தினகரன் 30.01.2014
புது பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டண கழிப்பறைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
தேனி, : புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டண கழிப்பறைகள், வாகன காப்பகங்களை அமைக்க தேனி நகராட்சி நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தேனி பை-பாஸ் ரோட்டில் கடந்த 30ம் தேதி முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. ரூ.15.50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்டில் 67 கடைகள், 2 ஓட்டல்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், கட்டணக் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதிலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக அரசிடமிருந்து பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் தற்போது, காலியிடங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, தனியார் சிலர் இங்குள்ள காலியிடத்தில் வாகன காப்பகங்கள், கட்டண கழிப்பறைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் நகராட்சி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இது குறித்து நகராட்சி நிர்வாகம் ஆலோசனை செய்தது. இதன்படி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் கட்டணக் கழிப்பறை மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடங்களை அமைக்க நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்தது.
நிபந்தனைகள்: தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920ன் படி, பஸ் ஸ்டாண்ட் அருகில் சுமார் 100 மீட்டருக்குள் தனியார் யாரும் கட்டணக் கழிப்பறைகளையோ, இரு சக்கர வாகனங்களை நிறுத்துமிடங்களையோ அமைக்கக் கூடாது என தேனி-அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மீறி யாரேனும் கட்டணக் கழிப்பறை மற்றும் 2 சக்கர வாகனங்களை நிறத்துமிடங்களை நடத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.