Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

"திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம்'

Print PDF

தினமணி             06.02.2014

"திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம்'

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி சான்றிதழை தாம்பரம் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலனிடம் வழங்குகிறார் முன்னாள் நகராட்சிகள் கூடுதல் நிர்வாக இயக்குநர் டி.சந்திரசேகரன். உடன் நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ.கோபிநாதன் மற்றும் உறுப்பினர்கள்.
நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி சான்றிதழை தாம்பரம் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலனிடம் வழங்குகிறார் முன்னாள் நகராட்சிகள் கூடுதல் நிர்வாக இயக்குநர் டி.சந்திரசேகரன். உடன் நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ.கோபிநாதன் மற்றும் உறுப்பினர்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்று முன்னாள் நகராட்சிகள் கூடுதல் நிர்வாக இயக்குநர் டி.சந்திரசேகரன் கூறினார்.

சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான திறனூட்டும் பயிற்சி முகாம் 10 நாட்கள் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமை நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்தின. பயிற்சி முகாமில் வேலூர், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரகங்களுக்குள்பட்ட 38 நகராட்சிகளைச் சேர்ந்த சுமார் 800 நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் நகர்மன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள்,கடமைகள்,பொறுப்புகள்,நகராட்சிகளின் நிதி ஆதாரங்கள்,பெருகி வரும் நகர்ப்புறத் தேவை மற்றும் சேவை,நகர்ப்புறச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு,நகரமயமாகுதலின் போக்கும் அதன் தாக்கமும்,மனித உறவுகள் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் நகராட்சிகளில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும்,அதற்கான தீர்வுகள் குறித்தும் பயிற்சியாளர்களிடம் விளக்கம் கேட்டறிந்தனர். பயிற்சி முகாமில் முன்னாள் நகராட்சிகள் கூடுதல் நிர்வாக இயக்குனர் டி.சந்திரசேகரன் பேசியதாவது: நகர்மன்ற உறுப்பினர்கள்,அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய முடியும். குடிநீர்வசதி, பாதாளச்சாக்கடை, கழிவுநீர், குப்பை மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்போது செலவினம் அதிகரித்து, வரி உள்ளிட்டவை கூடுதலாகுவது தவிர்க்க முடியாது.

அனைத்து மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் சேவைகளை இலவசமாக வழங்குவது சாத்தியமல்ல. இவற்றை மக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் மன்ற உறுப்பினர்கள் உரியமுறையில் பொதுமக்களுக்குப் புரிய வைப்பது அவசியம். தற்போது உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதிஆதாரங்களைப் பெறுவதில் சிரமம் இல்லை. ஆனால் முறையாகத் திட்டமிட்டு, சிறப்பாக நிறைவேற்றி, தொடர்ந்து செயல்படுத்துவதில் தான் குறைபாடுகள் உள்ளன.

நாட்டில் வேறு எந்த மாநகராட்சியும் செயல்படுத்த முடியாத சேவையை புனே அருகில் உள்ள பிம்ரி மாநகராட்சி செய்து வருகின்றது. பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவது முதல் சொத்து, பட்டா, வாரிசு உள்ளிட்ட சுமார் 24 வகையான சேவைகளை வழங்கி, அதன் மூலம் வருவாய் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் நகராட்சியில் "நம்ம டாய்லெட்',"நம்ம சமுதாய சமையல்கூடம்' , "குப்பையில்லா நகராட்சி' உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரித் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு,இதர நகர்மன்றங்களின் வழிகாட்டுதலாகத் திகழ்கிறது என்றார். நிறைவாக தாம்பரம் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலன் பேசும்போது,தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் வழிகாட்டுதலுடன்,அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடும்,ஒத்துழைப்போடும் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பணிகளை நிறைவேற்றி வருவதால் தாம்பரம் இன்று அனைத்து நகராட்சிகளுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றார்.

நகராட்சி நிர்வாக ஆணையரகம் திட்ட இயக்குனர் ஆர்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் டாக்டர் ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

உடுமலை மத்திய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் கலெக்டர் ஆய்வு

Print PDF

தினத்தந்தி            05.02.2014

உடுமலை மத்திய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் கலெக்டர் ஆய்வு

உடுமலை மத்திய பஸ்நிலையத்தில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

உடுமலை மத்திய பஸ் நிலையம்

உடுமலை பழனி மெயின்ரோட்டில் நகராட்சி மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கு போதிய இட வசதி இல்லாததால் மத்திய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக பஸ் நிலையத்தின் கிழக்கே வி.பி.புரத்தில் இருந்த குடிசை வீடுகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்புறப்படுத்தப்பட்டன.

வி.பி.புரம் காலியிடம் மொத்தம் 1 ஏக்கர் 79 சென்ட் உள்ளது. இந்த இடம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறைக்கு சொந்தமானது. இதில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடம் 21 சென்ட் போக மீதி உள்ள, வி.பி.புரம் கிழக்கு பழனி மெயின் ரோடு பகுதியில் 10 சென்ட் இடத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டவும், அதற்கு பின்னால் 5 சென்ட் இடத்தில் உள் வட்ட அளவர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த 36 சென்ட் இடம் போக மீதி உள்ள 1 ஏக்கர் 43 சென்ட் இடத்தை நகராட்சி மத்திய பஸ் நிலையம் விரிவாக்கத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதற் கான நடவடிக்கைகளை நகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பஸ் நிலையம் விரிவாக்கத்துக்கான இடம், நெடுஞ்சாலைத்துறை இடம், போக்குவரத்து போலீஸ் நிலையம் மற்றும் உள்வட்ட அளவர் அலுவலகம் கட்டு வதற்கு தேர்வான இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருப்பூர் மாவட்ட கலெக் டர் ஜி.கோவிந்தராஜ் நேற்று உடுமலை வந்தார்.

பின்னர் அவர், பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர், உடுமலை பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு, கழிப் பறையின் மேல் இருந்த பழுதடைந்த கான்கிரீட் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும். பஸ் நிலையத் திற்குள் அதிக எண்ணிக்கையில் குப்பை தொட்டிகள் வைத்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

துப்புரவு பணிகள்

அப்போது ஆர்.டி.ஓ. குணசேகரன், தாசில்தார் ரத்தினா, நகராட்சி தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி, சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன், கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஜி.சண்முகம், கவுன்சிலர் ஏ.ஹக்கீம் ஆகியோர் உடனிருந்தனர். கலெக்டர் ஆய்வையொட்டி, நகராட்சி நிர்வாகம் சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் நேற்று பணியாளர்கள் அவசர அவசரமாக துப்புரவு பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீசு

Print PDF

தினத்தந்தி            05.02.2014

விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீசு

விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது என்று திட்டக்குழும உதவி இயக்குனர் ஜி.ஈசுவரன் கூறினார்.

சங்க கூட்டம்

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சங்க துணை தலைவர் டி.ஆர்.தமிழரசு வரவேற்றுப் பேசினார்.

தூத்துக்குடி உள்ளுர் திட்டக் குழும உதவி இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர் (பொறுப்பு) ஜி.ஈசுவரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

25 ஆயிரம் சதுர அடிக்குள்ளான வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கு உரிய ஆவணங்களை முறைப்படி எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் உள்ளுர் திட்டக் குழும அலுவலகத்துக்கு சமர்ப்பித்தால், 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டு விடும். 25 ஆயிரம் சதுர அடிக்கு மேல் கட்டிடங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதி பெறுவதற்கு உள்ளுர் திட்ட குழுமத்துக்கு முறையான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், அவைகள் சரியாக இருந்தால், சென்னையில் உள்ள நகர ஊரமைப்பு ஆணையருக்கு திட்ட அனுமதி வழங்க சமர்ப்பிக்கப்படும். காலி இடங்களில் கட்டிடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி பெறுவது எளிது.

அனுமதி வழங்கப்பட்ட பின்பு கட்டிடங்களில் ஏதேனும் அனுமதிக்கு புறம்பாக இருந்தால் 50 சதவீதம் வரை விதிவிலக்கு அளிக்கப்பட்டு, உரிய கட்டணம் செலுத்தி அனுமதி பெறலாம். 50 சதவீதத்துக்கு மேல் அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்டு இருந்தால் திருத்தப்பட்ட திட்ட அனுமதி, அதற்குரிய கட்டணம் செலுத்தி சென்னையில் உள்ள நகரமைப்பு ஆணையரிடமிருந்து திட்ட அனுமதி பெற வேண்டும்.

நடவடிக்கை

திட்ட அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்படும். விதிகளை மீறிய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, இடிக்கப்பட்டதற்கு ஏற்பட்ட எல்லா செலவுகளையும் கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து திட்ட விதிமுறைகளின் படி வசூலிக்கப்படும்.

கோர்ட்டில் கட்டிட உரிமையாளர்கள் தொடந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும், திட்ட அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கலாம். மேலும் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தில் இருக்கக்கூடிய கட்டிட தளவாட சாமான்களையும் திட்டக் குழுமம் அபகரித்துக் கொள்ளும்.

மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் வீடு கட்டுவதற்கு என்று வரையறுக்கப்பட்ட இடங்களில் தொழிற்சாலை கட்ட வேண்டும் என்று கருதினால், அதற்குரிய திட்ட அனுமதி பெறுவதற்கு, உரிய ஆவணங்களுடன் உள்ளுர் திட்ட குழுமம் மூலமாக சென்னையில் உள்ள நகர ஊரமைப்பு ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் தமிழக அரசின் அரசாணையிலும் வெளியிடப்பட வேண்டும். ஆனால், இதற்கு சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். 4 ஆயிரம் சதுர அடிக்குள்ளாக கட்டிடம் கட்டுவதற்கு மாநகராட்சியிடம் இருந்து திட்ட அனுமதி பெறலாம்.

நோட்டீசு

தற்சமயம் திட்ட விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பைபாஸ் ரோட்டில் அமைந்திருக்கும் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கு முறைப்படியாக திட்ட அனுமதி பெற்று, அனுமதிக்கு புறம்பாக கட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு உள்ளூர் திட்டக்குழும உதவி இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர்(பொறுப்பு) ஜி.ஈசுவரன் கூறினார்.

கோரிக்கை

தொடர்ந்து உறுப்பினர் செயலர் ஈசுவரனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதில் உள்ளுர் திட்டக் குழும அனுமதி பெறுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படுகிறது. தேவையற்ற இடையூறுகள் ஏற்படுவதாகவும் தகவல் வருகின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், உள்ளுர் திட்டக் குழும அனுமதி பெறுவதற்கு கால நிர்ணயம் வரையறுக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எந்த விதமான இடையூறுகளும் விளைவிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 99 of 3988