Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கட்டிடங்களுக்கான வரி விதிப்பை ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு கமிஷனர் தகவல்

Print PDF
தினத்தந்தி                     12.05.2013

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கட்டிடங்களுக்கான வரி விதிப்பை ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு கமிஷனர் தகவல்


வேலூர் மாநகராட்சி பகுதியில் கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி சரியான முறையில் விதிக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் தெரிவித்தார்.

வரி விதிப்பு


வேலூர் மாநகராட்சி வார்டுகளில் தினந்தோறும் வீடுகள், கட்டிடங்கள், விடுதிகள், வணிக வளாகம் போன்றவை கட்டப்பட்டு வருகின்றன. அதுபோல பல பகுதிகளில் வீடுகள், விடுதிகளாகவும் மாற்றப்படுகின்றன.

ஆனால் புதிய கட்டிடங்களுக்கு மாநகராட்சியில் வரி போடுவதில்லை என்றும், கட்டிட உரிமையாளரே சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி எங்கள் கட்டிடத்துக்கு வரி போடுங்கள், அந்த ரசீது பல காரியங்களுக்கு தேவைப்படுகிறது என்று கேட்டாலும் வரி போடுவதில்லை என்கிற புகாரும் நிலவுகின்றன. இன்னொரு தரப்பில் சில கட்டிடங்களுக்கு மிக குறைவான வரியே விதிக்கப்பட்டுள்ளது என்றும், வீடுகளை விடுதிகளாக மாற்றிய பிறகும் விடுதிக்கான வரியை (அதிக வரி) விதிக்காமல் குறைந்த வரியே (அதாவது ஏற்கனவே வீட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த வரியே) வசூலிக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

அத்துடன் சரியான வரியை விதித்து வரி வசூல் பணியை முடுக்கிவிட்டால் மாநகராட்சிக்கு போதுமான வருமானம் கிடைக்கும் என்றும் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் கோதண்டபாணி மற்றும் கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த கமிஷனர் ஜானகி, வரி விதிப்பை ஆய்வு செய்ய ‘ஒரு கமிட்டி’ அமைக்கப்படும் என்றார்.

பணி தொடங்கி விட்டது


அந்த கமிட்டி அமைக்கப்பட்டு விட்டதா? அந்த கமிட்டி யார் தலைமையில் இயங்கும் என்பது பற்றி கமிஷனரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

வேலூர் மாநகராட்சியில், தாராபடவேடு, சத்துவாச்சாரி, வேலூர், சேண்பாக்கம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. அந்தந்த மண்டல அலுவலர் தலைமையில் வரி விதிப்பை ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது.

அந்த கமிட்டியில் வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர் ஆகிய 4 பேர் உள்ளனர்.

அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதா? சரியான வரி விதிக்கப்பட்டுள்ளதா? அல்லது குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளதா? வீடுகளை விடுதிகளாக மாற்றிய பிறகு விடுதிக்கான வரி விதிக்கப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள். இதற்கிடையே வீட்டு உரிமையாளர்களோ அல்லது கட்டிட உரிமையாளர்களோ ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்பினால் அவர்கள் அந்தந்த மண்டல அலுவலகம் சென்று சம்மந்தப்பட்ட அலுவலரை சந்தித்து கூறலாம்.

நடவடிக்கை

மேலும் அந்த கமிட்டியிடம் வருகிற 31–ந்தேதிக்குள் ஆய்வை முடித்து அறிக்கை தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.
 

பசுமலை உணவகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை: காலாவதியான உணவுப்பொருள் பறிமுதல்

Print PDF
தினமணி         10.05.2013

பசுமலை உணவகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை: காலாவதியான உணவுப் பொருள் பறிமுதல்


பசுமலையில் தனியார் உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருள்களை புதன்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாநகராட்சி நகர்நல அலுவலர் யசோதாமணி தலைமையில் அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதில் குளிர்சாதனப் பெட்டியில் காலாவதியான உணவுப் பொருள்களை வைத்திருந்ததாகக் கூறி அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, நகர்நல அலுவலர் கூறுகையில்: இந்த உணவகத்தில் காலையில் சாப்பிட்ட ஒருவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆணையர் உத்தரவின்பேரில் இந்த உணவகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஏற்கெனவே சமைத்த உணவுப் பொருள்கள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், முறையாக சுத்தம் செய்யப்படாத இறைச்சி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தோம். மேலும் இந்த உணவகத்துக்கான உரிமமும் புதுப்பிக்கப்படவில்லை. அதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இதுபோல தரமில்லாத, காலாவதியான உணவுப் பொருள்களை நுகர்வோருக்கு விற்கும் உணவகங்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய 0452-2530521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் ரத்தினகுமார், வீரன். சங்கரப்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.
 

தாராபுரம் நகராட்சி முன் ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் இடிப்பு

Print PDF
தினத்தந்தி       10.05.2013

தாராபுரம் நகராட்சி முன் ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் இடிப்பு


தாராபுரம் நகராட்சி முன் இடியும் நிலையில் இருந்த ஓட்டலை நகராட்சி நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

தாராபுரம் நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆபத்தான கட்டிடம்


தாராபுரம் நகராட்சி நுழைவு வாயிலை ஒட்டி 700 சதுர அடி பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் நூலகமாக செயல்பட நகராட்சி அனுமதி அளித்திருந்தது. அதன்படி நூலக வரியாக ஆண்டுக்கு ரூ.1250 செலுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இந்த நூலக கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த தனிநபர் அதில் நூலகம் நடத்தாமல் அதை ஓட்டலாக மாற்றி வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு இருப்பதும், இதற்கு தினமும் வாடகையாக ரூ.450 வசூல் செய்து வந்ததும், முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்று இருப்பதும், மேலும் ஓட்டல் அருகே பெட்டிக்கடை நடத்த ரூ.20 ஆயிரம் முன்பணம் வாங்கி, பெட்டிக்கடைக்கு தினமும் ரூ.50 வாடகை வசூல் செய்து வந்திருப்பதையும் நகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கட்டிடம் இடிப்பு

மேலும் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் பழுதாகி இடிந்து விழும் நிலையில் இருந்ததால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஓட்டலை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீசு அனுப்பியது. இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த மழையில் ஓட்டலின் உள்பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது.

எனவே மேலும் தாமதித்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என கருதி, நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார், உத்தரவின் பேரில் நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி மற்றும் நகராட்சி ஊழியர்கள் சென்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த ஓட்டலை இடித்து தள்ளினார்கள். இதையடுத்து அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி அம்மா உணவகம் திறக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 


Page 214 of 506