Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

உள்ளாட்சி இடைத் தேர்தல்: நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு

Print PDF

தினமணி           10.09.2014

உள்ளாட்சி இடைத் தேர்தல்: நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு

உள்ளாட்சி இடைத் தேர்தலில் நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரத்து 486 போட்டியிட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 4-ஆம் தேதியுடனும், மனுக்களைத் திரும்பப் பெற கடந்த 8-ஆம் தேதியும் கடைசி நாள்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஜோதி நிர்மலா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் மூன்று மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளர் இ. புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை, தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மேலும், மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 4 உறுப்பினர்கள் போட்டியின்றியும், மீதமுள்ள 8 இடங்களுக்கு தேர்தலும் நடைபெறுகிறது.

நகராட்சிகளில் காலியாகவுள்ள எட்டு தலைவர் பதவியிடங்களில் நான்கு இடங்களுக்கு போட்டியின்றியும், மீதமுள்ள இடங்களுக்கு தேர்தலும் நடத்தப்படவுள்ளது.

நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 30 பேர் போட்டியின்றியும், 23 இடங்களுக்கு தேர்தலும் நடைபெறுகிறது. ஏழு பேரூராட்சித் தலைவர் பதவியிடங்களில் ஒரு இடத்துக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஆறு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.

பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 64 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 39 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும். மூன்று பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வேட்பு மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை.

ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 25 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 99 பேரும், சிற்றூராட்சித் தலைவர் பதவிக்கு 270 பேரும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 775 பேரும் என மொத்தம் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரத்து 486 பேர் போட்டியிட உள்ளனர் என்று தேர்தல் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா தெரிவித்துள்ளார்.

மொத்தம் 104 பேர் தேர்வு: நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 104 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகர மேயர் ஒருவரும், மாநகராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் 4 பேரும், நகராட்சித் தலைவர் 4 பேரும், வார்டு உறுப்பினர்கள் 30 பேரும், பேரூராட்சி தலைவர் ஒருவரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 64 பேரும் என மொத்தம் 104 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்பின் செப்டம்பர் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 

"வறுமையை ஒழிக்க இந்தியா கடுமையாக பாடுபட வேண்டும்"

Print PDF
தினமணி      09.09.2014

"வறுமையை ஒழிக்க இந்தியா கடுமையாக பாடுபட வேண்டும்"

இந்தியா வறுமையை ஒழிக்க கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று ஐ.நாவின் உணவு, வேளாண் அமைப்பின் தலைமை இயக்குநர் கிரேசியானோ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் பசியைப் போக்கும் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக கிரேசியானோ டி சில்வாவுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அவர் பேசியதாவது:

கடந்த 2011-13 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி 125 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 17 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டிற்குள் உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. வறுமையை ஒழிக்க கடுமையாகப் பாடுபட வேண்டிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

2013-14 ஆம் ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 24.6 கோடி டன்களாகும். இருப்பினும், அதிக அளவிலான உணவுதானிய உற்பத்தியினால் மட்டுமே வறுமையை ஒழித்துவிட முடியாது. வேலை வாய்ப்பையும் பெருக்க வேண்டும் என்று கிரேசியானோ டி சில்வா தெரிவித்தார். கோதுமை, அரிசி, கொண்டக்கடலை, சோயா, காய்கறிகள் ஆகியவற்றில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட 14 புதிய பயிர் ரகங்களை இந்த விழாவில் கிரேசியானோ டிசில்வா அறிமுகப்படுத்தினார்.
 

உள்ளாட்சித் தேர்தல் நெல்லை மாவட்டத்தில் 14 பேர் போட்டியின்றித் தேர்வு

Print PDF

தினமணி     09.09.2014

உள்ளாட்சித் தேர்தல் நெல்லை மாவட்டத்தில் 14 பேர் போட்டியின்றித் தேர்வு

உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 14 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சித் தலைவர், நகர்மன்றம், பேரூராட்சி உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட காலியாக உள்ள 97 பதவிகளுக்கு செப். 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திங்கள்கிழமை வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றதையடுத்து அதிமுக வேட்பாளர் இ. புவனேஷ்வரி மேயராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிற வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதை அடுத்து, அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு சங்கரன்கோவிலில் 4 மற்றும் 30 ஆவது வார்டு, புளியங்குடியில் 17 ஆவது வார்டு, கடையநல்லூரில் 24 ஆவது வார்டு, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு பத்தமடையில் 2 ஆவது வார்டு, ராயகிரியில் 2 ஆவது வார்டு, பணகுடியில் 3 ஆவது வார்டு, சுந்தரபாண்டியபுரத்தில் 13 ஆவது வார்டு, மூலக்கரைப்பட்டியில் 11 ஆவது வார்டு, நான்குனேரியில் 6 ஆவது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாளையங்கோட்டை ஒன்றியம், மேலத்திடியூர் ஊராட்சித் தலைவர் கே. சங்கரகோமதி, சேரன்மகாதேவி ஒன்றியம், மூலச்சி ஊராட்சித் தலைவர் செ. குருநாதன் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் நடைபெறும் இடங்கள்: சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சித் தலைவர், தென்காசி நகராட்சி 14 ஆவது வார்டு, கடையநல்லூர் நகராட்சி 19 ஆவது வார்டு, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 20 ஆவது வார்டு உறுப்பினர், திருக்குறுங்குடி பேரூராட்சி 3 ஆவது வார்டு, மேலகரத்தில் 5 ஆவது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இம் மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

 


Page 56 of 3988