தினமணி 01.02.2014
பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம்: 25-ஆம் தேதிக்குள் மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக முதல்வரின் பிறந்த நாளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சென்னை மாநகராட்சி வழங்கும் ரூ. 10 ஆயிரத்தை பெற பிப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாள் வரும் பிப். 24-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு 66 வகையான முகாம்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்திருந்தார்.
இதில் முதல்வர் பிறந்த நாளில் பிறந்த மற்றும் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் வங்கியில் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கடந்த 2012, 2013-ஆம் ஆண்டுகளில் பிப்ரவரி 24-ஆம் தேதி பிறந்த பெண் குழந்தைகளுக்கும், வரும் 24-ஆம் தேதி பிறக்கும் பெண் குழந்தைகளுக்கும், அவர்களுடைய பெயரில் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். இந்தப் பரிசுத் தொகையை பெறுவதற்கு உரிய பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் பிப். 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் (குடும்பநலம்) துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.