Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அனைத்து வரிகளையும் ஒரே இடத்தில் செலுத்த சென்னையில் 200 இடங்களில் பொதுச்சேவை மையங்கள்

Print PDF

மாலை மலர்            13.02.2014

அனைத்து வரிகளையும் ஒரே இடத்தில் செலுத்த சென்னையில் 200 இடங்களில் பொதுச்சேவை மையங்கள்
 
அனைத்து வரிகளையும் ஒரே இடத்தில் செலுத்த சென்னையில் 200 இடங்களில் பொதுச்சேவை மையங்கள்

தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:–

நகர்ப்புறங்களில் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் பொது மக்கள் ஒரே இடத்தில் செலுத்திட வசதியாக, சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் நகர்ப்புற பொதுச் சேவை மையங்களை முதல்– அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த பொதுச்சேவை மையங்கள் பொது மக்களுக்கான மின்னணுச் சேவைகளையும், பிற சேவைகளையும் வழங்கும்.

சென்னை மாநகரத்தில் மேலும் இதுபோன்ற 200 பொதுச்சேவை மையங்கள் தொடங்கப்படுவதுடன் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் இத்தகைய வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். தகவல் தொழில் நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட மின் ஆளுமைச் சங்கங்கள் மூலம் இந்தப் பொதுச் சேவை மையங்கள் நிருவகிக்கப்படும். இதுபோன்ற அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள், மூலமாக, நிர்வாகத்திலும் பொதுச் சேவைகள் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.

மனுநீதி முகாம்கள் உட்பட மக்கள் குறை தீர்க்கும் வழிமுறைகள் மீது தொடர்ந்து இந்த அரசு கவனம் செலுத்தும். இந்த வகையில், அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகள் வழங்குவதன் மூலம் அம்மா திட்டம் பாராட்டத்தக்க ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.

வருவாய்த்துறையின் பணிகளை பொதுமக்களுடைய இல்லங்களுக்கே கொண்டு சேர்ப்பதுடன், அவர்களுடைய குறைகளை விரைவாகத் தீர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் குறை தீர்க்கும் வழி முறைகளைத் திறம்படச் செயல்படுத்துவதன் மூலம் பொதுச்சேவைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த அரசு 104.79 கோடி ரூபாயை தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது. 2013–2014–ம் ஆண்டில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும், விருதுகள், பரிசுகள், ஆகியவற்றை அளித்திடவும் 46.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு 31.61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டிற்கு, இப்பல்கலைக் கழகத்திற்கு 6.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். 2014–2015–ம் ஆண்டுக்கு 39.29 கோடி ரூபாய் தமிழ் வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

உடன்குடியில் 21 இடங்களில் எல்இடி விளக்குகள்: தலைவி தகவல்

Print PDF

தினமணி             13.02.2014

உடன்குடியில் 21 இடங்களில் எல்இடி விளக்குகள்: தலைவி தகவல்

உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் 12 இடங்களில், குடிநீர் தொட்டியும், 21 இடங்களில் எல்இடி விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  உடன்குடி பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம், எல்லப்பன் நாயக்கன்குளம் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கூடுதல் குடிநீர் வசதிக்காக 12 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.  இதைப்போல உடன்குடி-குலசேகரன்பட்டினம் பிரதான சாலையில் 21 இடங்களில் எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் இவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார் அவர்.

 

ரூ. 221 கோடி குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்

Print PDF

தினமணி             13.02.2014

ரூ. 221 கோடி குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்

 திருச்சி மாநகரில் அனைவரும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் ரூ. 221 கோடியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.

 திருச்சி காஜாமலை அரசு அலுவலர் குடியிருப்புப் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன், மாநகர மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 3 பேர் காணொலிக் காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 திருச்சி மேற்குத் தொகுதி எம்எல்ஏ மு. பரஞ்சோதி, அரியமங்கலம் கோட்டத் தலைவர் ஜெ. சீனிவாசன், பொன்மலை கோட்டத் தலைவர் என். மனோகரன், கோ-அபிசேகபுரம் கோட்டத் தலைவர் ஆர். ஞானசேகர், சிரீரங்கம் கோட்டத் தலைவர் எம். லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதில் பொதுமக்கள் சார்பில் பேசிய 52ஆவது வார்டைச் சேர்ந்த இந்திராணி, வாரத்துக்கு ஒரு முறை லாரியில் தண்ணீர் கிடைத்து வந்த நிலை, தற்போது இந்தப் புதிய திட்டத்தால் மாறியிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

கலை அறிவியல் கல்லூரிக் கட்டடம்:

 சிறீரங்கத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு- கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடம்  நவலூர் குட்டப்பட்டிலுள்ள வேளாண் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 5.40 கோடியில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தையும் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சிமூலம் திறந்து வைத்தார்.

 கடந்த 2011-ல் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கல்லூரியின் வகுப்புகள் இதுவரை இனாம்குளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

சேதுராப்பட்டியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்:

 சிறீரங்கம் தொகுதியில் புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்படும் என 2011 பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி, திருச்சி சேதுராப்பட்டியில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் ரூ. 128 கோடியில் 56.37 ஏக்கரில் இந்த நிறுவனம் அமையவுள்ளது.

 இந்த நிலையில் தாற்காலிகமாக அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்நிறுவனத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

 கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மென்பொருள் பொறியியல் மற்றும் தரவு தள அமைப்புத் துறையில் முதுநிலை பட்டப் படிப்பு தலா 20 மாணவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. வரும் ஆண்டுகளில் இளநிலை பட்டப் படிப்புகளும் தொடங்கப்படவுள்ளன.

 


Page 77 of 3988