Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திற்பரப்பு அருவி: குத்தகைதாரர்கள் ஏலம் எடுக்காததால் பேரூராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் வசூல்

Print PDF
தினமணி       03.04.2013

திற்பரப்பு அருவி: குத்தகைதாரர்கள் ஏலம் எடுக்காததால் பேரூராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் வசூல்


குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவிக்கு நிகழாண்டிற்கான குத்தகையை எடுக்க குத்தகைதாரர்கள் முன்வராததால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் திற்பரப்பு அருவியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமை கடந்த ஆண்டு ரூ. 27,70,100- க்கு குத்தகை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிகழாண்டில் இந்த அருவிக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கு உரிமை வழங்குவதற்கான ஏலம் கடந்த மாதம் 15-ம் தேதி நடைபெற்றது.  இதில் ஒரே ஒரு குத்தகைதாரர் மட்டுமே வந்திருந்ததால் ஏலம் நடத்தப்படாமல் மாற்றி வைக்கப்பட்டு, கடந்த 30-ம் தேதி மீண்டும்  நடத்தப்பட்டது.

இதிலும் குத்தகைதார்கள் வரவில்லை. இந்நிலையில் ஏப்ரல் முதல் தேதி முதல் பேரூராட்சி சார்பில் இந்த அருவியில் நுழைவுக் கட்டணம், நீச்சல் குளத்தில் குளிக்கும் கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறது.   இதற்காக பேரூராட்சிப் பணியாளர்களில் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயலர் அலுவலர் சுப்புராஜ் கூறியதாவது:

 இரண்டு முறை ஏலம் அறிவிக்கப்பட்ட பின்பும் அருவியில் நுழைவுக்கட்டணம் வசூலிக்க போதிய குத்தகைதாரர்கள் வரவில்லை.

இதனால் பேரூராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  அடுத்த ஏலம் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

குலசேகரம் சந்தை: திற்பரப்பு அருவி போன்று குலசேகரம் பொது சந்தையில் தீர்வைக் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலத்திலும் போதிய குத்தகைதாரர்கள் வரவில்லை. இதனால் இங்கும் பேரூராட்சி ஊழியர்கள் தீர்வைக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.
 

9 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த ஆலோசனை

Print PDF
தினமணி       03.04.2013

9 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த ஆலோசனை


திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, ஆட்சியர் விஜய் பிங்ளே தலைமை வகித்தார். கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால், தண்டராம்பட்டு, தானிப்பாடி, கலசப்பாக்கம், சந்தவாசல், சேவூர், எஸ்.வி.நகரம், தேவிகாபுரம், தெள்ளாறு ஆகிய ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் விஜய் பிங்ளே ஆலோசனை நடத்தினார்.

இவ்வூராட்சிகள் அனைத்தும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையையும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு வருவாயும் கொண்டுள்ளன.

இவ்வூராட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்போது, செயல் அலுவலர், எழுத்தர்கள், வரி வசூலிப்பவர்கள், குடிநீர் பணியாளர்கள், தெருவிளக்கு பணியாளர்கள், பொது சுகாதாரப் பணியாளர் உள்ளடங்கிய புதிய நிர்வாக அமைப்பு தோற்றுவிக்கப்படும்.

மத்திய, மாநில அரசுகளின் நிதியைப் பெற்று பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், மின்விளக்கு பராமரிப்பு போன்ற மக்களின் அத்தியாவசிய பணிகளை சிறப்பாக செய்ய முடியும் என்று கூட்டத்தில் ஆட்சியர் விஜய் பிங்ளே தெரிவித்தார்.

கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்வகுமார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அமுதா குமாரசாமி (திருவண்ணாமலை), டி.ஜானகிராமன் (தண்டராம்பட்டு) மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

ஸ்ரீ விலி.யில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

Print PDF
தினமணி       03.04.2013

ஸ்ரீ விலி.யில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி


ஸ்ரீவில்லிபுத்தூர், ரெங்கநாதபுரம் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன், நகர் அ.தி.மு.க. செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்ற உறுப்பினர் நடராஜன், நகர்நல அலுவலர் ஐயப்பன் உள்ளிட்டோருடன் செவ்வாய்க்கிழமை நகரில் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.

ரெங்கநாதபுரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் பேசுகையில் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அனைத்து தரப்பு மக்களும் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி உழைத்து வருகிறார். கிராம மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தை தந்து வெண்மை புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அரசின் நிதியில் 4-ல் ஒரு பங்கு கல்வித்துறைக்கு வழங்கி மாணவர்கள் தரமான உயர் கல்வி பெற திட்டங்களை தந்துள்ளார். உலகளாவிய அறிவை பெற மாணவர்களுக்கு மடிக்கணினி.

குடும்ப பெண்களின் சுமையை குறைக்க மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படுகிறது. தமிழக அரசின் திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது.

காவிரி பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் இடம் பெறச் செய்தவர் ஜெயலலிதா. மின்சாரம் பற்றாக்குறை, முல்லைபெரியாறு அணை பிரச்னை என தமிழக பிரச்னைகளில் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. இவற்றிலும் தமிழக முதல்வர் தமிழகத்தின் நலன் காக்கப்படும் வகையில் போராடி வெற்றி பெறுவார் என்றார் அவர்.
 


Page 256 of 506