Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க அரசு செயலர் உத்தரவு

Print PDF

தினமலர்                 22.11.2010

வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க அரசு செயலர் உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அரசு முதன்மைச் செயலர் விஜயகுமார் ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுகந்தி உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ""வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் அனைத்து திட்டப் பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாக முடித்து அவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்,'' என அரசுத்துறை அதிகாரிகளுக்கு அரசு செயலாளர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து வேளாண்மைத் துறையின் சார்பில் விவசாயிகள் 50 பேருக்கு ரூ.5.38 லட்சம் மதிப்பிலான மார்க்கர் கருவி, களை எடுக்கும் கருவி, இடுபொருட்கள் போன்றவற்றை விஜயகுமார் வழங்கினார். மேலும் விவசாயிகள் 40 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. கறம்பக்குடி பஞ்சாயத்து யூனியனுகுட்பட்ட மழையூரில் இயங்கிவரும் அரசு மாணவர் விடுதியின் செயல்பாடு, தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி ஆகியவற்றை அவர் நேரில் ஆய்வு செய்தார். வேளாண் இணை இயக்குனர் தங்கவேலு, மகளிர் திட்ட அலுவலர் திருவரங்கம் உட்பட அதிகாரிகள் பலர் உடன்சென்றனர்.

 

கடந்த 2 ஆண்டுகளில் அனுமதியற்ற கட்டிடம் தொடர்பான 5,000 புகார்கள் மீது நடவடிக்கை

Print PDF

தினகரன்                 20.11.2010

கடந்த 2 ஆண்டுகளில் அனுமதியற்ற கட்டிடம் தொடர்பான 5,000 புகார்கள் மீது நடவடிக்கை

புதுடெல்லி, நவ. 20: அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக வந்த 10,000 புகார்களில் 5,000 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கூறினார்.

லட்சுமி நகரில் கட்டிடம் இடிந்து 70 பேர் பலியானார்கள். அனுமதியற்ற கட்டிடங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த சம்பவம் நடந்ததாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ஜே.கே.சர்மா(காங்.) கூறுகையில், "மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதியற்ற கட்டிடங்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். கட்டிடத்தின் உயரத்தைப் பொறுத்து லஞ்சம் வாங்கியிருக்கின்றனர். அதற்காக ஓட்டல் மெனு போல லஞ்சம் வாங்குவதற்காக ஒரு பட்டியலையே அவர்கள் தயார் செய்து வைத்திருக்கின்றனர்" என்று குற்றம் சுமத்தினார்.

அந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா கூறுகையில், "2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக 9,568 புகார்கள் மாநகராட்சிக்கு வந்துள்ளன. அதில், 5,000 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே காலக்கட்டம் வரையில் 10,000 கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோதே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.

கிழக்கு டெல்லியின் பிரம்மபுரி பகுதியில், கடந்த ஜூலை மாதம் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் பலியானதைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற கட்டிடங்களை கண்டறிவதற்காக இன்ஜினியர் குழு அமைக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, "இன்னமும் குழு அமைக்கப்படவில்லை. காரணம் அதற்கு தகுதியான இன்ஜினியர்கள் மாநகராட்சியில் இல்லை. அதற்காக ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இன்ஜினியர் குழு அமைக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன" என்றார்.

"மாநகராட்சியின் கட்டிடத் துறையில் லஞ்ச அதிகாரிகளால்தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறதே?" என்ற கேள்விக்கு, "லஞ்சம் தொடர்பான புகார்கள் வந்தால் இலாகாபூர்வ விசாரணை அல்லது இதர அவசியமான நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கிவிடும். கட்டிட துறை போன்ற முக்கியமான துறைகளில் லஞ்ச அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. தவறுதலாக ஓரிருவர் நியமிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக கட்டிட துறை அதிகாரிகள் லஞ்சத்தில் திளைப்பதாக கூறக்கூடாது" என்றார்.

"கட்டிடம் இடிந்து 3 நாட்களாகியும் எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே" என்ற கேள்விக்கு, "இடைக்கால விசாரணை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மெஹ்ரா மேலும் கூறுகையில், "லட்சுமி நகரில் 38 கட்டிடங்களைச் சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பதால் அவை பாதுகாப்பற்ற கட்டிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த கட்டிடங்களை பலப்படுத்த முடியுமா என்று ஆராய்வோம். முடியாவிட்டால் இடித்து விடுவோம். ஆற்றுப்படுகையைச் சுற்றி 300 மீட்டர் தூரத்துக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கிய அல்லது தண்ணீர் கசிவு உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

"டெல்லியில் பெருகும் அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக தலைமை தகவல் ஆணையர் கடிதம் அனுப்பியதாக கூறியுள்ளாரே?" என்று ஒரு கேட்டதற்கு, "அவர் அனுப்பிய அனுமதியற்ற கட்டிடங்களின் பட்டியலின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

 

கடலோர பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்கள்

Print PDF

தினகரன்              20.11.2010

கடலோர பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்கள்

மும்பை, நவ. 20: தென்மும்பை கடலோரப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் குறித்தும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிரா மாநில வருவாய்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்மும்பை கடலோரப் பகுதிகளான கொலாபா, கபே பரேட், பேக்பே மற்றும் மெரைன் லைன் ஆகியன கடலோர ஒழுங்குமுறை பிராந்தியங்களாகும். இந்த பகுதிகளில் கட்டுமான பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடலோர ஒழுங்குமுறை பிராந்தியம் விதியை மீறி, சட்டவிரோதமாக பல கட்டிடங்கள் இப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் சொசைட்டி ஆகும். இந்நிலையில் கடலோரப் பகுதிகள் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள் குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில், ரெசிடென்ட்ஸ் அசோசியேசன் என்ற அமைப்பு பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், 2003ம் ஆண்டுக்கு பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை.

முன்னதாக கடந்த 2000ம் ஆண்டில் வி. இந்துல்கர் என்பவரை நீதிமன்ற கமிஷனராக நியமித்த உயர் நீதிமன்றம், கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பணித்தது. 2001, ஜனவரி 31ம் தேதி இந்துல்கர் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கடலோர ஒழுங்குமுறை பிராந்தியம் விதியை மீறி சட்டவிரோதமாக பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என்றும் அவற்றை இடிக்க வேண்டும் என்றும் இந்துல்கர் பரிந்துரைத்திருந்தார். பரிந்துரையை ஏற்று, சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை இன்றளவும் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி மொஹித் ஷா மற்றும் நீதிபதி எஸ். காதாவாலா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த பெஞ்ச், தென்மும்பை கடலோரப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் குறித்தும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மாநகராட்சி கமிஷனர், மும்பை கலெக்டர், துணை கலெக்டர்(ஆக்கிரமிப்பு) ஆகியோர் டிசம்பர் 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2011, ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தது.

 


Page 321 of 506