Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னையில் மேலும் 2 நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் திறப்பு

Print PDF
தினமணி     11.11.2014  

சென்னையில் மேலும் 2 நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் திறப்பு

சென்னையில் கூடுதலாக இரண்டு நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நகர்ப்புறங்களில் பொதுமக்கள் வருவாய்த் துறை, சமூக நலத் துறை, சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பெறவும், மின் கட்டணத்தைச் செலுத்தவும் வசதியாக எழும்பூர், மாம்பலம், மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், தண்டையார்பேட்டை, அமைந்தகரை, கிண்டி, வேளச்சேரி ஆகிய இடங்களிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் முதல் கட்டமாக 9 நகர்ப்புற அரசு பொது இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன.

இந்த நகர்புற பொது இ-சேவை மையங்களின் மூலமாக இதுவரை 23,620 ஜாதிச் சான்றிதழ்கள், 33,759 வருமானச் சான்றிதழ்கள், 1,613 இருப்பிடச் சான்றிதழ்கள், கணவனால் கைவிடப்பட்டோர் 7 பேருக்கு சான்றிதழ்கள், 2,935 முதல் பட்டதாரிச் சான்றிதழ்கள் என மொத்தம் 61,934 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அயனாவரம் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் மேலும் இரண்டு நகர்ப்புற பொது இ-சேவை மையங்களை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
 

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF
தினமணி      10.11.2014

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் நீண்ட நாட்களாக சொத்து வரி, குடிநீர் கட்டணம் பாக்கி வைத்திருந்த வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடப்பாண்டில் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் உள்பட பிற வகைகளைச் சேர்த்து கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் மிகுந்த சிக்கலைச் சந்தித்து வருகிறது. இதையடுத்து நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின்பேரில் நகராட்சிப் பொறியாளர் கணேசன் மேற்பார்வையில் அதிகாரிகள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், நீண்ட நாட்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம் பாக்கி வைத்து, பலமுறை எச்சரிக்கை விடுத்தும் வரி செலுத்தாதிருந்த கோவிந்தசாமி நகர், நடூர், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வீதி, தந்தை பெரியார் வீதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 வீடுகளின் குடிநீர் இணைப்புக்கள் சனிக்கிழமை துண்டிப்பு செய்யப்பட்டன. நகராட்சிப் பொறியாளர் கணேசன், உதவிப் பொறியாளர் சண்முகவடிவு மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, நகராட்சிப் பொறியாளர் கணேசன் கூறியது:

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொது மக்களிடமிருந்தும், வணிக நிறுவனங்களிடமிருந்தும் வரி நிலுவைத் தொகையாக ரூ.4.50 கோடி இருப்பதால், நகராட்சி நிதி நெருக்கடியில் உள்ளது. ஆகவே, பொது மக்கள் தங்களது வரி பாக்கிகளை உடனடியாகச் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி குறித்த எச்சரிக்கை நோட்டீஸ் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. வரி பாக்கி குறித்து நேரடியாகவும், வாகனங்களில் சென்று ஒலிபெருக்கி மூலமாகவும் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.
 

அனைத்து மாநகராட்சிகளிலும் பண்ணை பசுமை அங்காடிகள்

Print PDF
தினமணி       10.11.2014

அனைத்து மாநகராட்சிகளிலும் பண்ணை பசுமை அங்காடிகள்

தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் கூட்டுறவுத்துறை சார்பில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் திறக்கப்படும், என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி, ஆரப்பாளையம், சுந்தர்ராஜபுரம் ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறை சார்பில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டுறவு அங்காடிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியது:

மக்களுக்கு கடைகளில் விற்பனை செய்வதை விட காய்கறிகள் கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை குறைவாகவும், தினமும் பசுமையாகவும் கிடைக்கும் வகையில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளைத் திறக்க, சில மாதங்களுக்கு முன்பே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அவரது ஆலோசனையின்படி, கோவை மாநகராட்சி பகுதியில் முதல்கட்டமாக 10 அங்காடிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, மதுரை மாநகராட்சி பகுதியில் தற்போது 3 அங்காடிகள் திறக்கப் பட்டுள்ளன. விரைவில் மேலும் 7 இடங்களில் இந்த அங்காடிகள் திறக்கப்படும். அங்காடிகளுக்கு தினமும் ஊட்டி, கொடைக்கானல் பகுதியிலிருந்து உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற ஆங்கில வகை காய்கறிகளும் நாட்டுத் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட மற்ற அனைத்துக் காய்கறிகளும் தினமும் விவசாயிகளிடம் அதிகாலையில் அந்தந்தப் பகுதி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அங்காடிகளுக்கு வாகனம் மூலம் வழங்கப்படும்.

அங்காடிகளில் தினமும் காலை 8 மணி முதல் விற்பனை செய்யப்படும். விலைப்பட்டியல் அங்காடி முகப்பில் வைக்கப்படும். இந்த அங்காடிகளை தினமும் வேளாண்மைத்துறை கள அலுவலர்கள், கூட்டுறவுத்துறை துணைப்ó பதிவாளர், ஆட்சியரால் நியமிக்கப்படும் அலுவலர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து விலைப்பட்டியலையும் கண்காணிப்பர்.

அங்காடிகளில் வாடி, வதங்கிய காய்கறிகள் விற்பனை செய்யக்கூடாது, பசுமை மாறாமல் விற்பனை செய்ய வேண்டும் என அங்காடி பொறுப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, கழிவு மான்யம் 10 சதவீதத்தை அரசின் விலைக்கட்டுப்பாடு பிரிவிலிருந்து வழங்குவதற்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதா ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் அடுத்தவாரமும், படிப்படியாக மற்ற மாநகராட்சி பகுதிகளிலும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் திறக்கப்படும். இதன் பிறகு, நகராட்சி, தாலுகா பகுதிகளிலுóம் இந்த அங்காடிகள் திறக்கப்படும் என்றார்.
 


Page 37 of 3988