தினமணி 01.02.2014
அரசுப் பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
அரசுப் பள்ளிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என பூந்தமல்லி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பூந்தமல்லி நகராட்சி மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் திருமலை தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, துணைத்தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: நகராட்சிக்குள்பட்ட 3 அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆகியவற்றுக்கு ரூ.15 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதர வேண்டும்.தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் கட்டடம் அமைக்க வேண்டும்.
நகராட்சிப் பணியாளர்களின் தகவல் பரிமாற்றத்துக்கு ரூ.7 லட்சம் செலவில் வாக்கி டாக்கிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.