Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

இயற்கை பேரிடர் நிதி ரூ.188 கோடியில் 1,000 வீடுகள் கட்ட திட்டம்

Print PDF

தினமணி       24.09.2014

இயற்கை பேரிடர் நிதி ரூ.188 கோடியில்  1,000 வீடுகள் கட்ட திட்டம்


புதுச்சேரியில் இயற்கை பேரிடர் நிதி ரூ.188 கோடியில் 1,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

 புதுச்சேரி சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் இதுகுறித்து அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசியது:

 இயற்கை பேரிடர் நிதியாக ரூ.188 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியை எந்த திட்டங்களுக்கு அரசு செலவு செய்யப் போகிறது?

 முதல்வர் ரங்கசாமி: இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாத வகையில் கூரை வீடுகளுக்கு பதிலாக சுமார் ஆயிரம் கல் வீடுகள் கட்டுதல், தீயணைப்புத் துறைக்காக வானுயர் ஏணி, அவசர உதவி வண்டி, அத்தியாவசிய தீயணைப்புக் கருவிகள் வாங்குதல், வெங்கட்டா நகர் துணை மின்நிலையத்திலிருந்து கரையோர நகரப் பகுதிகளில் உள்ள குறைந்த மின் அழுத்த பாதைகள் மற்றும் நுகர்வோரின் மின் இணைப்புகளை புதைவடமாக மாற்றுதல், புதுவை மின் துறையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைத்தல், நோணாங்குப்பம், அரியா ங்குப்பம், தவளகுப்பம் பழைய பாலங்களை புதுப்பித்தல், வைத்திக்குப்பம் சிறுபாலத்தை மறுகட்டமைப்பு செய்தல், அதே பகுதியில் சோலை நகரில் உள்ள சிறு பாலத்தை மறுகட்டமைப்பு செய்தல், புதுவை மீன்பிடி துறைமுகத்தில் படகு சறுக்குப்பாதை, படகு நிறுத்தும் தளம், படகு பழுதுபார்க்கும் கூடம், மின்கட்டுப்பாட்டு அறை, படகு விசை இழுவை அறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கடற்கரை குபேர் சாலை நகராட்சி கட்டடம் புதுப்பித்தல், பழைய மீன் அங்காடிகளை மேம்படுத்துதல், காரைக்காலில் நவீன சுகாதார மீன் அங்காடி, மீன்பிடி துறைமுகத்தில் சறுக்குப் பாதை, படகு பழுதுபார்க்கும் கூடம், மின்கட்டுப்பாட்டு அறை கட்டுதல், நேரு அங்காடியை புதுப்பித்தல், மீன்பிடி துறைமுகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படவுள்ளன என்றார்.
 உறுப்பினர்கள் நாஜிம், லட்சுமிநாராயணன், அன்பழகன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளிலும் இத்திட்டத்தின் கீழ் பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். காங்கிரஸ் உறுப்பினர்கள், மாஹே, ஏனாமுக்கு இந்த நிதியில் திட்டங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து பேசிய முதல்வர் ரங்கசாமி, தற்போதைய திட்டங்களை மாற்றியமைத்து பிற தொகுதிகளிலும் திட்டங்களை கொண்டு வரலாம்.

 இதுகுறித்து உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

அரக்கோணம் நகர்மன்ற தலைவர் இன்று பதவியேற்பு

Print PDF
தினமணி    24.09.2014

அரக்கோணம் நகர்மன்ற தலைவர் இன்று பதவியேற்பு

அரக்கோணம், செப். 23: அரக்கோணம் நகர்மன்றத் தலைவராக தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.கண்ணதாசன் புதன்கிழமை பதவியேற்கிறார்.

அரக்கோணம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.கண்ணதாசன், இன்று காலை 9 மணி அளவில் அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் நகர்மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார். இத்தகவலை அரக்கோணம் நகராட்சி ஆணையர் விஜயகுமாரி தெரிவித்தார்.

இதில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி, எம்.எல்.ஏ. சு.ரவி, அதிமுக மாவட்டச் செயலரும், சோளிங்கர் நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான என்.ஜி.பார்த்தீபன், நகர்மன்ற உறுப்பினரும், அதிமுக நகரச் செயலருமான துரைகுப்புசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், நகர அதிமுக நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
 

புதிய மேயர் இன்று பதவியேற்பு

Print PDF
தினமணி          24.09.2014

புதிய மேயர் இன்று பதவியேற்பு

கோவை மாநகராட்சியின் 5-ஆவது மேயராக அதிமுகவைச் சேர்ந்த ப.ராஜ்குமார், புதன்கிழமை பதவியேற்கிறார்.

  கோவை மாநகராட்சி மேயராக இருந்த அதிமுகவின் செ.ம. வேலுசாமி, கடந்த மே மாதம் பதவி விலகினார். அதையடுத்து கடந்த 18-ஆம் தேதி மாநகராட்சி மேயர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ப.ராஜ்குமார் வெற்றி பெற்றார்.

  ப.ராஜ்குமார் திங்கள்கிழமை மாலை சென்னை சென்றார். தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற பின், செவ்வாய்க்கிழமை கோவை திரும்பினார்.

  கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் புதன்கிழமை காலை மாநகராட்சியின் 5-ஆவது மேயராக ப.ராஜ்குமார் பொறுப்பேற்கிறார். இதற்காக கலையரங்கம் தயாராகி வருகிறது.
 


Page 47 of 3988