Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி மன்றக் கூட்டம்: 133 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Print PDF
தினமணி            27.04.2013

மாநகராட்சி மன்றக் கூட்டம்: 133 தீர்மானங்கள் நிறைவேற்றம்


சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் மொத்தம் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மொத்தம் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

20 பள்ளிகளில் ஆங்கிலம்: 20 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதல் வகுப்பு தொடங்கப்பட்டு ஆங்கில வழிக் கல்வி விரிவுப்படுத்தப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்படிருந்தது. இப்போது சென்னையில் 99 பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனை விரிவுப்படுத்தும் வகையில் மேலும் 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல, 10 சென்னைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் புதியதாக தொடங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் பிரதான சாலையில் உள்ள பழைய மருந்தகம் மற்றும் பெண்கள் மருத்துவமனையை இடித்து விட்டு, 24 மணிநேர மகப்பேறு மருத்துவமனை கட்டவும், ஆலந்தூர் செüரி தெருவில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், துப்புரவு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கவும், பல்வேறு பணிகளுக்கு பணியாணை வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

"கோவை மாநகராட்சிப் பகுதியில் நாய் வளர்க்க உரிமம் பெற வேண்டும்'

Print PDF
தினமணி        26.04.2013

"கோவை மாநகராட்சிப் பகுதியில் நாய் வளர்க்க உரிமம் பெற வேண்டும்'


கோவை மாநகராட்சியில் நாய் வளர்ப்போர் இனி உரிமம் பெற்றாக வேண்டும்.

கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் பேசியது:

சாமி (திமுக): மாநகராட்சி எல்லைப் பகுதியில் பலர் பன்றி வளர்க்கின்றனர். இப்பன்றிகள் மாநகராட்சிப் பகுதிக்குள் வந்து செல்கின்றன. இதைத் தடுக்க வேண்டும்.

மாநகராட்சி சுகாதார அலுவலர் சுமதி: மாநகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் நாய் மற்றும் பன்றிகளைப் பிடித்து ஓரிடத்தில் வளர்க்கலாம்.

சாமி (திமுக): சாக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் அடைத்துக் கொள்வதால் தண்ணீர் பல இடங்களில் தேங்குகிறது. மழைக் காலம் துவங்கும் முன் தூர் வார வேண்டும்.

மேயர் செ.ம. வேலுசாமி: மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எனத் தனியாக பணியை நடத்தலாம். கல்வெர்ட்டுகளில் பிளாஸ்டிக் அடைத்துக் கொள்வதால் மழை நீர் தேங்குகிறது. பன்றிகளையும் நாய்களையும் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க தனியாக ஒரு கூட்டம் நடத்தலாம். நாய்களுக்குத் தனியாக உரிமம் வழங்கலாம். இதன் மூலம் தெரு நாய்களைத் தனியாக அடையாளம் காண முடியும்.

ராமமூர்த்தி (சி.பி.எம்.): மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க யாரும் முன் வருவதில்லை. ஏற்கெனவே பழுதாகியுள்ள ஆழ்குழாய்க்கிணறைப் பழுது நீக்கவும் யாரும் வருவதில்லை. குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க கூடுதல் தொகை தருவதில்லை என்று கூறப்படுகிறது.

மேயர் செ.ம. வேலுசாமி: ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப் பணம் கொடுப்பதில் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.

கிழக்கு மண்டலத் தலைவர் கே.ஆர்.ஜெயராம்: கிழக்கு மண்டலப் பகுதியில் தெருவிளக்குகள் பராமரிக்கப்படுவதில்லை. இதற்கு போதுமான வாகனங்கள் இல்லை.

துணை ஆணையர் சு.சிவராசு: தெருவிளக்குப் பராமரிப்புத் தொடர்பான பல்வேறு புகார்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 2 வாகனங்கள் மட்டும் உள்ளன. கூடுதலாக ஒரு வாகனம் வாங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சிப் பகுதியில் புதிதாக பிளம்பர்களுக்கு உரிமம் வழங்கும் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

இணையதளம் மூலம் வரி செலுத்துவது கட்டாயம்

Print PDF
தினமணி        26.04.2013

இணையதளம் மூலம் வரி செலுத்துவது கட்டாயம்


புதுச்சேரியில் ரூ.1 லட்சத்துக்கு மேல் வணிக வரி செலுத்துவோர் இனி கட்டாயம் இணையதளம் மூலமே அதனைச் செலுத்த வேண்டும் என்று வணிகவரித்துறை அறிவித்திருக்கிறது.

இது குறித்து வணிக வரித்துறை ஆணையர் ல.குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி, புதுச்சேரி வணிகவரித்துறை மூலம் பல்வேறு இணையதளச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் ஐ.ஓ.பி., பரோடா வங்கி, இந்தியன் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் மூலம் இணையதளம் மூலம் வரி செலுத்தும் வசதி செயல்படுத்தப்படுகிறது.  தற்போது மொத்த வரி வசூலில் 30 விழுக்காடு இணையதளம் மூலமே பெறப்படுகிறது. இந்த முறையில் வரி செலுத்துவதால், வணிகர்களின் கால விரயம் தவிர்க்கப்படுகிறது.

மேலும் தற்போது காசோலை, வரைவோலை மூலமும் வரி செலுத்துவது அதிகரித்துள்ளது. இவ்வாறு செலுத்துவதால், அவை வங்கிக்குச் சென்று அரசுக் கணக்கில் வரவு வைக்க 5 முதல் 10 நாள்கள் வரை ஆகிறது. ஆனால் இணையதளம் மூலம் வரி செலுத்தினால், அடுத்த நாளே அரசுக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

எனவே ரூ.1 லட்சத்துக்கு மேல் வரி செலுத்தும் வணிகர்கள், மே 1-ம் தேதி முதல் இணையதளம் மூலமே வரி செலுத்த வேண்டும்.  மேலும் இணையதளம் மூலம் ஒரு முறை வரி செலுத்தியிருந்தாலும், தொடர்ந்து அதன் மூலமே வரி செலுத்த வேண்டும்.  இதற்காக 5 வங்கிகளிலும் இருப்பு ஏதும் இல்லாமல் கணக்குத் தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட 5 வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு வைத்திராத வணிகர்கள், உடனடியாக அங்கு தங்கள் கணக்கைத் தொடங்க வேண்டும்.

மேலும் தங்களின் சொந்தக் கணக்கில் இருந்து, 5 வங்கிகளில் ஒன்றில் தொடங்கப்படும் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்து, அங்கிருந்து இணையதளம் மூலம் வரி செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Page 229 of 506