Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பொது இடத்தில் புகைத்த 19 பேருக்கு அபராதம்

Print PDF

தினமணி                    16.11.2010

பொது இடத்தில் புகைத்த 19 பேருக்கு அபராதம்

வேலூர், நவ. 15: வேலூர் நகரில் பொது இடங்களில் புகைப்பிடித்த 19 பேருக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி நகர் நல அலுவலர் கோவிந்தன் மற்றும் ஊழியர்கள், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சாரதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தடையை மீறி பொது இடத்தில் புகைப்பிடித்த 19 பேரிடம் இருந்தும் தலா ரூ. 100 வீதம் அபராதம் வசூலித்தனர். பல மாதங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் திடீரென மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது, பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ரூ.70 லட்சம் பாக்கி: காசிபாளையத்துக்கு குடிநீர் "கட்'

Print PDF

தினமலர்                16.11.2010

ரூ.70 லட்சம் பாக்கி: காசிபாளையத்துக்கு குடிநீர் "கட்'

ஈரோடு: சூரம்பட்டி நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் 70 லட்சம் ரூபாய் பாக்கி வைத்த, காசிபாளையம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகத்தை, நிறுத்தியது.ஈரோடு காவிரியாற்றில் வைராபாளையம் காவிரியாற்றிலிருந்து குடிநீர் எடுத்து, ஈரோடு, வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி பகுதிளுக்கு அன்றாடம் குடிநீர் விநியோகமாகிறது. ஈரோடு மாநகராட்சியை ஒட்டியுள்ள காசிபாளையம் நகராட்சி 21 வார்டுகள் கொண்ட பெரிய நகராட்சியாக உள்ளது. நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க, வெண்டிபாளையம் காவிரியாற்றிலிருந்து, தண்ணீர் எடுத்து, அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திரித்து, வார்டு பகுதிகளுக்கு விநியோகிக்கிறது.

இது தவிர சூரம்பட்டி நகராட்சி பகுதிக்கு செயல்படுத்தும் குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 28 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.சூரம்பட்டி நகராட்சி குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் பெறும் காசிபாளையம் நகராட்சி, குடிநீர் கட்டணத்தை, நீண்ட காலமாக செலுத்தாமல், கிடப்பில் போட்டுவிட்டது. சூரம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணம் செலுத்த கூறி கடிதம் அனுப்பியும், காசிபாளையம் நகராட்சி நிர்வாகம் கட்டணத்தை செலுத்தவில்லை. 70 லட்சம் ரூபாய் வரை காசிபாளையம் நகராட்சி நிர்வாகம் பாக்கி வைத்ததால், நேற்று காலை சூரம்பட்டி நகராட்சி நிர்வாகம், காசிபாளையம் பகுதிக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்தியது.இதையடுத்து, நேற்று காலை 12 மணிக்கு காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்பிரமணியன், செயல்அலுவலர், நகராட்சி இன்ஜினியர் ஆகியோர், சூரம்பட்டி நகராட்சி தலைவர் லோகநாதன், செயல்அலுவலர் மேரியம்மாள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், மாதாந்திரக் கட்டணத்துடன் கூடுதலாக 2.5 லட்சம் ரூபாய் வீதம் செலுத்தி, பாக்கித் தொகையை செலுத்துவதாக காசிபாளையம் நகராட்சி தலைவர் கூறியதையடுத்து, நேற்று காலை மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:சூரம்பட்டி நகராட்சி வழங்கும் குடிநீருக்கான கட்டணத்தை முந்தைய காலத்திலிருந்து செலுத்தாமல், விட்டதால், 70 லட்சம் ரூபாய் வரை பாக்கி உள்ளது. இதை முழுமையாக கட்டாததால், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குவதை நிறுத்திவிட்டது. தலைவர் மற்றும் செயல்அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாதம் தோறும் செலுத்தும் தொகையில் கூடுதலாக செலுத்துவதாக கூறினோம். இதை ஏற்று மீண்டும் தண்ணீர் திறந்துவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 

லால்பாக் பூங்காவில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்               15.11.2010

லால்பாக் பூங்காவில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை மாநகராட்சி நடவடிக்கை

பெங்களூர், நவ. 15:பெங்களூர் புகழ் பெற்ற லால்பாக் பூங்காவில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகிறது.

பெங்களூர் மாநகர மக்களின் பொழுது போக்கு அம்சமாகவும், கண்கவர் சுற்றுலா தலமாகவும் லால்பாக் பூங்கா உள்ளது. இதில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரகணக்கானோர் வாக்கிங் செல்கிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பூங்காவை பார்க்க வரும் பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதால், பூங்காவின் மாசு நிரம்பி பாதிப்பை ஏற்படுத்துகிறது. குளிர்பான பாட்டீல், பிஸ்கட், சிப்ஸ் உள்பட பிளாஸ்டிக்கில் கொண்டு செல்லும் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தும் மக்கள் காதில் வாங்கி கொள்ளாமல் உள்ளனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பூங்காவின் அனைத்து நுழைவு வாயில்கள் மற்றும் பூங்கா உள்பகுதியில் முக்கிய இடங்களில் தயவு செய்து பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லாதீர்கள், பூங்கா சுத்தத்தை காப்பாற்றுங்கள்என்ற வாசகம் கொண்ட பெயர் பலகை வைக்க முடிவு செய்துள்ளனர். இரண்டொரு நாளில் பெயர் பலகை வைக்கப்படுகிறது. மேலும் பூங்காவை காணவருவோரை நுழைவு வாயிலில் காவலர்கள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால், வாங்கி வைத்து திரும்பி செல்லும் போது கொடுத்தனுப்பும் திட்டம் செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

காவலர்களை ஏமாற்றி பூங்காவுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோரை தடுத்து வெளியேற்றவும், அவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 


Page 323 of 506