Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

புதிய குடிநீர் திட்டங்கள் தயார் மாநகராட்சி அந்தஸ்திற்கு தயாராகிறது தஞ்சாவூர் நகராட்சி கூட்டத்தில் தகவல்

Print PDF

தினகரன்                03.02.2014

புதிய குடிநீர் திட்டங்கள் தயார் மாநகராட்சி அந்தஸ்திற்கு தயாராகிறது தஞ்சாவூர் நகராட்சி கூட்டத்தில் தகவல்

தஞ்சை, : தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாகும் போது அதற்கேற்ப குடிநீர் வசதி செய்து தரும் வகையில் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

தஞ்சை நகராட்சி கூட்டம் நேற்று தலைவர் சாவித்திரி கோபால் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக உறுப்பினர் சண்.ராமநாதன் பேசுகையில், குச்சி வரி ரூ.90, ரூ.100 என இருந்தது. தற்போது 6 மாதத்திற்கு ரூ.300 என உயர்த்தப்பட்டுள்ளது. எனது வார்டில் 100 குடும்பங்கள் இந்த குச்சி வரி செலுத்துகின்றனர். ஆனால் கணக்கில் நிலுவை காட்டப்படுகிறது. 51 வார்டுகளிலும் இப்பிரச்னை உள்ளது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கோடை காலம் நெருங்கி வருகிறது. மேலும் தஞ்சை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இதில் சேருகின்றன. ஏற்கனவே நகராட்சியில் குடிநீர் பிரச்னை உள்ள நிலையில், இவ்வூராட்சிகளையும் இணைக்கும்போது மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார். அதற்கு பதில் அளித்த ஆணையர் ரவிச்சந்திரன், தஞ்சை மாநகராட்சியில் 11 ஊராட்சிகள், 1 பேரூராட்சி இணைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி எல்லைகள் விரிவடையும் போது, பொதுமக்களின் தேவைக்கேற்ப குடிநீர் வசதி செய்து தருவதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான திட்ட பரிந்துரைகள் நகராட்சி நிர்வாக ஆணையகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

அதிமுக உறுப்பினர் அருளழகன் பேசுகையில், ஆதார் கார்டுக்கான விண்ணப்பங்களை மொத்தமாக நகராட்சி உறுப்பினர்களிடம் கொடுத்தால் நாங்கள் பொதுமக்களுக்கு விநியோகிப்போம். ஆனால் இங்கு வந்து வாங்கி கொள்ளும்படி கூறி விட்டு, பிறகு அவர்கள் வந்த பின் நகல் இல்லை என மக்களை அலைக்கழிக்கின்றனர் என்றார். திமுக உறுப்பினர் ஜெயலட்சுமி பேசுகையில், எனது வார்டில் பராமரிப்பின்றி உள்ள 3 கழிப்பறைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்றார்.

உறுப்பினர் ராஜேஸ்வரன், தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அருகில் உள்ள பகுதிகளை சேர்க்க தீர்மா னம் போடப்பட்டதற்கு பின்னர் மேலும் சேர்க்கப் பட உள்ள பகுதி எது? என்றார்.
இதற்கு ஆணையர், தஞ்சை மாநகராட்சியில் 11 ஊராட்சிகள், ஒரு பேரூ ராட்சி சேர்ப்பதற்கு ஏற்க னவே தீர்மானம் போட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள் ளது. எந்தெந்த ஊராட்சி சேர்க்கப்படும் என ஆய்வு செய்து, அப்பணிகள் முடிக்க குறைந்த பட்சம் இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்றார். தொடர்ந்து ராஜேஸ்வரன் பேசுகையில், தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள பாலத்தை விரிவுபடுத்த நகராட்சி மூலம் தீர்மானம் போடப்பட்டது. ஆனால் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் காணப்படுகிறது என்றார்.

இதற்கு தலைவர் சாவித்திரி கோபால், தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. தொல்லியல் துறையிலிருந்து முடிவு வந்த பின்னர் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து ராஜேஸ்வரன், நகராட்சி பகுதியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பணி முடிந்த பின் சாலையை யார் போட வேண்டும். அப்படி நகராட்சி நிர்வாகம் தான் போட வேண்டும் என்றால் உடனடியாக சாலையை போட்டு போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு ஆணையர், நகராட்சி நிர்வாகம் தான் அந்த பகுதிகளில் சாலை போட வேண்டும். அதன்படி சாலை போடப்படும் என்றார்.

திமுக உறுப்பினர் கார்த்திகேயன் பேசுகையில், கேபிள் பதிப்பிற்காக சாலைகளை தோண்டி அப்படியே போட்டு செல்கின்றனர். இதை சீர் செய்ய வேண்டும். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு கலையரங்கின் வலது புறத் தில் கடும் துர்நாற்றம் வீசுகிற க்ஷ்து. இதற்கு அருகில் பேருந்து நிலையத்தின் கழிவறையிலிருந்து இவ்வாறு துர்நாற்றம் வருகிறது. இதை சரி செய்ய வேண்டும் என்றார். திமுக உறுப்பினர் பாலசுப்பிரமணியன், எனது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவறைகளை புதிதாக கட்டித் தர வேண்டும் என்றார்.

அதிமுக உறுப்பினர் சாமிநாதன், மேலவீதி, வடக்கு வீதி பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. தற்போது இவ்வழியாக கும்பகோணம் நோக்கி செல்லும் பேருந்துகள் திருப்பி விடப்பட்டுள்ளன. பேருந்துகள் அதிக வேகமாக செல்கிறது. பள்ளி விட்டு வரும் மாணவ, மாணவிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகள் பேருந்து வரும் வேகத்தை பார்த்து தடுமாறி கீழே விழுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் இவ்வழியாக வரும் பேருந்துகளை பழையபடி பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று வருமாறு செய்ய வேண்டும் என்றார்.

அதிமுக உறுப்பினர் சரவணன் பேசுகையில், எனது வார்டில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. மாடுகளும் உலவி வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் நெடுஞ்சாலை ஓரம் கடைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.மாடு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் கனகராஜ் பேசும்போது, தஞ்சை நகரில் மாடுகள் இஷ்டம் போல் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்றார். இதற்கு நகராட்சி ஆணையர், தஞ்சை நகரில் யார்? யார் மாடு வைத்துள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 178 பேர் மாடு வைத்துள்ளனர். இவர்கள் மாடுகளை வெளியில் விடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மீறி மாடுகளை நகருக்குள் விட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

 

மழைநீர் ஆதாரத்தை பெருக்க ரூ.98.44லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார்

Print PDF

தினகரன்                03.02.2014

மழைநீர் ஆதாரத்தை பெருக்க ரூ.98.44லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார்

திண்டுக்கல், : திண்டுக்கல் நகரில் மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் குளங்களில் நீர் ஆதாரத்தை பெருக்க ரூ.98.44 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. நகரின் மொத்த பரப்பளவு 14.01 கி.மீ. ஆகும். கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2 லட்சத்து 7 ஆயித்து 225 பேர் வசித்து வருகின்றனர். கோபாலசமுத்திரகுளம், பி.குளம், மருதாணிகுளம், ராஜாகுளம், சுண்ணாம்பு குளம் என 9 குளங்கள் உள்ளன. செடி, கொடி வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டதால் குளங்களில் தண்ணீர் தேங்காமல் வெளியேறி சென்றது.

நகரில் போதிய மழையில்லாத காரணத்தால் நிலத்தடிநீர் வறண்டு விட்டது. ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நகரின் மக்களின் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை முற்றிலுமாக போக்க முடியாமல் உள்ளது.

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பொதுமக்களின் பங்களிப்புடன் நகராட்சி நிர்வாகம் பல லட்சம் ரூபாய் செலவில் பயன்பாடின்றி இருந்த கோபாலசமுத்திர குளத்தை சுத்தம் செய்து தூர் வாரி மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றியது. அதேபோல் திண்டுக்கல்-சிலுவத்தூர் ரோட்டில் உள்ள பி.குளத்தையும் சுத்தம் செய்து மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்து 9 குளங்களிலும் நீர் ஆதாரத்தை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 39.90 கி.மீ. தூரத்தில் பிரதான கால்வாய், 16.30 கி.மீ. தூரத்திற்கு துணை கால்வாய், தெருக்களில் 310.30 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் என மொத்தம் 340.30 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக ரூ.21.60 லட்சத்தில் பிரதான கால்வாய், ரூ.9.02 லட்சத்தில் துணை கால்வாய் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் தெருக்களில் ரூ.37.60 லட்சம் மதிப்பில் இரண்டாம் கட்டமாக கால்வாய் அமைக்கப்பட உள்ளது. மேற்பார்வை, பராமரிப்பு, கருவிகள் மற்றும் இதர செலவினங்கள் 30.22 லட்சம் என மொத்தம் 98.44 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் தலைவர் மருதராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மழைநீர் சேகரிப்புக்கான திட்டம் குறித்த செயல்விளக்க படம் ஒளி பரப்பப்பட்டது.

கூட்டத்தில் ஆணையர் குமார், பொறியாளர் கணேசன், நகர்நல அமைப்பு அலுவலர் பழனியப்பன், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நகராட்சி தலைவர் மருதராஜ் கூறுகையில், ரூ.98.44 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இது அரசு ஒப்புதலுக்கு அனுப்பி அனுமதி பெற்ற பின் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்படும் என்றார்.

 

தரமற்ற இறைச்சி விற்பனை: 11 கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி               03.02.2014

தரமற்ற இறைச்சி விற்பனை: 11 கடைகளுக்கு சீல்

சென்னையில் தரமற்ற இறைச்சி விற்ற 11 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி:

சென்னை மாதவரம் மண்டலத்தில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

அப்போது, இரட்டை ஏரியில் 3 கடைகள், மாதவரம் ரோஜா நகரில் ஒரு கடை, அடையாறு மண்டலம் இந்திரா நகர், சின்னமலை, வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டையில் 7 கடைகள் என மொத்தம் 11 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்தக் கடைகளுக்கு சீல் வைத்து பூட்டப்பட்டன.

அக்கடைகளில் இருந்து இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் எலியட்ஸ் கடற்கரையில் ஆய்வு செய்தபோது, அங்கு உபயோகிக்க தகுதியற்ற எண்ணெய், புகையிலை போன்றவை இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் 400 குடிநீர் பாக்கெட்டுகள், 50 குடிநீர் பாட்டில்கள், 5 லிட்டர் சமையல் எண்ணெய், 50 புகையிலை பாக்கெட்டுகள், 4 கிலோ 40 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

 


Page 107 of 3988