Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கோயம்பேடு மார்க்கெட்டில் 600 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ரூ.50 ஆயிரம் வசூல்

Print PDF
தி இந்து       12.09.2014

கோயம்பேடு மார்க்கெட்டில் 600 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ரூ.50 ஆயிரம் வசூல்

 கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த 600 கடைகளை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு வியாழக்கிழமை அகற்றியது. ஆக்கிரமிப்பு கடைக்காரர் களிடமிருந்து ரூ.50 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பூ, காய், கனி மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவ்வளாகத்தில் நுழைவு வாயில்கள், சர்வீஸ் சாலைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை பலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருவதால், மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் பாஸ்கரனுக்கு புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், அவரது முன்னிலையில் மார்க்கெட் நிர்வாகக் குழு உதவி செயற்பொறியாளர் சிவலிங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் ராஜன்பாபு தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நுழைவு வாயில் எண். 7 முதல் 14 வரையிலான பகுதிகள் மற்றும் சர்வீஸ் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கடைகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகளை நடத்த முற்பட்டால் காவல்துறை மூலம் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று மார்க்கெட் நிர்வாகக் குழு சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

14-வது நுழைவு வாயிலை பூட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்

மார்க்கெட் நிர்வாகக் குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மார்க்கெட்டின் 14-வது நுழைவு வாயிலை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பூட்டி, ஊழியர்களை உள்ளே வர விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வாயிலைத் திறந்தார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

500 கிலோ தக்காளி பறிமுதல்

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிடங்கு உள்ள பகுதியில் தக்காளியை ஏற்றி வரும் லாரிகள் தக்காளிகளை இறக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த தக்காளி கடைகளும் அகற்றப்பட்டன. சுமார் 500 கிலோ தக்காளி பறிமுதல் செய்யப்பட்டது.
 

தமிழகத்துக்கு ஸ்மார்ட் நகரங்களை எங்கு அமைக்கலாம்?- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

Print PDF
தி இந்து      12.09.2014

தமிழகத்துக்கு ஸ்மார்ட் நகரங்களை எங்கு அமைக்கலாம்?- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

நாட்டில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புது டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில், தமிழக உயரதிகாரி ஒருவர் பங்கேற்கிறார்.

இந்தியாவை வளர்ந்த நாடுகளுக்கு நிகராக மாற்றும் நோக்கில் நாடு முழுவதும் 100 இடங்களில் ஸ்மார்ட் நகரங்களை ரூ.7060 கோடியில் உருவாக்க, மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு திட்டம் வகுத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது தமிழகத்தில் பொன்னேரியில் ஸ்மார்ட் நகரம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அது தொடர்பான தெளிவான அறிவிப்பு வெளிவராததால் மாநில அரசுகள் குழப்பத்தில் இருந்தன. ஸ்மார்ட் நகரம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு அதற்கான அடுத்தக்கட்ட ஆலோசனையை நடத்த முடிவெடுத்து அனைத்து மாநிலங்களும் பங்கேற்கக் கூடிய ஆலோசனைக் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஏற்பாடு செய்துள்ளது. புதுடெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் உயரதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் தமிழக நகர்ப்புற நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி பங்கேற்கிறார்.

கடந்த வாரம், முதல்வரை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சந்தித்தபோது, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளிலும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது 'தி இந்து'விடம் அவர்கள் கூறியதாவது:-

புது டெல்லியில் நடக்கும் கூட்டத்தில், மத்திய அரசு, தான் உருவாக்கப்போகும் ஸ்மார்ட் நகரம் தொடர்பாக தயாரித்துள்ள வரைவு அறிக்கையைப் பற்றி மாநில அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளது. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதனால் அவர்கள் முன்வைக்கும் கருத்தின் அடிப்படையிலேயே நமது அடுத்த முடிவு அமையும்.

எனினும், பொன்னேரியில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பது தொடர்பான முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அது ஜப்பான் சர்வதேச கூட்டுறவு வங்கி மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் வெளியான தகவல். எனினும், தமிழகத்தில் 12 இடங்களில் அமைக்கப்படவேண்டுஅ என்பதே நமது எதிர்பார்ப்பு. அதேநேரத்தில் புதிதாக ஒருஇடத்தில் உருவாக்குவதை நாம் விரும்பவில்லை என்றனர்.
 

மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் பிரச்னைக்கு இன்று தீர்வு

Print PDF
தினமணி      12.09.2014

மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் பிரச்னைக்கு இன்று தீர்வு


சேலம் மாநகராட்சியின் 21 வார்டுகளில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வரும் தாற்காலிக துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (செப்.12) தீர்வு எட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாநகராட்சியில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள 21 வார்டுகளில் தாற்காலிகப் பணியாளர்களாக உள்ள சுமார் 680 துப்புரவுத் தொழிலாளர்களும் தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, தொழிலாளர் துறை அதிகாரிகள் நடத்திய 16 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்தை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், சேலம் மாவட்ட அரசிதழில் தாற்காலிக தொழிலாளர்களின் தினசரி ஊதியம் ரூ.165 ஆக இருப்பதை ரூ.246 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இப்போது தனியார் நிறுவனம் தங்களுக்கு ரூ.211 வரை தர முன் வந்துள்ளது. அதை ரூ.246 ஆக உயர்த்தி வழங்கினால் எங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தினசரி ரூ.246 ஊதியம் வழங்கினால் போராட்டத்தை விலக்கிக் கொண்டு, மற்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று போராட்டக் குழுவைச் சேர்ந்த ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.மணி தெரிவித்துள்ளார். இதனால் துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு வெள்ளிக்கிழமை முடிவு எட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.
 


Page 53 of 3988