தினமணி 10.11.2010
புதுவையில் விளம்பரத் தடை ஆணையை தளர்த்த முடிவு
புதுச்சேரி, நவ. 9: புதுவையில் பொது இடங்களில் விளம்பரம் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்த புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
÷புதுச்சேரியில் பொது இடங்களில் கட்-அவுட், பேனர், விளம்பரங்கள் செய்ய 2009-ல் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தடை உத்தரவை யாரும் மதிப்பில்லை. பெரும்பாலும் இந்தத் தடை உத்தரவை மீறி அரசியல்வாதிகளின் பிறந்தநாள், புதுச்சேரிக்கு வருகை தரும் முக்கிய கட்சி விஐபிக்கள் உள்ளிட்ட விழாக்களுக்கு அதிக அளவில் பேனர் வைக்கப்படுகின்றன. இதற்கு எந்த அனுமதியும் பெறுவதில்லை.
÷மேலும் இது போன்று பேனர் வைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மேலும் அது போன்று வைக்கப்படும் பேனர், கட்-அவுட்களை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகள் கூறினாலும் யாரும் கேட்பதில்லை.
÷அதனால் பொது இடங்களில் வர்த்தக விளம்பரங்கள் இடம் பெற்றால் அந்த இடங்களில் அரசியல்வாதிகள் பேனர், கட்-அவுட் வைக்கப்படுவது தவிர்க்கப்படும். பொது இடங்களில் விளம்பரம் செய்வதற்கான தடை உத்தரவு அமலுக்கு வந்தப் பிறகு நகராட்சிக்குக் கிடைத்து வந்த வருவாய் இல்லாமல் போய்விட்டது. இதைக் கருத்தில் கொண்டு நகராட்சிக்கு வருவாயைப் பெருக்கவும் பொது இடங்களில் வர்த்தக நோக்கத்தில் இருக்கும் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறின.
÷இது தொடர்பாக அண்மையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் வர்த்தக நோக்கத்தில் இருக்கும் விளம்பரங்களுக்கு மட்டும் கறாராக அனுமதி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறின. இதனால் நகராட்சி ஓரளவுக்கு நிதி ஆதாரத்தைப் பெருக்க முடியும்.
÷இருப்பினும் சாலை சந்திப்புகளில் 100 மீட்டருக்குள் எந்த விளம்பரமும் செய்யக் கூடாது என்ற விதியைக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.