Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பாதாள சாக்கடை இணைப்புக்கு லஞ்சம் தகவல் தெரிவிக்க நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமலர்                   02.04.2013

பாதாள சாக்கடை இணைப்புக்கு லஞ்சம் தகவல் தெரிவிக்க நகராட்சி வேண்டுகோள்


காஞ்சிபுரம்:பாதாள சாக்கடை இணைப்பு தர, யாராவது லஞ்சம் கேட்டால், உடனடியாக தகவல் தரலாம் என, காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சியில், 1975ம் ஆண்டு பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டது. சமீபத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பில் விரிவுபடுத்தப்பட்டது. நகரில், 39 ஆயிரம் வீடுகளுக்கு, பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் வசதி உள்ளது.

இதுவரை, 15,700 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை விரிவாக்கப் பகுதியில், இணைப்பு கேட்டு, 300 பேர் விண்ணப்பித்துள்ளனர். பழைய இணைப்பு உள்ள பகுதிகளில், ஒரு சிலர் மட்டும் இணைப்புக்கு காத்திருக்கின்றனர்.

பாதாள சாக்கடை இணைப்புக்கு விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், நகராட்சியில் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, இணைப்பு வழங்கப்படுவதாகவும், இல்லையெனில் இழுத்தடிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, நகராட்சி பொறியாளர் சுப்புராஜ் கூறுகையில், ""பாதாள சாக்கடை பழைய இணைப்பு உள்ள பகுதிகளில், விண்ணப்பித்த உடனே இணைப்பு வழங்கி வருகிறோம். விரிவாக்கப் பகுதிகளில் மட்டும் தாமதமாகிறது. இணைப்புக்கு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக, புகார் எதுவும் வரவில்லை. அவ்வாறு ஊழியர்கள் கேட்டால், நேரடியாக என்னிடம் வந்து தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

வி.கே.புரம் நகராட்சி கூட்டம்

Print PDF
தினகரன்       02.04.2013

வி.கே.புரம் நகராட்சி கூட்டம்

வி.கே.புரம்: வி.கே.புரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவி மனோன்மணி தலைமையில் நடந்தது. துணை தலைவர் கணேசபெருமாள், ஆணையர் அயூப்கான் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சியில் புரோக்கர்களுக்கு கிடைக்கும் மரியாதை எங்களுக்கு இல்லை என உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். நகராட்சி தலைவி மனோன்மணியும் இதே குற்றச்சாட்டை தெரிவித்தார். இந்த புகாரை ஆணையர் அயூப்கான் மறுத்தார். இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

கணித மேதை ராமானுஜன் வீட்டில் அருங்காட்சியகம்!

Print PDF
தினமணி       02.04.2013

கணித மேதை ராமானுஜன் வீட்டில் அருங்காட்சியகம்!


கணித மேதை ராமானுஜன் பிறந்த வீட்டில் கணித அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதற்காக, ஈரோடு மாநகராட்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.மணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:   கணித மேதை ராமானுஜன் பிறந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும், அவர் வீடு இருக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கணித மேதை ராமானுஜன் பிறந்த இடத்தில் கணித அருங்காட்சியகம் அமைக்க கருத்துரு அனுப்ப உள்ளதாக மார்ச் 27-ல் நடந்த ஈரோடு மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈரோட்டில் ராமானுஜன் பிறந்த வீட்டை பார்வையிட ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து செல்கின்றனர். ராமானுஜனின் 125-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு 2012-ம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கணிதமேதை பற்றிய ஆவணப்படத்தை எடுத்தது. மராத்தி இயக்குநர் நந்தன் பகோடியா இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஈரோட்டில் படப்பிடிப்பு நடந்தபோது மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சியின் இந்த அறிவிப்பால் கணித, அறிவியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 


Page 258 of 506