தினமணி 24.01.2014
பஸ் நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் திடீர் ஆய்வு
திண்டுக்கல் பஸ் நிலையத்தில், நகர்மன்றத் தலைவர் வி. மருதராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், நடைமேடை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
பஸ் நிலைய வளாகத்தில் உடைந்து காணப்படும் கழிப்பறைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல், நடைபாதையை ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கு இடையூறாக கடை அமைப்பவர்களைக் கண்காணிக்க குறுகிய இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ளப்படும். பஸ் நிலையம் முழுவதையும் புதுப்பிக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயார் செய்தவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். நகர்மன்றத் தலைவர் ஆய்வுக்கு வருவதாகக் கூறிய அதிகாரிகள், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சில வியாபாரிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.