Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தனியார் ஆக்கிரமித்த ரூ2.50 கோடி நிலம் மாநகராட்சி மீட்பு

Print PDF
தினகரன்                  16.05.2013

தனியார் ஆக்கிரமித்த ரூ2.50 கோடி நிலம் மாநகராட்சி மீட்பு


கோவை,: கோவை லே அவுட்டில் தனியார் ஆக்கிரமித்த  ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொத்தை மாநகராட்சி மீட்டது.

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு அருகே நேரு நகரில் அங்கண்ணன் லே அவுட் உள்ளது.  இங்கு பொதுமக்கள் பயன்படுத் தும்வகையில் பூங்கா அமைப்பதற்காக 21 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. இதில் 8 சென்ட் இடத்தை தனியார் ஆக்கிரமித்து 3 சென்ட்டில் 360 சதுரஅடி பரப்பளவில் வீடு கட்டி னார். வீட்டுக்கு வரி போடுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தை அணுகினார்.  

மாநகராட்சி அலுவலர்கள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது, அவர் கட்டிய வீடு பொதுமக்கள் உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்  இந்த சொத்து தனக்குரியது என்று கோரி மாநகராட்சி மீது கோவை 2வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 30-4-13ல் தீர்ப்பு அளித்தார்.

இதையடுத்து மாநகராட்சி நகர் நல அலுவலர் வரதராசன் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகையை அந்த இடத்தில் வைத்தனர்.  

மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2.50 கோடி இருக்கும். இந்த லே அவுட்டில் தற்போது 16 வீடுகள் உள்ளன.  ஆக்கிரமிக்கப்பட்ட 8 சென்ட் நிலத்துடன், இதையொட்டி காலியாக கிடக்கும் 13 சென்ட் நிலத்தை சுற்றி முள் வேலி போட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல கோடி மதிப்புள்ள  சொத்தை மாநகராட்சி மீட்ட சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது மாநகராட்சி கமிஷனர் அலறல்

Print PDF
தினமலர்        16.05.2013

நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது மாநகராட்சி கமிஷனர் அலறல்


திருச்சி: "மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்' என, திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தற்போது நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், எதிர்கால சந்ததியினரின் தண்ணீர் தேவையை காத்திடும் பொருட்டு, ஒவ்வொரு கட்டிட உரிமையாளரும், தங்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் அரசு உத்தரவுப்படி, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்திருக்க வேண்டும்.

ஏற்கனவே ஒவ்வொரு குடியிருப்பிலும் அமைத்துள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை, தற்போது புதுப்பித்து செயல்படும் விதத்தில் புனரமைப்பு செய்ய வேண்டும்.

புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைப்புக்கு முறையான வரைபடம் இல்லாமல், மாநகராட்சி மூலம் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

பழைய கட்டிடங்களில் வீடுகள் மற்றும் அனைத்து வகையான வணிக நிறுவன கட்டிடங்களிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தற்போது செயல்பாட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டால், மாநகராட்சி பணியாளர்கள் மூலம், சம்மந்தப்பட்ட கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்து, அதிரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாநகர மக்கள் சமூக அக்கறையுடன் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி, அதை நன்றாக செயல்படுத்த வேண்டும்.
 

மார்க்கெட் பாதையை அடைத்து சுவர் இடித்து தள்ளியது திருச்சி மாநகராட்சி

Print PDF
தினமலர்        16.05.2013
 
மார்க்கெட் பாதையை அடைத்து சுவர் இடித்து தள்ளியது திருச்சி மாநகராட்சி

திருச்சி: திருச்சியில், மார்க்கெட்டுக்குள் செல்லும் பாதையை அடைத்து, அ.தி.மு.க., பிரமுகர் கட்டிய சுவரை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

திருச்சி காந்திமார்க்கெட் எதிரில், டைமண்ட் ஜூப்லி இரவு நேர தரைக்கடை காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் இரவு 10, மணி முதல், காலை 8, மணி வரை வியாபாரம் நடக்கும். இந்த சந்தைக்குள் செல்ல, காந்திமார்க்கெட்டின் மெயின் நுழைவு வாயில் அமைந்துள்ள சாலையில் ஒரு நுழைவு வாயிலும், வெங்காய மண்டி சாலையில் ஒரு நுழைவு வாயிலும் உள்ளது. 6 அடி அகலத்தில் இந்த இரு பாதைகள் வழியாக தான், வியாபாரிகளும், தள்ளு வண்டிகள், டூவீலர்கள் சென்று வருவது வழக்கம்.

வெங்காய மண்டி சாலையில், உள்ள நுழைவு வாயிலின் அருகே பழனிச்சாமி என்பவர் வெங்காயக்கடை நடத்தி வருகிறார். அ.தி.மு.க., பிரமுகரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன், தனது கடை அருகே டைமண்ட் ஜூப்லி சந்தைக்கு செல்லும் பாதையை அடைத்து சுவரை கட்டினார். அதோடு, அந்த சுவற்றின் முன், ஆஸ்பெஸ்டாஸ் சீட் அமைக்கும் பணிகளையும மும்முரமாக மேற்கொண்டனர்.

இதைக் கண்ட, டைமண்ட் ஜூப்லி மார்க்கெட் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி கட்டுமான பணிகள் துரித கதியில் சுவர் கட்டி முடிக்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் தண்டபாணியிடம், புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி கமிஷனர் ராஜம்மாள் தலைமையில், அதிகாரிகள் நேற்றுமுன்தினம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த நுழைவு வாயில் வழியாக சென்று, தொழிலாளர்களும், பொதுமக்களும் சிறுநீர் கழிப்பதால், தனது கடைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சுவர் கட்டியதாக பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதற்காக மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து, பாதையை அடைத்து சுவர் கட்டியது தவறு என்றாலும், ஆஸ்பெஸ்டாஸ் சீட் அமைக்க குழாய்களை பதித்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் கூற முடியவில்லை. இதனால், அந்த பகுதியை ஆக்கிரமித்து கடை அமைக்க திட்டமிட்டிருப்பது உறுதியானது.

இதனால், உடனடியாக அந்த சுவரை இடிக்க, உதவி கமிஷனர் ராஜம்மாள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள் சுவற்றை இடித்து தள்ளினர்.

கட்டட இடிபாடுகள் தற்போது வரை அங்கேயே, தேங்கி கிடப்பதால், நுழைவு வாயிலை தொழிலாளர்களும், வியாபாரிகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இடிபாடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 


Page 210 of 506