Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சித்திரைத் திருவிழா கடைகளை ஏலம் விட பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF
தினமணி         30.03.2013

சித்திரைத் திருவிழா கடைகளை ஏலம் விட பேரூராட்சி கூட்டத்தில் முடிவு


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் அமைக்கப்படும் கடைகளுக்கான வாடகையை ஏலம் விட பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ஜோசப்ராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காளீஸ்வரி, செயல் அலுவலர் சஞ்சீவி, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை சுகாதார மேற்பார்வையாளர் பாலு வாசித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

கவுன்சிலர் முனியசாமி: நகரில் நோய் தாக்கிய நாய்கள் அதிகமாக நடமாடுகின்றன. இதனால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல அஞ்சும் நிலை உள்ளது.

நாய்களை ஒழிக்க வேண்டும். நகர் பகுதியில் வைகையாற்றில் பெண்கள் பெட்டிகளிலும் தள்ளுவண்டிகளிலும் மணல் அள்ளிச் செல்வதை தடை செய்ய வேண்டும்.

திருவிழா கடைகளுக்கு ஏலம் நடத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

கவுன்சிலர் மோகன்தாஸ்: பேரூராட்சி எல்கையை அனைத்து பகுதிகளிலும் வறையரை செய்ய வேண்டும் என்றார்.

மேலும் பல கவுன்சிலர்கள் பேசும்போது மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும், தங்கள் வார்டு குறைகள் குறித்தும் பேசினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் சஞ்சீவி பதிலளித்தனர்.  கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

விளம்பரப் பலகைகள் வைக்க புதிய விதிமுறைகள்

Print PDF

தினமணி                      29.03.2013

விளம்பரப் பலகைகள் வைக்க புதிய விதிமுறைகள்


சென்னை மாவட்ட பகுதிகளில் நிரந்தர விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் வைப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய விதிகளின்படி விளம்பர பேனர்கள் மற்றும் தட்டிகள் 6 நாள்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு: விளம்பரப் பலகைகள் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் அமைக்க 15 நாள்களுக்கு முன் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்ய வேண்டும்.

நிரந்தர விளம்பரப் பலகை வைப்பதற்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் அதன் உயரம் மற்றும் பிற அளவுகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியன பற்றிய விவரங்கள் தகுதிவாய்ந்த பொறியாளரிடமிருந்து ஒப்புதல் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தனியார் இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கான தடையில்லாச் சான்று மற்றும் மாநில அல்லது மத்திய அரசு நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் அதாவது உதவி செயற்பொறியாளர் அல்லது உதவி கோட்டப் பொறியாளர் நிலைக்கு குறையாத பதவி வகிக்கும் அலுவலர்களிடம் தடையில்லாச் சான்று பெற்று இணைக்க வேண்டும். சென்னை மாநகராட்சி நிலமாக இருந்தால் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.

இதுதவிர வாகனங்கள், பாதசாரிகள், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு விளம்பரப் பலகைகள் வைப்பதால் எவ்வித இடையூறும் இல்லை என சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர்களிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்று விண்ணப்பிக்கும் மனுவுடன் வைக்க வேண்டும்.

விளம்பர பலகைகள் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் ஆகியவற்றை கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அருகில் வைப்பதற்கு அனுமதி இல்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குள்பட்ட இடங்களில் அனுமதி இல்லை. அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும்.

விளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைக்க விரும்புவோர் அதற்குரிய படிவும் 1 மாதிரியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் உசூர் சிரஸ்ததாரை (பொது) தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கும் முறையைத் தெரிந்து கொள்ளலாம்.

டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் வைக்கப்படும் நாள் மற்றும் அகற்றப்படும் நாள் இரண்டும் சேர்த்து 6 நாள்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

குடிநீரை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை

Print PDF
தினமணி         29.03.2013

குடிநீரை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை


குடிநீரை கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முறைகேடாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ந.மணிகண்டன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கீழ்குந்தா பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீராதாரங்களில் மழையின்மையால் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

மேலும் குடிநீரை விவசாயம், கட்டுமானப் பணிகள், வாகனங்களை கழுவுதல், வியாபார நோக்க பயன்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமானது. அத்துடன் பொது குடிநீர் இணைப்புக் குழாய்களில் ரப்பர் குழாய்கள் இணைத்து குடிநீரை எடுப்பதும் முறைகேடானது.

இத்தகைய முறைகேடான செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 


Page 262 of 506