போடி நகர்மன்றக் கூட்டம்
போடி நகர்மன்ற சாதாரண மற்றும் அவசரக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், ஆணையர் எஸ். சசிகலா, துணைத் தலைவர் ஜி. வேலுமணி, பொறியாளர் ஆர். திருமலைவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சங்கரபாண்டியன்: போடி நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் எப்போது தொடங்கும், முடங்கிப் போயுள்ள நவீன எரிவாயு தகன மேடை செயல்படுமா என, உறுப்பினர் சங்கரபாண்டியன் கேள்வி எழுப்பினார். நிதியமைச்சரை அணுகி பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது. மானியம் கிடைத்தவுடன் நிறைவேற்றப்படும் என தலைவர் பதிலளித்தார்.
நவீன எரிவாயு தகன மேடை பணியாளர்களுக்கு ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அது மீண்டும் முறையாக செயல்படும் என ஆணையர் தெரிவித்தார்.
முரசுபாலு: வஞ்சி ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர் தரமாக இல்லாததால், பல இடங்களில் சேதமடைந்துள்ளது. ஒப்பந்தப் பணிகளை கண்காணிக்க வேண்டும் என உறுப்பினர் முரசுபாலு தெரிவித்தார்.
அழகர்: தெரு விளக்குகளைப் பராமரிக்க, பழுது பார்க்க ஹைட்ராலிக் இயந்திர வாகனம் வாங்க வேண்டும். போடி நகரில் பல இடங்களில் குடிநீரை மின்மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்துகின்றனர். நடவடிக்கை தேவை என உறுப்பினர் அழகர் தெரிவித்தார். அதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதிலளித்தார்.
சங்கர்: போடி நகராட்சி வாரச் சந்தையில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. வாரச் சந்தைக்கு வருபவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகிலுள்ள பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. போடி நகரில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் விதிமீறல் உள்ளது என உறுப்பினர் சங்கர் புகார் தெரிவித்தார். அதற்கு, வாரச் சந்தையை சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்படும் என தலைவர் பதிலளித்தார்.
கோபிநாத்: சென்னை, கோவை, திருப்பதி செல்லும் ஆம்னி பேருந்துகள் முறையின்றி நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி அதற்கென தனியாக இடம் ஒதுக்கி கட்டணம் வசூலித்தால், நகராட்சி வருவாயும் அதிகரிக்கும் என உறுப்பினர் கோபிநாத் தெரிவித்தார்.