Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு: இணைப்பு துண்டிப்பு

Print PDF
தின மணி          23.02.2013

மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு: இணைப்பு துண்டிப்பு

வசந்த நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டதில், ஒரு வீட்டில் மின்மோட்டார் மூலம்  குடிநீர் திருடப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குடிநீர் இணைப்பையும் துண்டித்து ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.

வசந்த நகர் பகுதியில் வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு நடைபெறுவதாக ஆணையர் ஆர்.நந்தகோபாலுக்குப் புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அப்பகுதிகளிலுள்ள சந்தேகத்திற்கு இடமான வீடுகளில் ஆணையர் தலைமையில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

அப்போது வசந்த நகர் 3 ஆவது தெருவில் ஒரு வீட்டில் 30 அடி ஆழத்திற்கு உறைகிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் சேகரித்து வைத்து பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. அந்த வீட்டில் குடிநீர் திருட்டு நடந்த விதத்தை நேரில் ஆய்வு செய்த ஆணையர் குடிநீர் திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்மோட்டாரை  பறிமுதல் செய்தார். வீட்டிற்கான குடிநீர் இணைப்பை துண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, ஆணையருடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் அ.தேவதாஸ்,  பொறியாளர் சேகர், தொழில்நுட்ப உதவியாளர்கள் சேவியர், சுபா உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

பின்னர் ஆணையர் ஆர்.நந்தகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெற்றிருப்பவர்கள், மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவது சட்டப்படி குற்றம். குடிநீர் குழாய்களில் சட்டத்திற்கு புறம்பாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்களின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், காவல் துறையினர் மூலம் கிரிமினல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

ஆய்வின்போது, மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொறியாளர்கள் தங்களது வார்டு பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சாத வகையில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு குறித்து எனது (ஆணையர்) அலுவலக தொலைபேசி எண்: 0452- 2531116-ல் புகார் தெரிவிக்கலாம், எனத் தெரிவித்தார்.

Last Updated on Monday, 25 February 2013 11:49
 

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Print PDF
தின மணி          23.02.2013

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டம்.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மொத்தம் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மொத்தம் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆணையர் விக்ரம் கபூர் முன்னிலை வகித்தார்.

நிறும வரி மாற்றியமைப்பு: கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் நிறும வரியை மாற்றியமைக்கவும் இதற்கான கருத்துகளை பொதுமக்களிடம் பெறவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்களிடம் இருந்து எந்தவித ஆட்சேபங்களும் வராத நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நிறுமம் வரியை அமல்படுத்த தேவையான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள அரசை கோர இப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு: தேனாம்பேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையத்தை பயன்படுத்திக்கொள்ள புளுகிராஸ் ஆஃப் இந்தியா தொண்டு நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு வழங்கவும், அந்த அமைப்பின் சார்பிலேயே தடுப்பூசி மற்றும் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மலேரியா தடுப்புப் பணியாளர்களை நியமித்தல், பல்வேறு சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல், சுரங்கப் பாதைகள் அமைத்தல் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Monday, 25 February 2013 11:16
 

சாலைகளில் திரியும் மாடுகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF
தின மணி               21.02.2013

சாலைகளில் திரியும் மாடுகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என, மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மு. சீனி அஜ்மல்கான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை தொழுவத்தில் கட்டி வளர்க்க வேண்டும். அவ்வாறில்லாமல் தெருக்கள், சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக அலைய விடுவது தண்டனைக்குரிய குற்றம்.

தெருக்களில், சாலைகளில் அலைந்து திரியும் மாடுகளை மாநகராட்சிப் பணியாளர்கள் பிடித்து கோசாலைகளில் ஒப்படைக்கப்பார்கள். அவ்வாறு கோசாலைகளில் ஒப்படைக்கப்பட்ட மாடுகளைத் திரும்பப் பெற இயலாது.

மேலும், அந்த மாடுகளின் உரிமையாளர்கள் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய வகைக்கு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

Last Updated on Thursday, 21 February 2013 12:26
 


Page 283 of 506