Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் ஒரே நாளில் வழங்கப்படும் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என அதிகாரி தகவல்

Print PDF
தினத்தந்தி          18.05.2013

பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் ஒரே நாளில் வழங்கப்படும் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என அதிகாரி தகவல்


பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஒரே நாளில் வழங்கப்படும் என்றும், அதற்காக இடைத்தரகர்களை யாரும் அணுக வேண்டாம் எனவும் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிறப்பு சான்றிதழ்

பள்ளிக்கூடத்தில் சேருவது முதல் பல்வேறு பணிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் பிறப்பு சான்றிதழ் பெற பெற்றோர்கள் மாநகராட்சியில் காத்து கிடப்பதைக் காணலாம்.

மேலும் பல பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகளுக்கான பிறப்பு சான்றிதழை வைத்து இருப்பார்கள். ஆனால் அந்த சான்றிதழில் ஆண் அல்லது பெண் என்று மட்டும்தான் இருக்கும் குழந்தையின் பெயர் இருக்காது. இன்னும் சிலர் வைத்திருக்கும் சான்றிதழ்களில் தாய் அல்லது தந்தையின் பெயரில் எழுத்து பிழை இருக்கும். இது போன்ற தவறுகளை சரி செய்து புதிதாக பிறப்பு சான்றிதழ் பெறுபவர்களும் மாநகராட்சிக்கு சென்றுதான் ஆக வேண்டும்.

இறப்பு சான்றிதழ்

அது போல இறப்பு சான்றிதழும், இறந்தவரின் வாரிசு தாரர்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுவதால் பலரும் அந்த சான்றிதழைப் பெற மாநகராட்சிக்கு செல்வதை தினமும் காணலாம். மாநகராட்சிக்கு செல்ல முடியாதவர்கள், லீவு கிடைக்காதவர்கள் இடைத்தரகர்களை அணுகி அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து மேற்கண்ட சான்றிதழ்களை பெற்றுச்செல்கிறார்கள்.

பிறப்பு–இறப்பு சான்றிதழ்களை பெற நடைமுறை தான் என்ன? அதற்காக யாரை அணுக வேண்டும் என்று வேலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரியம்வதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

தபால் பெட்டியில்...

புதிதாக பிறப்பு சான்றிதழ் பெற அல்லது பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் போன்றவைகளை செய்து சான்றிதழ் பெற விரும்புபவர்கள், அதற்குரிய தகவல்களை இணைத்து, உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், சுயவிலாசமிட்ட கவரில், தபால் தலைகளை ஒட்டி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தபால் பெட்டியில் சேர்த்தால் போதும்.

பின்னர் அந்த தபால்கள் அனைத்தும் சுகாதார துறைக்கு அனுப்பப்படும். அங்குள்ள அலுவலர்கள் அந்த தபாலை பிரித்து பார்த்து விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஆய்வு செய்வார்கள். விண்ணப்பத்துடன் இணைத்துள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், பிறப்பு சான்றிதழ் மறுநாள் தபாலில் அனுப்பிவைக்கப்படும்.

இதுதவிர விண்ணப்பதாரருக்கு ஏதாவது சந்தேகமோ அல்லது விளக்கமோ தேவைப்பட்டால் மாநகராட்சி அலுவலரிடம் நேரில் விண்ணப்பத்தை கொடுத்து மறுநாள் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

இறப்பு சான்றிதழ் பெறவும் இதே நடைமுறைதான்.

இடைத்தரகர்கள்

பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

இவ்வாறு நகர் நல அலுவலர் பிரியம் வதா கூறினார். அப்போது துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் உடன் இருந்தார்.
 

நெல்லை மாநகர பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு மாநகராட்சி நடவடிக்கை

Print PDF
தினகரன்       18.05.2013

நெல்லை மாநகர பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு மாநகராட்சி நடவடிக்கை


நெல்லை, : நெல்லை மாநகர பகுதிகளில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டன.

நெல்லை மாநகர பகுதியில் பன்றி வளர்க்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி சந்திப்பு கைலாசபுரம், சிந்துபூந்துறை மீனாட்சிபுரம், உடையார்பட்டி, பாளை இந்திராநகர், அண்ணாநகர், பெரியார்நகர் மற்றும் பேட்டை, டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.

சந்திப்பு பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கலக்கும் சாக்கடைகளில் பன்றிகள் சங்கமிக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடிநீர் மாசுபடுகிறது. இதனை யடுத்து பன்றிகளை பிடிப்பதற்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி மதுரையில் இருந்து பன்றி பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று பாளை யங்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்தனர்.

இந்திராநகர், பெரியார்நகர், சாமாதானபுரம், துப்புரவு தொழிலாளர் காலனி போன்ற பகுதிகளில் பட்டி அமைத்து பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவைகள் அங்குள்ள சாக்கடைகளில் உருண்டு புரளுகின்றன. பன்றி பிடிப்பவர்களை பார்த்ததும் அவைகள் ஓட்டம் பிடித்தன.ஆனால் அவர்கள் பெரிய வலைகளை வீசியும், சுருக்கு கண்ணிகள் மூலமும் பன்றிகளை பிடித்தனர். மொத்தம் 100க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. இவை காட்டுப்பகுதியில் கொண்டு விடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

அனுமதி பெறாத ஆயிரம் குடிநீர் இணைப்புகள்

Print PDF
தினமணி        17.05.2013

அனுமதி பெறாத ஆயிரம் குடிநீர் இணைப்புகள்


பொன்னேரி பேரூராட்சியில், அனுமதி பெறாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுக் குடிநீர் இணைப்புகள் இருப்பது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொன்னேரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், சுமார் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இவற்றில் 2,800 குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மட்டுமே முறையாக பேரூராட்சியில் முன்வைப்புத் தொகை செலுத்தி, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாகவும் எஞ்சியுள்ள குடியிருப்புகள் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

எனவே, பல ஆண்டுகளாக நிலவும் இந்த முறைகேடு குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோருக்கு மனு அளித்திருந்தனர்.  இதையடுத்து, பொன்னேரி பேரூராட்சியின் 18 வார்டுகளில் 2 வார்டுக்கு ஒரு செயல் அலுவலர் வீதம், மொத்தம் 9 செயல் அலுவலர்களை நியமித்து அவர்களை வீடுகள் தோறும் சென்று ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 2 நாளாக செயல் அலுவலர்கள், பேரூராட்சி பொது சுகாதார ஊழியர்களுடன் இணைந்து வீடு, வீடாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் இருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.  இந்த ஆய்வு முடிவுகள் பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு வைத்திருப்பதன் மூலம் பேரூராட்சிக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் குடிநீர் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
 


Page 208 of 506