Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நிலக்கோட்டை பேரூராட்சிக் கூட்டம்

Print PDF

தினமணி             17.02.2014

நிலக்கோட்டை பேரூராட்சிக் கூட்டம்

நிலக்கோட்டை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் வி.எஸ்.எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்றது.   செயல் அலுவலர் தனசேகரன் முன்னிலை வகித்தார். கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது பற்றியும் நிலக்கோட்டை நகரில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை கணக்கெடுத்து சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டது. பேரூராட்சி பேருந்து நிலையத்திலுள்ள கடைகள் ஏலம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர் சதீஷ்குமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

திண்டுக்கல் மாநகராட்சி அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்: அமைச்சர்

Print PDF

தினமணி             17.02.2014

திண்டுக்கல் மாநகராட்சி அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்: அமைச்சர்

திண்டுக்கல் மாநகராட்சியாகும் அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார்.

 திண்டுக்கல் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பூங்காவில் ரூ.30 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காவை திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பூங்காவை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியது: வறட்சியின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை சமாளிப்பதற்கு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் போதிய நீராதாரம் இல்லை என்பதால், குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.70 கோடி மதிப்பிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதேபோல் மாநகாரட்சியாக நிலை உயர்த்தப்பட உள்ள திண்டுக்கல் நகரின் சாலைகளை மேம்படுத்தவும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியாகும் என்றார்.

நகர்மன்றத்தலைவர் வி.மருதராஜ்:  3.55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குமரன் பூங்கா 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேலும் நகர மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமாகவும் அமைந்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்பு பணிகளின் மூலம் மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. நடைபயிற்சி மேற்கொள்வோரின் வசதிக்காக நடைமேடை விரிவாக்கம் செய்து கொடுக்கப்படும். மேலும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு ரயில் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றார்.

 நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கே.ராஜன், நத்தம் தொகுதிச் செயலர் ஆர்.வி.என்.கண்ணன், நகரச் செயலர் பாரதிமுருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 1527 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி            17.02.2014

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 1527 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சிக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாகன நெரிசலைக் குறைக்க ரூ. 500 கோடியில் சீரான சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 300 கோடியில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரயில்வேத் துறையுடன் இணைந்து தேவையான பகுதிகளில் ரயில் பாதைகளின் குறுக்கே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ. 100 கோடியில் சாலையோர நடைபாதை மேம்படுத்தப்படும். ரூ. 300 கோடியில் 12 முக்கியச் சாலைகள் சீரமைக்கப்படும். ரூ. 250 கோடியில் மாநகராட்சியில் இணைந்துள்ள பின்தங்கிய பேருராட்சி, நகராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

31 ஏரிகளை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கப்படும். வாகன நிறுத்தக் கொள்கையை அமல்படுத்த ரூ. 10 கோடி ஒதுக்கப்படும். திடக்கழிவு மேலாண்மைக்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்படும்.

ரூ. 200 கோடியில் பெங்களூருவில் வாகன நெரிசல் உள்ள முக்கிய சதுக்கங்களில் சாலை தடுப்புகள் அமைக்கப்படும். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் மூலம் 8 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளும், கெம்பேகெüடா லேஅவுட்டில் 5 ஆயிரம் வீட்டுமனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

பெங்களூருவில் உள்ள 54 ஏரிகள் வேலி அமைத்து பாதுகாக்கப்படும். 39 ஏரிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கப்படும். ஜெய்கா நிறுவன உதவியுடன் ரூ. 5,800 கோடியில் வெளி வட்டச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜவகர்லால் நேரு தேசிய நகர வளர்ச்சித் திட்டத்தில் தும்கூர் சாலையில் உள்ள கொரகுண்டன பாளையத்தில் ரூ. 125 கோடியில் சுரங்கப் பாதை அமைக்கப்படும். மாநகராட்சியில் புதிதாக இணைந்துள்ள 110 கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்ய தேவையான திட்ட விவர அறிக்கை தயாரிக்கப்படும்.

300 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்தகரிப்பு மையம் அமைக்கவும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். நிதியாண்டில் 180 மி.லிட்டர் குடிநீர் சுத்தகரிப்பு செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும்.

மாநகராட்சியில் 108 இடங்களில் சிறு, குறு குடிநீர் சுத்தகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 67 of 3988