தினமணி 23.01.2014
நகர்ப்புறங்களில் கழிப்பறை கட்டவும்சிறுகடன் வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர்
நகர்ப்புற மக்களும் எளிதில் கழிப்பறை கட்டுவதற்காக சிறுகடன்கள் வழங்கப்பட வேண்டும் என்றார் திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி.
திருச்சியில் புதன்கிழமை கிராமாலயா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் சுகாதாரத் திட்ட சிறுகடன் உதவி குறித்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:
கழிப்பறை பயன்படுத்துவதில் இன்னமும் கிராமப்புற மக்கள் விழிப்புணர்வு அடையவில்லை. கூடுதலாக இதற்காக பணியாற்ற வேண்டியுள்ளது.
நகர்ப்புறத்திலும் கழிப்பறை பயன்பாடு பெரும் சவாலாகவே இருக்கிறது. எனவே, நகர்ப்புற ஏழை மக்களும் எளிதில் கழிப்பறை பயன்படுத்தும் வகையில், சிறுகடன் உதவிகளை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் தண்டபாணி.
கருத்தரங்குக்கு வாட்டர் டாட் ஆர்க் அமைப்பின் தெற்கு ஆசிய முதுநிலை மேலாளர் ரேச்சல் புரம்பாஹ் தலைமை வகித்தார். கிராமாலயா நிறுவனர் எஸ். தாமோதரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
முழு சுகாதார இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசுத் துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என 75 பேர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.
கருத்தரங்கு வியாழக்கிழமை பிற்பகலில் நிறைவடைகிறது. வெள்ளிக்கிழமை கிராமப்பகுதிகளில் கடன் பெற்று கழிப்பறை கட்டியவர்களை நேரில் சென்று சந்திக்கின்றனர்.