் வழங்க முடியவில்லை.

பிற விண்ணப்பங்களுக்கு உடனடியாக, சுகாதார ஆய்வாளர் கையெழுத்திட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.மக்கள் நேரடியாக, தகவல் மையத்தில், விண்ணப்பிக்கலாம்; இடைத்தரகர்களை அணுக வேண்டாம். இடைத்தரகர்கள் அணுகினால், உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிறப்பு சான்றிதழ்களை, ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, குறிப்பிட்டுள்ளார்.
 

கிருஷ்ணகிரியில் குடிநீர் பிரச்னைகளுக்கு சிறப்பு நடவடிக்கை: நகரமன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து

Print PDF
தினமணி       25.05.2013

கிருஷ்ணகிரியில் குடிநீர் பிரச்னைகளுக்கு சிறப்பு நடவடிக்கை: நகரமன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து


கிருஷ்ணகிரி நகராட்சிப்பகுதிகளில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நகர மன்றக் கூட்டத்தில் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி நகரமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து தலைமை வகித்தார். ஆணையாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர் மாரியப்பன் தனது வார்டில் குடிநீர் பிரச்னை நிலவுவதாகவும், அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

மேலும், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் மலிவு விலையில் உணவகம் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து நகரமன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து கூறியது: கிருஷ்ணகிரி நகராட்சிக்குள்பட்ட 33 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை தீர்க்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில வார்டுகளில் கூடுதலாக குழாய்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலிவு விலையில் உணவகம் தொடங்குவது குறித்து மாநகராட்சியில் உள்ளது போல, அம்மா உணவகத்தை திறக்க அரசிடம் கோரிக்கை வைப்போம் என்றார்.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு ரூ.3 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவது, ரூ.2 கோடி மதிப்பில் சாலைகள் மேம்படுத்துவது எனவும் இதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்பது உள்பட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 


Page 197 of 506