தினமலர் 25.11.2010
மழையால் பாதிப்பு; கமிஷனர் ஆய்வு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி வார்டு பகுதிகளில் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றோர பகுதிகளில் சாக்கடை கழிவுமற்றும் குப்பை, கால்வாயில் அடைத்துக் கொள்வதால் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்கவும், சுகாதார பணியில் தீவிரம் காட்டவும், நேற்று கமிஷனர் ஜெயலட்சுமி வார்டு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலேஜ் ரோடு, பாளையக்காடு, கோல்டன் நகர், தென்னம் பாளையம், முத்தையன் கோவில், வெள்ளியங் காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினார். தென்னம்பாளையம் முத்தையன் கோவில் அருகில் உள்ள ஓடை பாலத்தில் அடைப்பை அகற்ற உத்தரவிட்டார். சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில், துப்புரவு பணியாளர்கள் 15 பேர் லோடர் மற்றும் டிப்பர் லாரியை பயன்படுத்தி அடைப்பை நீக்கினர். மற்ற பகுதிகளில், சாக்கடை மற்றும் தரைப்பால அடைப்புகளையும், மழைநீருடன் கலந்து தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்தவும், சுகாதாரமற்ற பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கவும், குப்பையை அகற்றவும் அறிவுறுத்தினார்.