தினமலர் 24.03.2013
மொபைல் போனில் குடிநீர் மோட்டார் இயக்கும் திட்டம் பொள்ளாச்சியில் அறிமுகமாகிறது
பொள்ளாச்சி:குடிநீர் வினியோகத்துக்கு மோட்டார் பம்ப்புகளை, மொபைல் போனில் இயக்கும் புதிய தொழில் நுட்பத்தை பொள்ளாச்சியில் அறிமுகமாக உள்ளது.
பொள்ளாச்சிக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் மின்வெட்டு இருப்பதால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை சமாளிக்க; இருந்த இடத்திலிருந்தே மொபைல் போனில் குடிநீருக்கான மோட்டார் இயக்கும் திட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் செயல்படுத்தப்படஉள்ளது.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மொபைல் போனில் இருந்த இடத்திலிருந்தே குடிநீர்மின் மோட்டாரை இயக்கவும், நிறுத்தவும் முடியும். இதன் மூலம் மின்வெட்டுக்கு பின்பு மின்சாரம் வந்ததும், சம்ப் ஹவுசுக்கு நேரடியாக சென்று மோட்டாரை இயக்கவேண்டிய அவசியமில்லை.
சம்ப் ஹவுசிலுள்ள ஒரு மோட்டாரில் நகராட்சி குடிநீர் பிரிவு அதிகாரிகள், குடிநீர் வினியோகிப்பாளர், நகரபொறியாளரின் மொபைல் போன் எண்கள் பதிவு செய்யப்படும். அதிலிருந்து குறிப்பிட்ட எண்ணை டயல் செய்வதின் மூலம் மின் மோட்டார் இயங்கும்.அதே போல் குறிப்பிட்ட எண்ணை நாம் திரும்ப டயல் செய்தால் மோட்டார் இயக்கம் நிறுத்தப்படும்.
இதன் வாயிலாக இரவு நேரத்திலோ, மின்சாரம் இல்லாத நேரத்திலோ, மோட்டாரை இயக்குவதற்காக காத்திருப்பதை தவிர்க்கலாம். ஆப்பரேட்டருக்காக காத்திருக்காமல், அதிகாரிகளே நேரடியாக மோட்டாரை இயக்கலாம்.
பதிவு செய்யப்படாத மொபைல் எண் தவிர மற்றவர்கள் மோட்டாரை இயக்கினால் அதுபற்றிய தகவல் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கும். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 40 இடங்களில் ரூ. 5 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.