Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மதுரையில் பிப். 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை

Print PDF

தினகரன்             01.02.2014

மதுரையில் பிப். 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை

மதுரை, :வைகை அணை நீர்மட்டம் சரிந்துள்ளதால் 3ம் தேதி முதல் மதுரை நகரில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குழாயில் குடிநீர் சப்ளை செய்யப்படும் என மாநகராட்சி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மதுரை நகரில் சப்ளையாகும் குடிநீருக்கும், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்ட நீரும் வைகை அணையில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 35.56 அடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 49.80 அடி இருந்தது. முல்லை பெரியாறு அணையில் 111.30 அடியாக குறைந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் 113 அடி இருந்தது. தற்போதைய நிலையில் பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட வை கைக்கு வந்து சேரவில்லை.

தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம்தான் ஆரம்பமாகும் நிலையில் தற்போதைய நிலவரப்படி வைகையில் ஏப்ரல், மே கோடை வரை குடிநீருக்கு இருப்பு இல்லை. அணை நீர்மட்டம் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால். இப்போதே குடி நீர் சப்ளை அளவு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தினமும் 60 கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்தது. இதை 40 கன அடியாக குறைத்துள்ளனர். வைகை ஆறு வறண்டு கிடப்பதால், அதிலுள்ள குடிநீர் திட்ட கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் அளவும் குறைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பா நிருபர்களிடம் கூறியதாவது:

மதுரை நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. வைகை அணையில் நீர் இருப்பு குறைந்து தற்போது 640 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது. இதை வைத்து மே இறுதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்க இயலாது. எனவே 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குழாயில் குடிநீர் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வழங்கினால் 90 நாட்களுக்கு சமாளிக்க வாய்ப்புள்ளது.

இதுதவிர மண்டலத்திற்கு 125 போர்வெல் வீதம் மொத்தம் 500 போர்வெல் அமைக்கப்பட உள்ளது. நகரை சுற்றிலும் 55 தனியார் கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்து சப்ளை செய்து கோடையை சமாளிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினார். ஆணையர் கிரண்குராலா, நகர பொறியாளர் மதுரம் உடன் இருந்தனர்.

பிப்ரவரி 3ம் தேதி (நாளை மறுநாள்) முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யும் திட்டத்தை அமலாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி தற்போது 2 நாட்களுக்கு ஒரு முறை குழாயில் வரும் குடிநீர் 4 நாட்களுக்கு ஒரு முறை தான் வரும். லாரிகள் மூலம் சப்ளை எத்தனை நாட்களுக்கு ஓரு முறை என்பது ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்.

மாநகராட்சியின் இந்த அபாய சங்கு, கோடைக்கு 2 மாதங்களுக்கு முன்பே குடிநீர் பஞ்சமா என மதுரை மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

 

மேலூர் நகராட்சியில் மின் கணக்கீட்டை எளிதாக்க ஏபிடிஆர் திட்டம் துவக்கம்

Print PDF

தினகரன்             01.02.2014

மேலூர் நகராட்சியில் மின் கணக்கீட்டை எளிதாக்க ஏபிடிஆர் திட்டம் துவக்கம்

மேலூர், :  மேலூர் நகராட்சியில் மின் கணக்கீட்டை எளிதாக்கும் வகையிலும், பழுது உள்ளிட்ட குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையிலும் ஏபிடிஆர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. நகராட்சி மின் இணைப்பின் எல்கை கிழக்கு அரசு கலைக் கல்லூரி, மேற்கு  ஆறுகண் பாலம், தெற்கு மில்கேட், வடக்கு நொண்டிக்கோவில்பட்டி வரை விரிந்துள்ளது. மின் உபயோகத்திற்கு பல டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் மூலம் மின் இணைப்புகள் கொடுக் கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் மின் உபயோகிப்பாளர் வீடுகளுக்கு சென்று கணக்கொடுத்து அதன் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதில் காலதாமதம் ஏற்படுவதுடன் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஏபிடிஆர் என்ற புதிய முறை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த முறையில், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஒவ்வொரு தெருவிலும் 9.14 அடி உயரம் உள்ள கம்பம் நடப்படுகிறது. அதில் சிறிய ரக டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு மின் வாரிய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். அந்த தெருவில் உள்ள மின் இணைப்புகள அனைத்தும் அந்த சிறிய டிரான்ஸ்பார்மரில் இணைக்கப்படும். உபயோகிப்பாளர் மின் அளவை அவ்வப்போது மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ‘‘மின் கணக்கீட்டாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று  மின் அளவை கணக்கிட்டு வந்தனர். தற்போது நடைமுறைப்படுத்த உள்ள புதிய முறையில் அலுவலகத்தில் இருந்து கொண்டே மின் உபயோகத்தை கணக்கிட முடியும். மேலும், மின் கட்டணம் குறித்து உபயோகிப்பாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மின் சப்ளையில் பழுது ஏற்பட்டால் எந்த மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து சரி செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.

தற்போது அலுவலகத்தில் இருந்தவாறு கம்ப்யூட்டர் மூலம் எந்த இடத்தில் என்ன பழுது ஏற்பட்டுள்ளது என்பதை எளிதாக கண்டறிந்து சரி செய்ய முடியும். இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றனர்.

 

புள்ளம்பாடி பேரூராட்சியில் வீடுவீடாக குப்பை தொட்டிகள் வழங்கல்

Print PDF

தினகரன்                31.01.2014

புள்ளம்பாடி பேரூராட்சியில் வீடுவீடாக குப்பை தொட்டிகள் வழங்கல்

லால்குடி, : புள்ளம் பாடி பேரூராட்சியில் வீடுவீடாக இலவச குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். 9, 10, 11, 12ம் வார்டுகளில் இலவச மக்கும் மற்றும் மக்காத குப்பை பக்கெட்டுகளை பேரூராட்சி தலைவர் ஜேக்கப் அருள்ராஜ் வழங்கினார். இளநிலை அலுவலர் பிரகந்தநாயகி, துப்புரவு மேற்பார்வையாளர் முருகேசன், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கல்லக்குடி பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் மோகன் தலைமை வகித்தார். ஒவ்வொரு வார்டுகளுக்கும் பெரிய குப்பை தொட்டிகளை தலைவர் வாலம்பாள் வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சின்னயன், இளநிலை அலுவலர் ஜவகர், வார்டு உறுப்பினர்கள், துப்புரவு மேற்பார்வையாளர் சொக்கர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 118 of 3988