Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ. 3.50 கோடியில் இணைப்புச் சாலை

Print PDF

தினமணி                30.01.2014

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ. 3.50 கோடியில் இணைப்புச் சாலை

திருநெல்வேலி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 50 அடி அகலத்தில் ரூ. 3.50 கோடி மதிப்பில் இணைப்புச் சாலை அமைக்கப்படுகிறது. இதன் முதல்கட்டப் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. பயண நேரமும் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி நகரம் பார்வதிசேஷ மஹால் ஆர்ச் அருகில் இருந்து குறுக்குத்துறையில் அருணகிரி திரையரங்கு வரை 900 மீட்டர் தொலைவில் 50 அகலமுள்ள இணைப்புச் சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து புதன்கிழமை அங்கு முதல் கட்டப்பணிகளை மேயர் (பொறுப்பு) பூ. ஜெகநாதன், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) கே.பி. ஜெயசேவியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் நாராயண்நாயர், மண்டலத் தலைவர்கள் கே. மாதவராமானுஜம், ந. மோகன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி எச்சரிக்கை: திருநெல்வேலி நகரில் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை வரை இணைப்புச்சாலை அமைக்க எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. ஆகவே நகரம் பகுதியில் கட்டட இடிபாடுகளை வீட்டின் உரிமையாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மேற்படி இணைப்புச் சாலைக்கு தேர்வு செய்யப்பட்ட தாழ்வான இடத்தில் கொட்டலாம். அதை தவிர்த்து சாலையோரமாகவோ, பொது இடங்களிலோ கொட்டினால் ஒரு லாரி லோடுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கே.பி. ஜெயசேவியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

"திருவாரூரில் ரூ. 9.93 கோடியில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்படும்'

Print PDF

தினமணி                30.01.2014

"திருவாரூரில் ரூ. 9.93 கோடியில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்படும்'

திருவாரூர் நகராட்சிப் பகுதிகளில் ரூ. 9.93 கோடியில் 37 புதி ய தார்ச் சாலைகள் அமைக்கப்படவுள்ளன என்றார் நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன். திருவாரூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நகரில் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க கேக்கரை, புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, புதுத்தெரு, கொடிக்கால்பாளையம் ஆகிய 10 இடங்களில் ரூ. 10 லட்சத்தில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி இணைப்புச் சாலை சின்னப்பள்ளி வாசல், கும்பகோணம் - திருவாரூர் துர்காலயா சாலை இணைப்புப் பகுதியில் ரூ. 8 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்படவுள்ளது.

 இதேபோல புதியப் பேருந்து நிலையத்தில் 24 பேருந்துள் நிற்கும் வகையில் இடம் அமைக்கப்பட்டு அப்பகுதிகளில் ரூ. 6 கோடி செலவில் சூரிய ஒளி மின்கம்பம் அமைக்கப்படும்.

சாதுசுப்பையா நகர், தென்றல் நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 9.93 கோடியில் மழை நீர் வடிகால் வசதியுடன் 37 புதிய தார் சாலைகள் அமைப்படவுள்ளன.

 நகராட்சிப் பகுதிக்குள் செயல்படும் 1 முதல் 5 வரையிலான நான்கு பள்ளிகள், 1 முதல் 8 வரையிலான இரண்டு பள்ளிகள், 6 முதல் எஸ்எஸ்எல்சி வகுப்பு வரையிலான ஒரு பள்ளி என 7 பள்ளிகளுக்கு புதியக் கட்டடம், கழிவறை, குடிநீர் வசதி அமைக்க ரூ. 60 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதை சாக்கடைப் பணிகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும்.

எனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் புதை சாக்கடை இணைப்புப் பணிக்கு பிப். 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

 

மாநகராட்சிப் பள்ளிகளில் சோலார் அமைப்பு நிறுவத் திட்டம்

Print PDF

தினமணி                30.01.2014

மாநகராட்சிப் பள்ளிகளில் சோலார் அமைப்பு நிறுவத் திட்டம்

திருச்சி மாநகரிலுள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சோலார் மின் அமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்றத்தின் கல்விக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வியாழக்கிழமை நடைபெறவுள்ள மாமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன.

 தீர்மானப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை விவரம்:

 அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகளை சுத்தப்படுத்தி அவற்றைப் பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கவும், பள்ளி வளாகத்தைப் பாதுகாக்கும் வகையில் தனியார் நிறுவனம் மூலம் காவலர்களை நியமிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 மாநகராட்சிப் பள்ளிகளின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சோலார் மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவவும், பள்ளிகளுக்கு தேவையான தளவாடப் பொருள்கள் மற்றும் நவீன கரும்பலகைகளை வாங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் (61 முதல் 65 வார்டுகள்) பள்ளிகளுக்கு மேயர், ஆணையர், துணை மேயர் மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அவற்றுக்கான அடிப்படைவசதிகள் செய்துத் தருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 பள்ளிகளில் போதுமான அளவுக்கு விளையாட்டு உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் வாங்கவும் முடிவு செய்யப்படுகிறது. பள்ளி வளாகங்களில் உள்ள இடவசதிக்கேற்ப பசுமைத் தளம் அமைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 இந்தப் பணிகளை மாநகரில் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் பல்வேறு வரிகளில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் கல்விநிதியில் இருந்து மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 


Page 126 of 3988