Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நிலுவையைச் செலுத்தாத குத்தகைதாரர்களின் கடை உரிமம் ரத்து

Print PDF

தினமணி             25.01.2014 

நிலுவையைச் செலுத்தாத குத்தகைதாரர்களின் கடை உரிமம் ரத்து

திருநெல்வேலி மாநகராட்சியின் கடைகளுக்கான குத்தகை நிலுவையைச் செலுத்தாதவர்களின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, பாளையங்கோட்டை மண்டல மாநகராட்சி நிர்வாக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட மாநகராட்சிக் கடைகளை குத்தகைக்கு எடுத்துள்ள குத்தகைதாரர்கள், ஒப்பந்த விதிப்படி மாதந்தோறும் 10ஆம் தேதிக்குள் வாடகையைச் செலுத்தவேண்டும். தவறும்பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும். ஆனால், பாளையங்கோட்டை மண்டலத்தில் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் பலமுறை அறிவிப்புகள் வழங்கியும் குத்தகை தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.

எனவே, நிலுவையில் உள்ள வாடகையை விரைந்து செலுத்த வேண்டும். இல்லையெனில், முன்அறிவிப்பு இல்லாமல் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலத்துக்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

 

ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் திருச்சி மாநகராட்சியில் களஆய்வு

Print PDF

தினமணி             25.01.2014 

ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் திருச்சி மாநகராட்சியில் களஆய்வு

ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் 17 பேர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் உள்ளாட்சி நிர்வாக நடைமுறைகள் குறித்த களஆய்வுப் பயிற்சியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.

  மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர் ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்களுக்கு மாநகராட்சி நடைமுறைகளை விளக்கினர்.

  சுகாதாரப் பணிகள், குடிநீர் விநியோகம், புதை சாக்கடைத் திட்டம், பிறப்பு- இறப்புப் பதிவு போன்றவை குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், செயற்பொறியாளர்கள் எஸ். அருணாசலம், எஸ். நாகேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் குழுவுக்கு ஆட்வர்டு குமார் சிங் தலைமை ஏற்று அழைத்து வந்திருந்தார்.

 

திருமண மண்டபம், தயா பார்க்கிற்கு முறையான வரி விதிக்க மாநகராட்சி குழு நடவடிக்கை

Print PDF

தினமணி            24.01.2014   

திருமண மண்டபம், தயா பார்க்கிற்கு முறையான வரி விதிக்க மாநகராட்சி குழு நடவடிக்கை

மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் திருமண மண்டபம் மற்றும் மாட்டுத்தாவணி அருகிலுள்ள தயா வலைத்தள பூங்காவுக்கு முறையான வரிவிதிப்பு செய்ய மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்தினருக்குச் சொந்தமான திருமண மண்டபம் மதுரை டிவிஎஸ் நகர் பகுதியிலும், தயா வலைத்தள பூங்கா மாட்டுத்தாவணி பகுதியிலும் அமைந்துள்ளன.

 இந்த இரண்டுக்கும் மிகக்குறைவான வரிவிதிப்பு செய்திருப்பதுடன், இதற்காக அந்தப்பகுதி முழுவதுமே வரி குறைப்பு செய்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து, சமீபத்தில் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நியாயமான வரியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுக் கூட்டம் தலைவர் எஸ்டி ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆணையர்(கணக்கு) ஜோசப், மண்டல நிர்வாக அலுவலர்கள் சுரேஷ்குமார், ரங்கராஜன், பழனிவேல், உதவி வருவாய் ஆய்வாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் அலெக்சாண்டர், பாலமுருகன், காமராஜ், சேகர், நிதி ஆலோசகர் ஜெயபால், மாமன்ற உறுப்பினர்கள் ராஜா சீனிவாசன், திரவியம், குமார், இந்திராணி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வார்டு 92 சத்தியசாய் நகர் பகுதியில் (தயா திருமண மண்டபம் உள்ளிட்ட) வரிவிதிப்பு குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் முறையாக ஏ பிரிவு வரிவிதித்து மாநகராட்சிக்கான வருவாயை மீட்க தீர்மானிக்கப்பட்டது.

 மாட்டுத்தாவணி-புதூர் 100 அடி சாலைப்பகுதி (தயா பார்க் உள்ளிட்ட) வணிகக் கட்டடங்களுக்கு மிகக்குறைவான டி பிரிவில் சேர்த்து வரிவிதிப்பு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்தப்பகுதியை ஏ பிரிவு வரிவிதிப்பு செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இந்தத் தீர்மானங்கள் மாமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் மேற்கண்ட பகுதிகளில் முறையான வரிவிதிப்புக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

 


Page 28 of 506