தினமணி 30.01.2014
குரங்குகள் தொல்லை ஒழிக்கப்படும்: சாத்தூர் நகர்மன்றக்கூட்டத்தில் தகவல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் சுற்றித்திரியும் மாடுகள், குரங்குகள் இனி நகர்ப்பகுதிக்குள் வராமல் தடுக்கப்படும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் ஆணையாளர் மணி தெரிவித்தார்.
சாத்தூர் நகர்மன்றக்கூட்டம் புதன்கிழமை தலைவர் டெய்சிராணி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
உறுப்பினர் இளங்கோவன்: நகர்ப் பகுதியில் மாடுகள் மற்றும் குரங்குள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பெரும்இடையூறு ஏற்படுகிறது. சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் உள்ள தனியார் விடுதியில் கார் நிறுத்தும் இடம் அமைக்கப்படவில்லை. அப்படியிருந்தும் நகராட்சி அந்த விடுதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாலித்தீன் பைகள் அதிகமாக பயன்படுத்தபட்டு வருகிறது. மேலும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்மன்றத் தலைவர் ஆகியோர் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும்.
ஆணையாளர்: மாடுகள் மற்றும் குரங்குளை நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை குறைக்க ஏற்கெனவே கடைகளில் சோதனை நடத்தபட்டுள்ளது. மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியில்லாமல் விடுதி செயல்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணன்: சாத்தூர் பேருந்து நிலையத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட இலவச கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும்.
ஆணையாளர்: இலவச கழிப்பறைக்கு சரியான பாதுகாப்பு இல்லை. சமூக விரோதிகள் கழிப்பறையை பூட்டிவிட்டு செல்கின்றனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் பொறியாளர், நகர அமைப்பு அலுவலர், சுகாதாரத் துறை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.