Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சொத்து வரி நிலுவை: அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு

Print PDF
தினமணி         10.10.2014

சொத்து வரி நிலுவை: அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு

சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் வீடு, சொத்து உள்ளவர்களிடம் சொத்து வரியை சென்னை மாநகராட்சி வசூலிக்கிறது. மாநகராட்சிக்குக் கிடைக்கும் வருவாயில் கணிசமான அளவுக்குச் சொத்து வரியின் பங்கு உள்ளது. நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சுமார் ரூ.276 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரியை பொதுமக்கள் சரிவரச் செலுத்துவதில்லை என்ற புகார் உள்ளது. மாநகராட்சிப் பணியாளர்கள் சொத்து வரியைச் செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் அவை முழுமையாகப் பலன் தராத நிலை உள்ளது.

மாநகராட்சியின் கடும் நடவடிக்கை என்பது, வாசலில் போஸ்டர் ஒட்டுவது, குப்பைத் தொட்டியை தள்ளி வைப்பது என்ற அளவிலேயே உள்ளது. மற்ற மாநகராட்சிகளில் உள்ளது போல அபராதம் விதிக்கும் நடைமுறை சென்னையில் இல்லை.

இந்த நிலையில், சென்னையிலும் சொத்து வரி செலுத்தாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க தமிழக அரசிடம் மாநகராட்சி அனுமதி கோரியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

இப்போது சொத்து வரியை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல வசதிகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். ஆனாலும், சொத்து வரி செலுத்தும் ஆர்வம் குறைவாகவே உள்ளது.

இதற்குக் காரணம், கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே ஆகும். நாட்டில் உள்ள பிற மாநகராட்சிகளில் சொத்து வரி செலுத்தாதோரிடம் இருந்து 10 முதல் 15 சதவீதம் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலும் இது போன்ற கடுமையான நடவடிக்கை தேவை என்று கருதப்படுகிறது. சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்களிடம் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரிக்கு அபராதம் வசூலிக்க வேண்டுமென்றால், தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும். அதற்காக அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.

இதற்கான சட்டத் திருத்தத்தை அரசு மேற்கொண்டால், சென்னையிலும் அபராதம் வசூலிக்கப்படும். இப்போது உத்தேசிக்கப்பட்டுள்ள அபராதம் மிகக் குறைவு. ஆனாலும் இந்த நடவடிக்கை ஓரளவு வரி வசூலை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியில் சுமார் 14 ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

கோயம்பேடு சந்தையில் கழிப்பறைகளை சீரமைக்க ரூ.3 கோடியில் திட்டம்

Print PDF
தினமணி       09.10.2014

கோயம்பேடு சந்தையில் கழிப்பறைகளை சீரமைக்க ரூ.3 கோடியில் திட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையில் கழிப்பறைகளை ரூ.3 கோடியில் சீரமைக்கவும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ரூ.50 லட்சத்தில் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டங்களைச் செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படவுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்த, சில்லறை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், சந்தைக்கு பல்வேறு பொருள்களை கொண்டு வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இதுதவிர, கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் என பலர் வேலை செய்கின்றனர். இவர்களின் வசதிக்காக கோயம்பேடு சந்தையில் 67 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை போதிய பராமரிப்பின்றியும், உபயோகிக்க இயலாத வகையிலும் இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டினர்.

இதனால், அங்கு வரும் பலர் சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளைக் கழிக்கின்றனர். இதனால், சந்தையைச் சுற்றி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும், கோயம்பேடு சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை எனவும் புகார் எழுந்தது. இதைப் பயன்படுத்தி பலர் தண்ணீர் பாட்டில்களை அதிக விலையில் விற்பனை செய்வதும் தொடர்ந்தது.

இதுதொடர்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்தக் கழிப்பறைகளைச் சீர்செய்யவும், நல்ல குடிநீர் கிடைக்க குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, கோயம்பேடு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கூறியது:

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.3 கோடியில் 67 கழிப்பறைகளைச் சரிசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளொன்றுக்கு தலா 2,000 ஆயிரம் லிட்டர் நீரை சுத்திகரிக்கும் வகையில் 2 குடிநீர் நிலையங்களை (ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் பிளான்ட்) ரூ.50 லட்சத்தில் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்பட உள்ளன. ஒப்பந்தப் புள்ளிகள் குறித்து நவம்பர் மாதத்தில் முடிவெடுக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பெற்று கழிப்பறைகளும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் பயன்பாட்டுக்கு வரும். இந்தப் பணிகளை அங்காடி நிர்வாகக் குழு மூலம் மேற்கொள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆணையிட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
 

உள்வட்ட சுற்றுச் சாலையில் சுங்க கட்டணத்தை 8 சதவீதம் உயர்த்தி வசூலிக்க முடிவு

Print PDF
தினமணி     29.09.2014

உள்வட்ட சுற்றுச் சாலையில் சுங்க கட்டணத்தை 8 சதவீதம் உயர்த்தி வசூலிக்க முடிவு

மதுரை மாநகராட்சி பராமரிப்பிலுள்ள உள்வட்ட சுற்றுச் சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும், நவம்பர் 1ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு 8 சதவீதம் உயர்த்தி கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரை மாநகராட்சி பராமரிப்பிலுள்ள உத்தங்குடி-கப்பலூர் வரையிலான உள்வட்டச் சுற்று சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் 1.11.2000 முதல் 31.10.2015ஆம் ஆண்டு முடிய வசூல் செய்துகொள்ள, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி அளித்துள்ளது. வசூலித்த கட்டணத்தை, 15 ஆண்டு காலத்துக்குள் தவணை முறையில் கடன் தொகையாக செலுத்துவதற்கும், செலுத்த முடியாதபட்சத்தில் மேலும் 2 ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுங்க வரியை 8 சதவீதம் உயர்த்திக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 1.11.2014 முதல் 31.10.2015 முடிய உள்வட்டச் சுற்றுச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு தற்போது வசூல் செய்து வரும் கட்டணத்தில் 8 சதவீதம் உயர்த்தி வசூல் செய்ய, மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, நவம்பர் 1ஆம் தேதி முதல் உத்தங்குடி-கப்பலூர் வரையிலான உள்வட்டச் சுற்றுச் சாலையிலுள்ள 8 சுங்கச் சாவடிகளிலும், தற்போது வசூல் செய்து வரும் கட்டணத்துடன் 8 சதவீதம் உயர்த்தி வசூல் செய்யப்படவுள்ளது.
 


Page 44 of 3988