தினமணி 29.01.2014
தேனி பழைய பஸ் நிலையத்தை மாற்று பயன்பாட்டுக்கு விட தீர்மானம்
தேனி நகராட்சி பழைய பஸ் நிலையத்தை மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் நிறுத்தமாக பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேனி அல்லிநகரம் நகர் மன்றக் கூட்டம் தலைவர் எஸ். முருகேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காசிமாயன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனியில் கடந்த 2013, டிச.30-ஆம் தேதி கர்னல் பென்னிகுயிக் நினைவு நகராட்சி புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்துக்கு வட்டார போக்குவரத்துத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏ பிரிவு அங்கீகாரம் வழங்கியுள்ளன.
தேனியில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த காமராஜர் நினைவு பழைய பஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்டிருந்த பி பிரிவு அங்கீகாரம் வரும் மார்ச் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் பழைய பஸ் நிலையத்துக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தை மார்ச் 28-ம் தேதியுடன் ரத்து செய்து நகராட்சி நிர்வாகத்துக்கு வட்டார போக்குவரத்துத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளன.
இந்த நிலையில், பழைய பஸ் நிலையத்தை மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் நிலையமாக பயன்படுத்த வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்புவதாக நகர்மன்றத் தலைவர் கூறினார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேனி புதிய பஸ் நிலைய அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டை, புதிய பஸ் நிலையத்தில் வைக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். புதிய பஸ் நிலையத்தில் கல்வெட்டு அமைக்கும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.